புதன், 31 மார்ச், 2010


தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனம்



ஒரு படைத்தலைவன் நுண்ணிய பகுப்பாய்வோடு செயல்பட வேண்டும். மந்த புத்தியுடைய படை வெற்றியடைய முடியாது. ஒரு படைத்தலைவனுக்குரிய ஆளுமை, ஆண்மை, அச்சமற்ற தன்மை, நெஞ்சுறுதி இவற்றையெல்லாம் தாண்டி முடிவெடுக்கும் திறனென்பது அடிப்படை பண்பாகும். எந்த நிலையிலும் தோல்வியென்பது படைத்தலைவனுக்கு தயக்கத்தை தரக்கூடாது.

அதேபோன்று வெற்றியென்பது மயக்கத்தையும் தரக்கூடாது. தோல்வியை பகுத்தாய்ந்து அதன் குறைகளை புரிந்துகொள்ளும் திறனும் வெற்றியை உள்வாங்கி அடுத்த நகர்வுக்கு அதை மாற்றியமைக்கும் அறிவும், படைத்தலைவர்களின் உளவியல் தன்மையாகும். வீழ்ந்தோம் என்பதை விட, நாம் வீழ்ந்தே கிடக்கவில்லை மீண்டும் எழுந்தோம் என்கிற உள்மனச் செய்தி படைத் தலைவனுக்கு உள்ளிருந்து இயக்கும் ஆற்றலாயிருக்கும். அப்போதுதான் அவன் தன்னுடைய எதிர் நலனையும், கடந்த நிகழ்வுகளையும் சமன் செய்து தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அதைப்போன்றே ஒரு படைத்தலைவனின் மனநிலையானது ஏற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும். ஒரு இழப்பை ஏற்றுக் கொள்ளும்போதுதான் புலம்பலிலிருந்து வெளிவர முடியும். இல்லையெனில் இழந்தோம் இழந்தோமென வருந்திக் கொண்டிருக்கிற மனநிலையால் தமது படையை தோல்வி நிலைக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடும்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ போராட்ட வரலற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மேற்கூறிய அனைத்து பண்புகளும், நமது தேசிய தலைவரிடம் குவிந்து கிடப்பதை காணமுடியும். தமிழீழ போராட்டத்திற்கு முதல் களபலியான சங்கர் தொடங்கி தொடர்ந்து 30,000 மாவீரர்களை பலியாக்கிய பின்னும், தமிழீழ கனவிலிருந்து அவர் ஒரு துளியளவு கூட தமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் பிறகுதான் ஒரு வல்லாதிக்க நாட்டிடம் இருப்பதைவிட மிகுந்த ஆற்றலும், லட்சியமும் நிறைந்த படையணிகளைக் கட்டியமைத்தார். லெப் சார்லஸ் அந்தோணி சிறப்புப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள் மேஜர் சோதியா படையணி, இரண்டாம் லெப் மாலதி படையணி, லெப் கேனல் குட்டிசிறி படையணி, கேப்டன் ஜெயந்தன் படையணி, பொதுப்போராளிகள் தமிழ்தேசிய துணைப்படை லெப் கேனல் விக்ரம் படையணி, கரும்புலிகள் அணி, இப்படி நீண்டு கொண்டே போகிறது அவர் கட்டியமைத்த படையணிகள். இப்படைப் பிரிவில் பங்காற்றிய புலிகள் நமது தேசிய தலைவரின் மனங்களுக்கு ஒத்திருந்தார்.

இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தார். கரும்புலிகளில் உயிர்கொடையாளர்கள் தமக்கான ஒரு நாடுகிடைக்க தமது உயிரை இன்முகத்தோடு அர்ப்பணித்தார்கள். உயிரிழப்பிற்கான தயக்கவுணர்வோ, உயிர் வாழ்வதற்கான விருப்பமோ, அவர்களுக்கு இருந்தது கிடையாது. இட்லரின் அடக்குமுறையில் சிக்கி சிறையிலே சித்ரவதைப்பட்டு தூக்குமேடையேறிய ஜூலியஸ் பூஸிக் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

""அடக்குமுறை இல்லாத விடுதலையுடன் கூடிய ஒரு நாட்டை நாங்கள் காணமாட்டோம் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் கூட எங்கள் இன்னுயிரை நாங்கள் தருவதற்கு தயாராய் இருப்பதற்கு காரணம் எங்கள் எதிர்கால சந்ததியர் மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதற்காகத்தான்.`` ஆக இந்தக் குறியீட்டின்படியே தமது உயிரை பணயமாக தருவதற்கு காரணம் எதிர்காலத்தில் எமது இனத்திற்கான ஒரு நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதைவிட மேலாக அப்படிப்பட்ட ஒரு நாடு தேவையென அந்த உயிர் கொடையாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த உணர்விற்கு உரமிட்டவர் நமது தேசிய தலைவர். தமது எதிர்காலம் குறித்த தன்னலம் சாராத இனநலனுக்கான அர்ப்பணிப்பு என்பது அவசியத்தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தால் இப்படிப்பட்ட தீரம் நிறைந்த உயிர் கொடையாளர் படையைக் கட்டியமைத்தார்.

தமிழீழ மண்ணெங்கும் மாவீரர் துயிலும் இடத்தை மிக நேர்த்தியாகக் கட்டியமைத்தார். அந்த வீர வித்துக்களுக்கு அவர் செலுத்திய மரியாதை என்பதைவிட அந்த வித்துக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பை இது வெளிக்காட்டுகிறது. அந்த மாவீரர்களின் கல்லறைக்கருகே மெதுவாக உங்கள் பாதங்களை வையுங்கள். இங்கே மாவீரர்கள் துயில்கிறார்கள் என்ற வார்த்தையின் மூலம் தமிழீழத்தைக் கட்டியமைக்கும் மூலைக்கல்லாய் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள் எமது போராளிகள் என அவர் அறிவித்ததின் ஆழத்தை நாம் கூர்ந்துப் பார்த்தால் அந்த மண்ணையும் மக்களையும் எந்த அளவிற்கு தேசிய தலைவர் நேசித்தாம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில்தான் ஒரு தலைவன் தமது படையணியை நடத்திய நிலை தெளிவாக்கப்படுகிறது. மார்க்சிய ஆசான் தோழர் மா.ஓ.சொல்வதைப் போல மந்தயுத்தியுடைய படை வெற்றி பெறாது என்பதை எமது தலைவர் உணர்ந்திருந்த காரணத்தினால் தான் வெறும் போராளிகளாக மட்டும் புலிகளைப் படைத்தளிக்காமல் அவர்களை அறிவாளிகளாக வடிவமைத்தார். ஆகையால்தான் உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தமது அறிவாயுதங்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எதிர்கால திட்டம் குறித்து அவர் மிக கவனமாக சீர்தூக்கிப் பார்த்தார். இப்போது இலங்கையிலே நடைபெற்று முடிந்த தேர்தல் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என பல அரசியல் ஆய்வார்களும், ஊடகவியல் வல்லுனர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நமது தேசியத் தலைவர் இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பினார். அவர் சொல்கிறார், ""எமது பிரச்சனைக்குத் தீர்வு காண ஆளுங்கட்சி தீர்மானிப்பதும், எதிர்கட்சி எதிர்ப்பதும், பின்பு எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும், அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக அதே பணியில் கடந்த 50 வருடங்களாக மேடையேறி வருகிறது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிப் பீடமேறும் இரு பெறும் சிங்கள அரசியல் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இவைதான் நாடகத்தின் கதாநாயகர்கள். காலத்திற்கு காலம் மாறியபோதும், கதையில் கரு மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.`` சிந்தித்துப்பாருங்கள். இன்று ஊடகங்களில் வரும் செய்திகள் நம்மை எல்லையில்லா வியப்பிற்கே அழைத்துச் செல்கிறது. சரத் பொன்சேகா ஒரு காலத்தில் ராஜபக்சேவின் கைத்தடியாக செயல்பட்டவர். இன்று வரும் செய்திகளில் சரத்பொன்சேகா ராஜபக்சேவை கொலை செய்ய முயற்சித்ததாகவும், குடும்பத்தோடு அழிக்க முற்பட்டதாகவும் புதுப்புது குற்றச்சாட்டுகள் ராஜபக்சேவின் கூடாரத்திலிருந்து வெளிவருகிறது.

சரத்பொன்சேகாவோ, தம்மை கைது செய்வதற்கு ராஜபக்சே திட்டமிடுவதாகவும், 1000 ராணுவ வீரர்களை வைத்து தம்மை முடக்குவதாகவும், தமிழர்களைக் கருவறுத்த அந்த பாரிய சமரில் நடந்த உண்மைகளை சொல்லப் போவதாகவும், தமது ஆதரவாளர்களை மிரட்டி கைது செய்வதாகவும் உலறலோடு கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரங்கோர்த்து தமிழர்களை கருவறுத்த இந்த சண்டாளர்கள் இன்று எதிரெதிர் முகாம்களில் நீங்கள் மீண்டும் நமது தேசிய தலைவர் கூறியதை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். இலங்கையின் கேவலமான அரசியலை எத்துணை தீர்க்கத்தரிசனமாய் எடுத்துக் கூறியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்.

அப்படிப்பட்ட தலைவர் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தமது பன்னாட்டுக் கூட்டாளிகளோடு இணைந்து நெருங்குகிறது என்று தெரிந்தவுடன் ஒரே நாளில் கிளிநொச்சி நகரத்தையே துடைத்தெடுத்துச் சென்ற அவருக்கு முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்படுவோமென்பது தெரியாதா? இந்த அப்பாவி மக்களைக் கொன்ற வெற்றியை இயக்கத்திற்கெதிரான வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே போன்றோருக்கு விளக்கிச் சொல்லும் தருணம் இப்போது வந்திருக்கிறது. எமது தலைமையின் தீர்க்கத் தரிசனத்தை சிங்கள இனவெறி கூட்டத்திற்கு புரிய வைக்கும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. இது செயலாற்றும் நேரம்.

முன்னைக் காட்டிலும் வேகமாக, விவேகமாக, நமது நகர்வு அமைய வேண்டும் முதற்கட்டமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழீழ தனியரசுதான் என்கிற தமது நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இது வெற்றிக்கான நகர்வின் முதல்கட்டம் நமது தலைவரின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தது எனவும், கிடைக்கவில்லை எனவும் சிதம்பரம் கூட்டம் மாறி மாறிச் சொல்கிறதே, இது அடுத்த வெற்றி. தமிழீழ அரசு அமைவதற்கான அனைத்து அடிப்படைக்கும், தெளிவாகிவிட்டது. இதை நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தீர்க்கதரிசனமாய் உணர்ந்திருந்தார்.

வல்லரசுகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்ட ஈழத்தமிழின விடுதலைப்போராட்டம்

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.

இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல.

இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி.

அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.


ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும்.

வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது?

இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம்.

‘எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்’.
‘எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை’.


அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் ‘இல்மனைட்’ கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம்.

விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக ‘பெரியண்ணன்’ இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் ‘அசோகா விடுதியில்’ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார்.

”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது….”

2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.

இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம்”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்.”

என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான்.

இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் ‘இராஜதந்திரம்’ என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள்.

இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின.

இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது.

உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. ‘மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும்.

இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்ச்சியாக இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்’ இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு ‘வாராது போல்வந்த மாமணி’ச் சூழ்நிலை இது.

”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது’ என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும்.

இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை.

சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது.

சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம்.

சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது.

உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார்.

இதில் ‘தங்களின் நலன்’ என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது.

இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது.


2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது.

இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான்.

ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை

”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே”
”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது”
”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை”
”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு”

மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது.

நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும்.

அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா?

அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் ‘உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ’ என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா?

அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது.

இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம்.

பிரபாகரன் – பொட்டு அம்மான்; இன்டர்போல் தரும் இனிப்பு செய்தி


பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்துவிட்டன இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.

சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையை இங்கே தருகிறோம்.

சமீபத்தில் நாம் வைகோவைச் சந்தித்த போது அவர் கூறிய சில தகவல்களும், இந்த கட்டுரையில் உள்ள சில செய்திகளும் ஒத்துப்போவதை உணர முடிந்தது. வைகோவிடம் நாம் பேசியது பற்றி தனியாகத் தருகிறோம். இனி ஜூவி கட்டுரை…

பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!” – இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல… இண்டர்போல் போலீஸ்!

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இதற் கிடையில்,

”பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை… தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்… கைது வாரன்ட்: சென்னை, இந்தியா…” என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட… ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.

இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ”கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!” என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம்.

”ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார்.

அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது.

அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!” எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

”புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்… அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், ‘சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!’ என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்” என்றார்கள்.

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்… அதில், ”நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

”போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்” என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

”புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?” என்று இவர்களிடம் கேட்டால்… ”எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்… இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!” என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்!

போராட வேண்டிய நேரமிது


இந்த நவீன உலகத்தின் பூகோள அரசியலில் சிக்குண்டு, சர்வதேச BIG Brothers என்று அழைக்கப்படும் வலிமை நாடுகளின் பனிப்போரில் சிக்குண்டு இன்று எமது மக்கள் உரிமையற்று நிற்கின்றார்கள். ஏப்பிரல் 2009 பன்னாட்டு இராணுவ அதிகாரிகள் வல்லுனர்கள் போர்கள முன்னரங்கில் நின்றார்கள் .

அவர்கள் ஏன் அங்கு போனார்கள் என்பது ஓரு கேள்வி? சனவரி 2009 முதல் மே 2009 வரை சிறீலங்கா இராணுவ வெறித்தாக்குதலில் சிக்குண்டு, இறந்த உறவுகளை இருந்த இடத்திலேயே புதைத்துவிட்டோ, அப்படியே விட்டுவிட்டோ, எமது மக்கள் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

அந்த இடப்பெயர்வு 50ஆயிரத்திற்கு மேற்பட்ட எம் மக்களை பலியெடுத்து மே 19ல் முள்ளிவாய்க்காலில் அகோர இன அழிப்பிற்கு பின் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே 15ம் திகதி எமது போராளிகள் தமது ஆயுதம் மௌனிக்கப்பட்டு விட்டது என்று கூறிய பிறகும் சிறீலங்கா அரசு குண்டுகளை மழைபோல கொட்டி எமது நிலங்களை சுடுகாடாய் மாற்றியது.அங்கே விட்டு விட்டு வந்த உறவுகளின் உடல்களை மீண்டும் சென்று எடுத்து அடக்கம் செய்யவோ, இறுதி மரியாதை செய்யவோ எம்மால் முடியவில்லை.

வன்னி பிரதேசம் வெளிஉலகிற்கு மூடப்பட்ட சூனியப்பிரதேசமாக இருக்கின்றது. அங்கே இறந்த எமது உறவுகளை பற்றி எவரும் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள். சிறீலங்காவைச்சுற்றி உலகப்பலம்வாய்ந்த நாடுகள் ஒரு பனிப்போரை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் தமது இருப்பைக்காக்கத் தமிழ்தேசியத்தை விலைபேசிக்கொண்டிருக்கின்றார்கள். இன்று அந்த மக்களின் விடுதலை எம் கையில் தரப்பட்டுள்ளது. இதனால் வரை 37,000 வரையிலான மாவீரர்கள் தமிழீழக்கனவுகளை சுமந்து தம் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

இந்த மக்கள் சிங்கள மக்களை வெறுத்தவர்கள் அல்ல, தம் இனத்தை ஆழமாக நேசித்தார்கள். மதவெறிப்போராட்டம் அவர்கள் செய்யவில்லை. இந்த மாவீரர்கள், தமது மக்களையும், எதிர்கால சந்ததியையும் நினைத்து தமிழீழம் என்ற சுதந்திர தேசத்தில் உரிமையுடன், அமைதியும், சுதந்திரமுமிக்க வாழ்வு வாழ்வார்கள் என்பதற்காக தியாகங்களைச் செய்தார்கள்.

தமிழ் மண்ணிற்கு தமது உயிரையும், செங்குருதியையும் தந்தார்கள்."மனித வாழ்வில் சுதந்திரம் உன்னதமானது, மானிட நற்பேறுகளில் தலைசிறந்தது. மனித வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் ஆதாரமானது. சுதந்திரம் தான் மனிதவாழ்விற்கு அர்த்தத்தை கொடுக்கின்றது. முழுமையைக்கொடுக்கின்றது.

மனித ஆத்மாவின் ஆழமான, அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது என்று சொன்னார் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்.போராட்டம் ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அடுத்த தலைமுறையினர் புலத்தில் இரவு பகலாக இந்த உலகிற்கு தாயகத்தில் நடந்து கொண்டிருந்த படுகொலைகளை நிறுத்த போராடி கொண்டிருதார்கள்;

உண்ணாவிரதம் இருந்தார்கள், மூத்த தலைமுறையினர் எல்லோருக்கும் இதை பார்த்து ஒரு நம்பிக்கை பிறந்தது. எமது இளைய சமுதாயம் எமது போராட்டத்தைக் கொண்டு செல்லும் என்ற பெருநம்பிக்கையை மக்கள் அவர்கள் மேல்வைத்தார்கள்.

மே 21 க்கு பின் அவர்கள் எவரையும் காணவில்லை? தமது குழந்தைகளுடன் வந்து நின்ற பெற்றோர்களையும் காணவில்லை? என்ன நடந்தது? அங்கே ஆயுதப்போராட்டம் மௌனமாக்கப்பட்ட போது, எமது மக்களும் தமது பலத்தை இழந்து விட்டார்களா? ஆயுத பலத்தை மட்டுமே நம்பி எமது வீரர்கள் போராடவில்லை, அவர்களிடம் மனோ பலம் அதிகமாக இருந்த படியால்தான் நின்று போராடினார்கள், அவர்களுடன் மக்களும் இருந்தார்கள் அந்த மனேபலத்துடன் தான் நாமும் இரவு பகலாக புலத்திலும் போராடினோம்.இன்று இந்த உலகப்பனிப்போரில் எமது விடுதலை ஒரு கருவியாக்கப்பட்டுள்ளது.

உலக மயமாக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாம்தான் பங்காளிகள். தருணத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டியது நாங்கள். இன்று போராட்டம் எம் கையில், அங்கு சூழல்மாறும் அதுவரை உலக மயமாக்கப்பட்ட போராட்டத்தை முன்னோக்கி போர்க்குற்றங்கள், இனப்படுகொலையை வலியுறுத்துவதும், சிறீலங்காவுக்கெதிரான பொருளாதார புறக்கணிப்புக்கள், சர்வதேசபீடங்களிலிருந்து அழுத்தங்கள் என்று பல வகையான ஐனநாயக வழி ஆயுதங்கள் எம்மிடம் நிறையவே இருக்கின்றன.

எம் மண்ணின் மாவீரர்கள், மக்களின் ஆத்மாக்கள் அமைதி பெறுவதென்றால் நாம் போராடவேண்டும். அங்கே எமது மக்கள் தம் உயிர்களை வித்தாக நிலத்தில் விதைத்திருக்கின்றார்கள். அந்த வித்துக்கள் தமிழீழம் என்ற பெரும் விருட்சமாக மலரும் மட்டும் ஆவலாக அங்கேயே இருப்பார்கள். எங்கள் போராட்டம் வெற்றி பெற நாட்கள் ஆகலாம். தலைமுறைகள் தாண்டிக்கூட போகலாம், ஆனால் அந்த மாவீரர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நிராக வீணாகிப்போய்விட நாம் அனுமதிக்க முடியாது. போராட்டம் என்பது ஒரு தனிமனித முயற்சியல்ல.

அது ஒரு கூட்டு முயற்சி அங்கு எமது விடுதலைக்காய் போராடும் போது அதற்குரிய அரசியல் மேடையை வகுக்க நாம் போராடவில்லை. சந்தர்ப்பங்கள் பலதை கைநளுவ விட்டோம். இனியும் நாம் அதை செய்ய முடியாது. இன்று சனநாயகப்பலம் எம் கையில் அதை பயன்படுத்திக் கொள்வோம். எமது தலைவர் தனது மாவீரர்நாள் உரையில் கூறினார் " எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது.உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம். நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனை இடர்வரினும் எத்தனை துயர்வரினும் நாம் எமது விடுதலையை நோக்கிய பயணத்தை தொடருவோம். எமது இலட்சியப் பயணத்தில் எத்தனையே சவால்களை, ஆபத்துக்களை நெருக்கடிகளை நாம் சந்தித்து விட்டோம்.இனி எம்மை எதுவும், எவரும் அச்சுறுத்த முடியாது. நாம் துணிந்து போராடுவோம். வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது சத்தியம் எமக்கு சாட்சியாக நிற்கிறது" என்றார்.

இன்று எம்மிடம் நியாயத்தின் சாட்சியங்கள் நிறையவே இருக்கிறது. அயர்லாந்தில் நடந்த Peoples Tribunal ( மக்களின் நீதிமன்றத்தில்) அந்த சாட்சியங்கள் பேச தொடங்கி விட்டது. போராட்ட வலு இன்று மிக அதிகமாக நிற்கிறது. நாடுகளை அணைத்துக்கொண்டு போக பலவழிகளும் இருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் மரணத்துக்கு நியாயம் கேட்க சிறையில் வாடும் எமது மக்களினை மீட்க, உலக நீதிமன்றத்தில் நியாயம் கேட்க இனப்படுகொலையை விசாரணையை வலியுறுத்த எமது தாயகத் தமிழீழத்தை பெற்றிட நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

இது எங்கள் நேரம்

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு




இந்தியாவைக் கையாண்ட தேசியத் தலைவர்


இந்தியாவை நாம் சரியாகக் கையாளவேண்டும் என்றால் இந்தியாவின் காலில் விழவேண்டும் என்று அர்த்தப்படக்கூடாது. ஒருவனைக் கையாளவேண்டும் என்றால், அவனது காலில்தான் விழவேண்டும் என்பதில்லை. ஒருவனை எமக்குத் தோதாக handle பண்ணுவதைத்தான் “கையாளுவது” என்பது.

ஒருவனைக் கையாளுவதற்கு பல வழிகள் உண்டு. கையாளுவது என்ற சொற்பதத்திற்கு பல்வேறு வியாக்கியானங்களும் உண்டு.

உதாரணத்திற்கு, ஈழத் தமிழர் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற தமிழ் அமைப்புக்களை இந்தியா தனது நலனுக்காக சரியாகக் கையாண்டது. அதற்காக இந்த அமைப்புக்களின் கால்களில் இந்தியா விழுந்தது என்று அர்த்தமாகாது.

விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை தேசம் கருணாவையும் டக்ளஸையும் சரியாகக் கையாண்டு வெற்றிகண்டது. அதற்காக இவர்கள் இருவரது கால்களிலும் சிங்களதேசம் விழுந்ததாக அர்த்தம்கொள்ள முடியாது.

ஒரு இலக்கினை நாம் அடைவதற்காக, அந்த இலக்கிற்குத் தடையாக இருக்கும் ஒரு தரப்பை சமாளிப்பதும், அந்த இலக்கை நாம் அடைவதற்கு அந்தத் தரப்பை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையுமே கையாளுவது என்று கூறுவது. இதேபோன்று, அந்த இலங்கை அடைவதற்கான கால அவகாசத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் நோக்குடனும் அந்தத் தரைப்பை நாம் கையாள முடியும்.

இதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவைக் கையாண்ட ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.

1987ம் ஆண்டு ஒரு நெருக்கடியான கட்டத்தை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த போது, தம்மைச் சுதாரித்துக்கொள்ளும் ஒரு கால அவசகாசத்தை பெற்றுக்கொள்ளும்படியாக, விடுதலைப் புலிகள் இந்தியாவை திறமையாகக் கையாண்டிருந்தார்கள்.

அந்தச் சரித்திரச் சம்பவத்தை இப்பொழுது பார்ப்போம்.

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது

இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.

புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா’ ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.

24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.

புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்’ என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.

வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.

இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்’ என்று அழைக்கப்பட்டவரும், தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.

அஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,

அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.

திரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, ‘திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.

இந்தியாவால் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவால் முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று புலிகள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், புலிகளின் தலைவரது சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புலிகளது சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்” -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:

எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.

மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.

திரு.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.

அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.

இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் புலிகளின் தலைவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழப்பாணம் திரும்பினார்.

அதாவது இந்தியா மீது விடுதலைப் புலிகள் முற்றாகவே நம்பிக்கை இழந்த நிலையில், இந்தியா மீது விடுதலைப் புலிகள் மிக மோசமாகப் பகை கொண்ட நிலையில், இந்தியாவை நம்பி இனிப் போராட்டம் நடாத்துவதில்லை என்று புலிகளின் தலைமை நிலைப்பாடு எடுத்த நிலையில், இந்தியா ஆயுதக்களைவு செய்ய முற்படும்பொழுது இந்தியப்படைகளுடன் மோதுவதென்று புலிகள் தீர்மானம் எடுத்தபின்பு, இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை முடிவுசெய்த பின்னர்தான், இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் பலிகளின் தலைமை சுதுமலைப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், இந்தியாப் படைகளுடன் மோதுவதற்கு முடிவெடுத்த நிலையில், சுதுமலைப் பிரகடனம் ஊடாக திரு.பிரபாகரன் இந்தியாவை சிறிது காலத்திற்கு கையாள முயன்றார் என்பதைத்தான் நாம் இங்கு கவனகத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

திடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செய்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.

திலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.

இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் புலிகளின் தலைமை மேற்கொண்ட சுதுமலைப் பிரகடனத்தின் பரிமாணம் இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதனைத்தான் இராஜதந்திரம் என்பது.

இதனைத்தான் ஈழத்தமிழர்களின் தலைமை இந்தியா விடயத்தில் செய்யவேண்டும் என்று நான் கூறுகின்றேன்.



மாவீரர் நினைவு நாள் கொண்டாடுவது ஏன்?

மாவீரர் நினைவு நாள் என்பதைச் சிலர் பிரபாகரனின் பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் மாவீரர் நினைவு நாளை கடைப்பிடிக்க பிரபாகரன் உத்தரவிட்டதற்கான காரணம் என்ன?

அதன் பின்னணியில் மறைந்துள்ள தமிழ் மாவீரர்களின் தியாக வரலாறு போன்றவற்றை ‘தினமணி’யில் வெளியாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட தொடரில் பாவைச் சந்திரன் சிறப்பாக விளக்கியுள்ளார்.

leader_20081127003

அந்தக் கட்டுரை:

தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று.

“உண்மையில் பிரபாகரன் எப்போதுமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை’ என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம் சிவக்கிறது பக்-271).

உண்மையில் நடந்ததென்ன?

1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல், மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும். இந்த நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த லெப்டினன்ட் கர்னல்கள் விக்டர் ஓஸ்கா, பொன்னம்மான், இராதா, திலீபன், புலேந்திரன், குமரப்பா, சந்தோஷம், பாண்டியன், இம்ரான், ஜானி, மதி, நவம், ரீகன், கிரேஸி போர்க், சுபன், வேணு, சஹா, சூட்டி, ஜாய், குட்டிஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நினைவில் வாழும் புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மணலாற்றுக் காட்டில் பதுங்கியிருந்து போரை நடத்தியபோது பிரபாகரன், இந்த முடிவினை மேற்கொண்டார். இந்த முடிவினைத் தமிழீழமெங்கும் நிறைவேற்றவும் ஆணையிட்டார்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பழ.நெடுமாறனிடம் விவரிக்கையில், இந்திய ராணுவத்துடன் நாங்கள் நடத்திய போரில் எந்த இடத்தில் எங்கள் தோழர்கள் விழுந்தார்களோ, அவர்களை அங்கேயே புதைத்து கல்லறை எழுப்பியிருக்கிறோம். போர்க் காலத்தில் அவர்களின் உடல்களைப் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க முடியாது போனதால், ஏற்பட்ட முடிவல்ல; இறந்த மாவீரர்களின் விருப்பமும் இதுவே ஆகும்.

இந்திய அமைதிப் படையை எதிர்த்து நடத்திய “ஓயாத அலைகள்’ என்கிற போரில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த காடே ஆகும். இந்தக் காட்டினை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். எங்கள் தோழர்களுக்கு எந்தக் காடு அடைக்கலம் தந்ததோ, எந்தக் காட்டில் எதிரிகளுடன் போரிட்டு வீரத்தை நிலைநிறுத்தினோமோ, அந்தக் காட்டிலேதான் எங்களைப் புதைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் வியப்பு ஏதுமில்லை. மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய புலிகள் தாங்கள் எங்கே சென்று போராடி வீரமரணம் அடைந்தாலும் தங்கள் உடலை மணலாற்றுக் காடுகளில்தான் புதைக்க வேண்டும் என்று நேரிலும், எழுத்துமூலமாகவும் எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.maveerar thuyilidam

இதுதவிர தமிழீழத்தின் பிற பகுதிகளிலும் மாவீரர்கள் கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைக்கு “மாவீரர் துயிலும் இடங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளன.

மறைந்த தன்னுடைய தோழர்கள் குறித்து வே.பிரபாகரன் கூறியதாக பழ.நெடுமாறன் பதிவு செய்துள்ள வரிகள் ஒவ்வொன்றும் பல்வேறு அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றன. அவை:

எமது விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள்.

இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்துக்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.

எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். (தமிழீழம் சிவக்கிறது -பக்.277-278).

talivar

முதன்முதலாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தில் கலந்துகொள்ளவென்று பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி மூவரும் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு நகரத்துக்கு கொழும்பிலிருந்து சென்றார்கள். அங்கிருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்குக் கார் மூலம் சென்றனர்.

மக்கள் அமைதிப்படையின் பிடியிலிருந்து விடுபட்டிருந்த நேரம். வழியெங்கும் மக்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கும் புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறந்தன. குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய இவர்களுக்கு இரட்டிப்பு நேரம் பிடித்ததாகவும், கூட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்ததாகவும் அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நினைவு நாளில், அதாவது 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அடித்ததும், மாவீரர் துயிலும் இடங்களில் கூடி, தளபதிகள் முதல் சுடரை ஏற்ற, மணியோசை முழங்கும். அடுத்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், தோழர்கள் என கல்லறைக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்குவார்கள். இது பின்னர் ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நாளுக்கு அடுத்த நாள் நவம்பர் 28-ஆம் நாள், விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்புலி அனிதாவுக்கு வீர அஞ்சலி வெளியிடப்பட்டது.

வன்னி, மன்னார், யாழ்ப் பிராந்தியங்களில் புலிகளுக்குத் தேவையான உணவு-பொருள்கள்-தளவாடங்கள் சேர்ப்பது என்பது எளிது. தமிழீழத்தின் நிலப்பரப்பில் இரண்டாயிரம் சதுர மைலில் பெரும்பகுதி, தமிழீழத்தில் எல்லை மாவட்டங்களாக கிழக்குப் பிராந்தியத்தைச் சார்ந்ததாகும். இங்கே சிங்களக் குடிகள் மட்டுமன்றி, போலீஸ், ராணுவம் சார்ந்த முகாம்களும் எண்ணிலடங்காத அளவில் உள்ளன.

இத்தகைய சூழலில் புலிகளுக்கு உணவு சேகரிப்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது. சிறிதளவு கவனக்குறைவும் ஏற்பட்டாலும் கொரில்லாப் புலிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிடும்.

இந்தக் கத்திமேல் நடக்கிற வித்தையை லெப்டினன்ட் அனிதா மேற்கொண்டு வந்தார். அசாத்திய நிர்வாகத் திறமைகள் மிகுந்த இவர், ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதாயிரம் முஸ்லிம்கள், இரண்டு லட்சத்து எண்பதாயிரம் தமிழர்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிவந்த அனிதா 28-11-1988 அன்று

ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரால் அடையாளம் காட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, உயிருடன் இருக்கக்கூடாது என்ற முடிவில் சயனைட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இவரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் கொரில்லா வீராங்கனை அனிதா ஆவார். அனிதா உள்பட வீரமரணத்தைத் தழுவிய பெண்புலிகளின் எண்ணிக்கை 23 என்றும் அவ்வறிக்கையில் (28-11-1989) குறிப்பிடப்பட்டிருந்தது.

செவ்வாய், 30 மார்ச், 2010

அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து.....
இலக்கம் 109,
இடதுகரை வாய்க்கால்,
இரணைப்பாலை,
வன்னிப் பெருநிலப்பரப்பு,
தமிழீழம்.
மாசி 21, 2009.

அன்புள்ள அப்பாவுக்கு!

வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.

பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.

கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.

அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய 'கிளைமோர்'த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் 'கிளைமோர்'த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.

அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்.

அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.

ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.

இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!

அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்.... கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!

அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.

பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.

அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.

இருபதாண்டுகள் முன், 'அன்பு வழி' யில் 'பூமாலை'யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?

அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?

அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?

எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?

அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.

அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை.... இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.

பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது 'கிபிர்' தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.

அதுவும் அம்மாவிடம் 'நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்'!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.

இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.

பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

இனியென்ன, சந்தேகமே வேண்டாம்... அஞ்சி அஞ்சி... அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!

சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!

பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.

அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் "மகளிர் எழுச்சி நாள்" முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்.

இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?

என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.

அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?

அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.

எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ.

உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.

இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.

அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .

இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது.

அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்'' என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.

அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.

எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?

மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளுக்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.

வேறென்ன அப்பா?
இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. 'இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற பாட்டுக் கேட்கிறது.

அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.
நன்றி.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
இப்படிக்கு,
என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற
அன்பு மகள் தேவகி







சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.



தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்

லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.



அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது?

If we don’t fight for our freedom who else will?

வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.

ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் 'ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.'

'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.

அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.



ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்
தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.


கரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில்

கரும்புலி லெப்.கேணல்மாறன்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்




மேஜர் மலர்ச்செம்மல்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
Posted by defencetamil at 2:38 PM

Labels: கரும்புலிகள், மாவீரர்கள்

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Blog Archive
▼ 2009 (55)
▼ March (26)
விடுதலைப்புலிகளின் ஆழஊடுவும் அணியின் அதிரடித்தாக்க...
வீரச்சாவைத் தழுவிய போராளிகள்
வீரச்சாவைத் தழுவிய போராளிகள்
கேணல் இளங்கீரன் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்ப...
தலைவர் பிரபாகரன் தொடர் 6
தலைவர் பிரபாகரன் தொடர் 5
வீரச்சாவைத் தழுவிய போராளிகள்
நினைவலைகள்
வீரச்சாவைத் தழுவிய போராளிகள்
மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத...
வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரம்
வான்கரும்புலிகளின் பாடல்
வீரச்சாவுகள்
ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரு...
வீரச்சாவுகள்
ஆடடிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட ஏ...
புலிகளின் வீரம் (உரம்) காணொளி
வீரச்சாவு லெப்.கேணல் பாரதி/யாழ்மகன்
வீரவணக்கம் முருகதாசன்
வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விபரம்
அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராக...
நினைவலைகள்
வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள்
வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்
வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்
► February (18)
► January (11)
► 2008 (334)
Labels
2ம் லெப் (5)
கடற்கரும்புலி (19)
கப்டன் (18)
கரும்புலிகள் (20)
காணொளிகள் (14)
கேணல் (11)
தமிழின உணர்வாளர் (1)
தமிழீழச் சின்னங்கள் (10)
தலைவர் (19)
தலைவர் பிரபாகரன் தொடர் (6)
தியாகிகள் (7)
தேசத்தின் குரல் (5)
நாட்டுப்பற்றாளர் (2)
நினைவலைகள் (4)
படைத்துறை (6)
பண்பாடு (1)
பாடல் (1)
பிரிகேடியர் (15)
போராட்ட வரலாறு (73)
மாமனிதர் (8)
மாவீரர் நாள் உரை (12)
மாவீரர்கள் (198)
மேஜர் (16)
லெப் (10)
லெப்.கேணல் (52)
வான்கரும்புலிகள் (3)
விடுதலை தீப்பொறி (2)
வீரவரலாறு (75)
வீரவேங்கை (6)