சனி, 3 ஜூலை, 2010

கடற்புலி மேஜர் வைகுந்தன்


1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.

வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது. எங்களுக்கு அங்கொரு பணியிருந்த காரணத்தால் அந்தப் பற்றைக்குள்ளும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் தேடுதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் தேடிக்கொண்டிருந்தது கிபிர் விமானத்திலிருந்து வீசப்பட்டு வெடிக்காமற்போன இரண்டு குண்டுகளை.

விமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.

56025959_05a9119ad7

அப்படியான அழைப்பொன்று தனக்குக் கிடைத்தபோது, கற்கைநெறியில் இருந்த எம்மையும் அழைத்துச்சென்று சொல்லிக்கொடுப்பதென்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த சந்தர்ப்பமொன்றில்தான் நாங்கள் முப்பது பேர்வரை வந்து வட்டுவாகல் கரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வீசப்பட்ட இரண்டு குண்டுகளை நாங்கள் தேடியெடுத்துச் செயலிழக்கச் செய்ய வேண்டும். நாங்கள் தேடத்தொடங்கி இரண்டு நிமிடங்களிலேயே ஒரு குண்டைக் கண்டுபிடித்துவிட்டோம். மற்றதைத் தேடத் தொடங்கினோம்.

இரண்டாவது குண்டை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
சரி, இப்ப கிடைச்ச குண்டைச் செயலிழக்கச் செய்திட்டு பிறகு மற்றதைத் தேடுவம்’ என்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்தார். அதன்படி அனைவரையும் கூட்டிவைத்து குண்டைப்பற்றிய அடிப்படைப் பொறியமைப்பையும், அதைச் செயலிழக்கச் செய்யும் முறையையும் விளங்கப்படுத்தினார். பின் தன்னோடு இன்னும் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு அக்குண்டைச் செயலிழக்கச் செய்தார். பத்து நிமிடத்துக்குள் வேலை முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டாவது குண்டைத் தேடத் தொடங்கினோம்.

பற்றைகளை முடித்து, எமது தேடுதற்பரப்பு இன்னும் அதிகரித்த்து. நந்திக்கடலின் கரைப்பகுதிகளையும் தேடினோம். குண்டு இருப்பதற்கான தடயங்களே இல்லை. மதிய வெயில் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் குண்டைத் தேடுவோமென்று நினைக்கவில்லை. வரும்போதே குண்டுகளைக் காட்டுவார்கள், அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் குண்டுகளை இனங்காண அவ்விடத்திற் பணியாற்றும் போராளிகள் யாரும் உதவியாக வரவில்லை. ‘குண்டைக் காட்டாமல் இவங்கள் எங்க போய்த் துலைஞ்சாங்கள்’ என்று திட்டிக்கொண்டே தேடிக்கொண்டிருந்தோம். அவர்களின் முகாம் பக்கம் யாரும் போய்க் கூப்பிடத் துணியவில்லை. எங்களோடு நின்ற கடற்புலிப் போராளிகளைக் கேட்டோம்,
டேய் நீங்கள் ஒராளெண்டாலும் போய் இடம் தெரிஞ்ச ஆரையேன் கூட்டிக்கொண்டு வாங்கோவேன்ரா’
சேச்சே… நாங்கள் அங்க போகேலாது’ என்றுவிட்டு அவர்களும் எம்மோடு தேடினார்கள்.

ltteboatsகொஞ்ச நேரத்தில் ஐந்துபேர் கடற்கரைப் பக்கமிருந்து வந்தார்கள். எங்களை விசாரித்து அறிந்துகொண்டார்கள். அதற்குள் ஒருவன், தனக்கு அந்தக் குண்டிருக்கும் இடம் தெரியுமென்று சொல்லி முன்வந்தான். நந்திக்கடலின் கரையோரச் சதுப்புநிலத்தில்தான் இடங்காட்டினான். அது ஒருவருடத்தின் முன்பு வீசப்பட்ட குண்டு. துல்லியமாக அவனாலும் இடத்தைச் சொல்லமுடியவில்லை. அதில் நின்ற ஒரு தில்லைமரம், பாதையிலிருந்து குண்டு விழுந்த தூரம் என்பவற்றைக் கணக்கிட்டு குண்டுவிழுந்த இடத்தைப் பருமட்டாகச் சுட்டினான். அது இப்போது நீரால் மேவப்பட்டிருந்தது.

அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். குடிக்க ஏதாவது அனுப்பிவிடுறம் என்று சொல்லிச் சென்றவர்களிடம், ‘வேண்டாம். இந்தக் குண்டை இப்ப எடுக்க ஏலாது. தண்ணி வத்தினபிறகுதான் வரவேணும். நாங்கள் இப்பவே வெளிக்கிடுறம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமானோம்.

அப்போதுதான் நரேஸ் ஓடிவந்தான்.
“_ _ _ _ அண்ணை, வைகுந்தன் அண்ணா வந்திட்டுப் போறார். கதைச்சனியளோ? உங்களை மட்டுக்கட்டினவரோ? நீங்கள் அவரை மட்டுக்கட்டினியளோ?”

திகைத்துப் போனேன். உடனேயே என் மனக்கண்ணில் அந்த ஐவருள் வைகுந்தன் இனங்காணப்பட்டான். அது அவனேதான். அந்தச்சிரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உதட்டை ஒருமாதிரிச் சுளித்துத் கதைப்பது, அது வைகுந்தனேதான்.
எட கோதாரி… இவ்வளவு நேரமும் குண்டிருக்கிற இடம்பற்றி என்னோட கதைச்சுக் கொண்டிருந்திட்டுப் போனவன் என்ர வைகுந்தனோ?”

—————————————————————-

அவனின் இயற்பெயர் விமல். எனது ஊர்க்காரன்தான். ஐந்தாம் ஆண்டுவரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட அவன் இரண்டுவயது மூத்தவன். ஆனால் என்னோடுதான் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாட்கூட பாடசாலையைத் தவறவிடமாட்டான். அவன் வருவதே விளையாடத்தான். அவனோடு இருக்கும் பொழுதுகள் மிகமிகச் சுவாரசியமாக இருக்கும். சிறுவயதிலேயே அவனுக்குத் தந்தையில்லை. மஞ்சு என்ற பெயரில் தமக்கையொருத்தி இருந்தாள். தாய், தமக்கை, இவன் என அவனது குடும்பம் சிறியது.

அவன் தனித்துவமானவனாக இருந்தான். இரண்டு விடயங்கள் அவனுக்குத் தெரியாது; அழுவது, கோபப்படுவது. இதுபற்றி இன்றும் நான் வியப்பாகச் சிந்திப்பதுண்டு. அவனை அழவைக்க அல்லது கோபப்படுத்த அப்போது நாங்கள் நிறைய முயற்சித்தோம். எதுவும் பலிக்கவில்லை. ஒருமுறை இரத்தம் வருமளவுக்கு அவனது பின்பக்கத்தில் பேனையால் ஒருவன் குத்தினான். வாயை உறிஞ்சி நோவை வெளிக்காட்டியதோடு சரி, குத்தியவனைச் செல்லமாக நுள்ளிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனான். வகுப்பறையில் அவன் அடிவாங்காத நாளே இருக்கமுடியாது. மொளியில் அடிமட்டத்தால் அடிவாங்கிவிட்டு யாராலும் அழாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் என்றுமே அழுததில்லை. ஒருகட்டத்தில் நாமே சலித்துப்போய் அவனை அழவைக்கும் / கோபப்பட வைக்கும் விளையாட்டுக்களை விட்டுவிட்டோம்.

Sea_Tigersஅந்தப்பாடசாலை வளவில் விளாத்திமரங்கள், மாமரங்கள், மகிழமரம் என்பன இருந்தன. வருடத்தில் முழுநாளுமே மாங்காயோ விளாங்காயோ காய்த்திருக்கும். விமல் பாடசாலை வரும்போது கொப்பி, புத்தகங்கள் கொண்டுவருவானோ இல்லையோ சம்பல் போட ஏதுவாக எல்லாச் சரக்கும் கொண்டுவருவான். அனேகமான நாட்களில் நாங்கள் மாங்காய்ச் சம்பலோ விளாங்காய்ச் சம்பலோ சாப்பிட்டிருப்போம். திருவுபலகை அலகொன்றைக்கூட பாடசாலையில் நிரந்தரமாக ஒளித்துவைத்திருந்தான் விமல். மரமேறத் தெரியாத எங்களுக்கு அவன்தான் எல்லாமே.

அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரைதான் வகுப்புகள் இருந்தன. அதன்பிறகு பாடசாலை மாறவேண்டும். நான் இரண்டு கிராமங்கள் தள்ளியிருந்த ஒரு கல்லூரியில் இணைந்தேன். விமல் என் கிராமத்துப் பாடசாலையொன்றிலேயே கல்வியைத் தொடர்ந்தான். சில மாதங்களிலேயே எமது சொந்த ஊர் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது. எல்லோரும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. அத்தோடு விமலுக்கும் எனக்குமான தொடர்பு இல்லாமற் போய்விட்டது.

பின்னொரு நாள் கேள்விப்பட்டேன், விமல் இயக்கத்துக்குப் போய்விட்டான் என. அதன்பின் அவனது தமக்கையிடமிருந்து அவ்வப்போது அவனைப்பற்றிக் கேட்டறிவேன். முதலில் படைத்துறைப்பள்ளியில் இணைக்கப்பட்டிருந்தான், பிறகு கடற்புலிகள் பிரிவில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவனது பெயர் வைகுந்தன் என்பதையும் அறிந்திருந்தேன். எனது போராட்ட வாழ்க்கையும் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தைமாதம், குடாரப்புப் பகுதியில் ஒரு கடமையாக நின்றிருந்தவேளை, எனது ஊர்க்காரப் போராளியொருவரைச் சந்திக்க நேர்ந்தது. 1995 இன் நடுப்பகுதியில் கடத்தப்பட்டிருந்த ஐரிஷ்மோனா கப்பல் அப்போது குடாரப்புக் கடற்கரையில்தான் அலையடித்துச் சேதமாகப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்க்கப் போனபோதுதான் இச்சந்திப்பு. வைகுந்தன் பக்கத்தில்தான் எங்கோ நிற்பதாக அவர் சொன்னார். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. அப்போது முயன்றும் என்னால் முடியவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு வந்தபின்னும் அவனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட கற்கைநெறியில் இருந்தபோது அங்கே படிப்பதற்கென வந்திருந்த கடற்புலிப் போராளிகளுள் ஒருவன்தான் நரேஸ். இடையிடையே தனது முகாமுக்குச் சென்றுவருவான். அப்படிச் சென்றுவந்த ஒருநாளில்தான் வைகுந்தன் என்னை விசாரித்ததாகச் சொன்னான். வியந்துபோனேன். எமது படையணியிலிருந்து கடற்புலிக்குச் சென்றவர்களிடம் என்னைக்குறித்து விசாரித்து, இப்போது நான் நரேசோடு படித்துக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தான் வைகுந்தன்.

அவனைச் சந்திக்க வேண்டுமென்ற எனது அவாவையும் நரேசிடம் சொன்னேன். அப்போது வைகுந்தன் கடற்புலியின் ‘சாள்ஸ்’ அணியில் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சந்திப்பது இலகுவான காரியமன்று. ஆனாலும் நரேஸ் எங்களிடையே தூதுவனாக இருந்தான். ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்பதை என்னிடமிருந்து வைகுந்தனுக்கும் வைகுந்தனிடமிருந்து எனக்கும் காவிக்கொண்டு திரிந்தான் நரேஸ்.

———————————————————————–

அதே வைகுந்தன்தான் கொஞ்சநேரத்துக்கு முன்பு என்னோடு உரையாடிவிட்டுச் சென்றவன். நானும் அவனும் யார்யாரெனத் தெரியாமலே குண்டிருக்கும் இடம்பற்றி ஆராய்ந்திருக்கிறோம். இப்போதே எப்படியாவது அவனைச் சந்தித்து விடுவதென்று நான் தீர்மானித்தேன். கால்மணி நேரம் பொறுக்கும்படி வானம்பாடி மாஸ்டரிடம் சொல்லியாயிற்று. தான் அவர்களின் தளப்பக்கம் போய் நுழைவாயிற் காவலரணில் நிற்பவரிடம் சொல்லி வைகுந்தனைக் கூட்டி வருகிறேன் என்று நரேஸ் சென்றான். என்னால் இருக்க முடியவில்லை. அங்கெல்லாம் போவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுமென்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவன் தடுக்கத் தடுக்க நானும் நரேசுடன் போனேன்.

காவலரணுக்கு முன்னமே இரண்டுபேர் வந்து வழிமறித்தார்கள். நல்லவேளை, அதிலொருவன் எங்களோடிருந்து கடற்புலிக்குப் போனவன். ‘வைகுந்தன் ஆக்களின்ர வண்டி இப்பதான் வெளிக்கிட்டது. இண்டைக்கு ஆளைப் பார்க்க எலாது’ என்று சொன்னான்.

தோல்வியோடு திரும்பினேன்.

veeravanakkamஅதன்பின், அன்பரசனின் வெடிவிபத்து, வானம்பாடி மாஸ்டரின் வெடிவிபத்து எல்லாம் நடந்து எமது படிப்பும் முடிந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட காலம் நீட்டி நிமிர்ந்து இருக்க முடியாதபடி வேலைகள். அன்பரசன் வீரச்சாவடைந்த வெடிவிபத்தின்போது காயமடைந்த நரேஸ் அதன்பின் படிக்க வரவில்லை. ஆனாலும் அவனோடு எனது தொடர்பு நீடித்தது. சில மாதங்களின் பின்னர் அங்கிங்கு என்று திரிந்து கடமையாற்ற வேண்டி வந்ததாலும் ஓரளவு ஓய்வு நேரம் கிடைத்ததாலும் வைகுந்தனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்ற எண்ணினேன். இருந்த கடற்புலித் தொடர்புகளுக்குள்ளால் முயற்சித்தபோது வைகுந்தன் சந்திக்க முடியாத நிலையிலிருந்தான். வைகுந்தனால் முடிந்தபோது அவன் என்னைச் சந்திக்க முயற்சித்துத் தோல்வியடைந்தான், ஏனென்றால் நான் அப்போது சந்திக்க முடியாத நிலையிலிருந்தேன். இப்படி மாறிமாறி நடந்தாலும் நரேஸ் எங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது அதே ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்ற விசாரிப்பைப் பரிமாறிக்கொண்டிருந்தான்

ஒருநாள், வழமையான வழிமுறைகளின்றி நேரடியாக நானிருந்த தளத்துக்குத் தொடர்பெடுத்து வைகுந்தன் காயம் என்ற தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி சொன்னான் நரேஸ். இப்படிச் சொன்னபடியால் ஏதாவது கடுமையான காயமாகத்தான் இருக்குமென்று நான் முடிவெடுத்தேன். அப்போது நான் வெளிச்சந்திப்புக்களைச் செய்ய முடியாத நிலையிலிருந்தேன். கொஞ்ச நாட்களில் நரேசிடமிருந்து தகவல் வந்தது, வைகுந்தனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியில்லை என்று.

சிலநாட்களின் பின்னர் முல்லைத்தீவுப் பக்கம் போனபோது கடற்புலிப் போராளிகளைச் சந்தித்து வைகுந்தன் இருக்கும் மருத்துவமனையைத் தெரிந்துகொண்டேன். எனக்கான நேரமும் வசதியும் கிடைத்தபோதும்கூட நான் ஏனோ அவசரப்படவில்லை. ஒரு முழுநாளை அவனோடு ஒதுக்க வேண்டுமென்று யோசித்திருந்தேன். இடுப்புக் கீழே உணர்ச்சியில்லை என்பதை உயிராபத்தான ஒரு விடயமாக நான் கருதியிருக்கவில்லை. ‘வாறகிழமை ஒருநாள் ஒதுக்கிப் போகவேண்டும்’ என்று ஒவ்வொரு கிழமையும் தள்ளிக்கொண்டே போனது.

ஆனால் வைகுந்தனின் உயிர் எனக்காகக் காத்திருக்கவில்லை. ஒரு கடமை காரணமாக பத்துநாட்கள் ஓரிடம் போய் நின்றுவந்த பின்னால் புதுக்குடியிருப்பில் வைத்து ஊர்க்காரர் ஒருவர்தான் சொன்னார் வைகுந்தன் வீரச்சாவென்பதை. வழமையாக புலிகளின் குரல் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டுவிடும் நான் அந்தப்பத்து நாட்களும் வானொலிகூடக் கேட்கவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

நான் அவனைச் சந்திக்கத் தேடித்திரிந்த காலங்களில் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தேன். பளார் என்று கன்னத்தில் அறைந்து, அவன் விமலாக இருந்ததுபோல்தான் இப்போதும் கோபமோ அழுகையோ வராத வைகுந்தனாக இருக்கிறானா என்று சோதிப்பதே அது.

* கடலில் நடந்த சண்டையொன்றில் கப்டன் நரேசும் வீரச்சாவடைந்து விட்டான்.

அன்பரசன்


புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்


விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர்,

மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.


ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்


ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?

pandara_vanniyanஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.

ltte_arty

அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.

விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.

புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.

யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.

ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.

தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.

rajuஅவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.

விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.

இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் – சாவடைந்தார்.

மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.

ஆகஸ்ட் 25, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழ