செவ்வாய், 2 மார்ச், 2010

வன்னிப் போரில் ஏராளமான மரணங்கள் என்கண்முன்னால் இடம் பெற்றன – அருளம்மாவின் கதை
கருவிப்பட்டை




வன்னிப் போரில் ஏராளமான மரணங்கள் என்கண்முன்னால் இடம் பெற்றன – அருளம்மாவின் கதை இது‐தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்
கடந்த வருடம் இதேநேரம் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட இறுதி யுத்தத்துள் அகப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுள் 99 வயதான அருளம்மா தம்பிராஜாவும் ஒருவர். நான் ஒருபோதுமே எண்ணிப் பார்த்திராத சம்பவங்களை நேரடியாகக் கண்டேன். ஏராளமான மரணங்கள் என்கண்முன்னால் இடம் பெற்றன என அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகருக்கு அண்மையான கிராமமான நவஜீவனம் பகுதியை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோதல்கள் அண்மித்த போது அருளம்மாவின் குடும்பம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் உட்பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தது.
இடப் பெயர்வின் போது பெருமளவான நேரங்களில் அருளம்மாவை அவரின் மகன்களும், பேரப்பிள்ளைகளும் கதிரையில் வைத்து தூக்கிச் சென்றிருந்தார்கள். 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமுக்கு அருளம்மா தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் வரை அவர்கள் இடம் பெயர்ந்தோர் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர் தற்போது கொழும்பிற்கு அண்மையாக உள்ள நகரொன்றில் உள்ள தனது உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவர் போருள் அவரது வாழ்க்கை பற்றியும் தனது கிராமத்திற்குத் திரும்பும் தனது கனவுகள் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
போர் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லா பக்கமிருந்தும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. நான் உயிர்தப்புவேன்; என எண்ணவில்லை, அங்கு ஒவ்வொரு வினாடியும் ஒரு ஆயள்காலமாகவே நகர்ந்தது என அருளம்மா தெரிவித்துள்ளார். எனது மகன்கள் என்னை தூக்கி வந்தனர், ஒவ்வொரு இடத்திலும் சொற்ப நேரமே எம்மால் தங்க முடிந்தது. அது மிகவும் பயங்கரமான காலம். உணவை பெறுவதும், காலைக்கடன்களை முடிப்பதும் கடினமானதாகவே இருந்தது. அதன் போது உயிரை இழக்கவும் நேரலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. கடவுளின் கருணையால் நான் தற்போது இங்கு இருக்கிறேன். அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என எமக்கு தெரியவில்லை. எல்லா பக்கமும் மக்கள் அச்சத்துடன் ஒடிக்கொண்டிருந்தனர். மிகப்பெரும் சத்தம் கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் எனது கண்களை மூடிக்கொண்டேன்.
நூன் ஒரு போதுமே கண்களைத் திறந்து பார்க்க வேண்டும் என்று எண்ணியதில்லை. அது ஒரு மிக நீண்ட கெட்ட கனவாக இருந்தது. எனது வாழ்வில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நான் எனது 60 ஆவது வயதுகளில் பேரப்பிள்ளைகளை கண்டபோது போர் ஆரம்பமாகியிருந்தது. என்னால் கற்பனை செய்யமுடியாத நிகழ்வுகளை எல்லாம் நான் அதன் பின்னர் கண்டேன். ஏராளமான மரணங்களையும், பேரழிவையும் கண்டேன். எமது கிராமத்திற்கு திரும்பவும் செல்லலாம் என அதிகாரிகள் கூறியபோது, எனது குடும்பத்தவர்கள் உடனடியாக கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.
எமது கிராமத்தில் என்ன எஞ்சியுள்ளன என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. எமது வீடு அழிவடைந்துள்ளது. அங்கு எல்லா இடமும் கண்ணிவெடிகள் உள்ளன. நான் ஒய்வு எடுக்க வேண்டும் என எனது பிள்ளைகள் விரும்புகின்றனர். எனது வழ்க்கையில் 100 வயது வரை வாழ்ந்தவர்களை நான் காணவில்லை. எனது கிராமத்தில் இருந்தவர்களில் யாரும் அவ்வாறு நீண்டகாலம் வாழ்ந்ததில்லை. நான் தான் முதல் தடவையாக அவ்வாறு வாழ்கிறேன். எனவே எனது கிராமத்திற்கு சென்று அதனை நான் கொண்டாட விரும்புகிறேன். எனது கிராமத்திற்கு சென்று முன்னரைப்போல அமைதியாகவும், கவலைகள் இன்றியும் வாழவே நான் விரும்புகிறேன். அது தான் எனது கனவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி: ஐ.ஆர்.ஐ.என்.