செவ்வாய், 6 ஏப்ரல், 2010





"தேசத்தின் குரல்"
தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து ''தேசத்தின் குரல்'' என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்





பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.



தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.



படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய - 02″ எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.


தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதனை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,
செயலர்,
தலைமைச் செயலகம்

cop

வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா?

வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா?



விடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி.

1980கள் தொடக்கம் கடந்த மூன்று தசாப்த காலமாக கேட்டுச் சலித்துப் போன கதைகள் தான். ஆனாலும் எங்களில் சிலருக்கு தற்போது புதிதாக அச்சம். மகிந்த ராஜபக்ச அன்கோ தற்போது வெற்றி அணியாக உள்ளதால் உண்மையில் தோற்றுவிடுவோமோ என்ற சந்தேகமே அது.

விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாமம் என்பவை பற்றி கூர்ந்து அவதானிப்பவர்கள் இவ்வச்சம் பற்றி அலட்டிக் கொள்ளப்போவதில்லை. இந்திய அமைதிப்படை இலங்கை இராணுவமென மாறி மாறி நடந்த யுத்தங்கள், எதனையும் எதிர்கொள்ளும் மனோபலத்தை புலிகளுக்கு கடந்த காலங்களில் தொடர்ந்தும் வளர்த்தே வந்திருந்தது. கெரில்லாப் போராட்ட வரலாறு பின்னர் மரபு வழிப்போராக அவ்வகையிலேயே பரிமாணம் பெற்றிருந்தது.

உண்மையில் வன்னியில் என்ன தான் நடக்கின்றது. புலிகள் என்னதான் செய்து கொன்டிருக்கிறார்கள். புலிகளைப் பொறுத்த வரையினில் போராட்ட வரலாற்றினில் இதுவோர் மோசமான நெருக்கடியான காலம்மட்டுமே. அரசும், இராணுவத் தளபதிகளும் சொல்லிக் கொண்டிருப்பது போல் இது முடிவு காலமல்ல. இந்த நெருக்கடி மிக்க மோசமான காலப்பகுதியை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிக்கொள்வது என்பதே தற்போதைய அவர்களது முக்கிய பிரச்சினை.

வன்னிக்கள முனையினில் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு எந்த விலையைக் கொடுக்கவும் எந்த விதமான வழிவகைகளையும் கையாளவும் படைத்தலைமை தயாராவே உள்ளது. சிலவேளைகளில் அவ்வழிவகைகள் மிகமோசமானதாகவும் இருக்கலாம். இவ்வாண்டின் முற்பகுதிகளில் விடுதலைப்புலிகள் அரச படைகள் மீது இரசாயன ஆயுதங்களால் தாக்க திட்டமிட்டிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. அத்துடன் ஒரு சில இடங்களில் அவ்வாறு தயார் நிலையில் வைக்கப்பட்ட இரசாயன ஆயுதங்களை கைப்பற்றியிருப்பதாகவும் கூறியது. அரசின் ஊதுகுழல் ஊடகங்களை இச்செய்திகளை வேகமாக பிரச்சாரம் செய்தன. ஊடக தகவல்கள் மைய தகவல்களையே ஏனைய ஊடகங்களும் விழுங்கி மீள வாந்தியெடுத்தன.

ஆனால் படைத்தரப்பு இரசாயன ஆயுதங்களை புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடு அதுவென பலரும் நம்பியிருக்கவில்லை. புலிகள், முன்னணி தளபதிகள் எண்மர் உள்ளிட்ட நானூறு போராளிகளை இதற்குப்பலி கொடுக்க வேண்டியவர்களானார்கள். அந்த இழப்பின் வலி புலிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

மீண்டும் சூனியப் பிரதேசத்தினில் மக்களைப் புலிகள் யுத்த கேடயங்களாகப் பயன்படுத்துவதாக அண்மைக்காலமாக மற்றுமொரு குற்றச்சாட்டினை அரசு அறிவித்திருந்தது. ஊடகங்களும் பலவும் அதற்கு ஒத்து குழல் ஊதின. விடுதலைப்புலிகள் மக்களை விடுவிக்க வேண்டுமெனவும் அவை தொடர்ந்து வலியுறுத்தின.

ஆனால் மீண்டும் நடந்தது வேறு‐ சூனியப்பிரதேசத்தில் உள்ள மக்களை விடுவிக்கும் அரசின் இராணுவ நடவடிக்கைக்கு அதே மக்களை படையினர் கேடயமாகப் பயன்படுத்தினர். கடந்த ஏப்ரல் 21 முதல் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியினிலிருந்து வெளியேறிய மக்களை சில தினங்களாக படையினர் உள்ளே வர அனுமதித்திருக்கவில்லை. இந்நிலையில் புலிகள் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் இடையில் அகப்பட்டிருந்தனர். அவ்வாறு அகப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை கேடயமாக்கியே படைநகர்வை சூனியப்பிரதேசம் நோக்கி படைத்தரப்பு அண்மையில் மேற்கொண்டிருந்தது சொந்த மக்கள் மீது தாக்குதலை நடத்தியே படையினரது முன்னகர்வை தடுத்து நிறுத்த வேண்டிய நெருக்கடியான சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். எனினும் அவ்வாறான தாக்குதல்களை புலிகள் தலைமை அப்போது தவிர்க்க உத்தரவிட்டிருந்ததாக தெரியவருகின்;றது.

ஆனாலும் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பொது மக்களது எண்ணிக்கை கேள்விக்குரியதானவே உள்ளது சூனியப்பிரதேசத்தினில் சுமார் 70 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் உள்ளதாகவே அரசு கூறிவந்திருந்தது. ஆனால் அரசின் ஊடக தகவல் மையம் வெளியிட்ட இறுதி புள்ளிவிபரத்தினில் ஒரு இலட்சத்து 78 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி தம்மிடம் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலதிகமாக வந்திருந்த பொதுமக்கள் அண்மைய ஓரிரு மாதங்களுள் பிறந்திருந்தவர்களோ தெரியவில்லை.

ஆயினும் அரசு வன்னி சூனியப்பகுதியிலான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி என்பது எவ்வாறான வரையறையினுள் உள்ளடங்கியுள்ளதென்பது பற்றி கூறியிருக்கவில்லை. புலிகளுக்கும் அவ்வாறே உள்ள போதும் அவர்களுக்கு தேர்தல்கள் தொடர்பிலான கால எல்லையெதுவும் இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எவ்வகையிலும் விடுதலைப்புலிகளது பெரும்பாலான படைப்பிரிவுகள் சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் தொடர்ந்தும் செயற்படுநிலையிலேயே உள்ளதாக அங்கிருந்து வந்த பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகின்றது. மிகப்பெரிய எண்ணிக்கையளவில் தமது ஆளணியை தொடர்ந்தும் புலிகள் பேணிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களால் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் இணைக்கப்பட்டவர்களது எண்ணிக்கையும் இதனுள் உள்ளடங்கியே உள்ளது ‐ கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் புலிகள் ஆயுத தளபாடங்களை போதிய அளவினில் கையிருப்பினில் பேணுவர்களெனவே நம்பப் படுகின்றது. குறிப்பாக புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகளில் சரத்பொன்சேகா அன்கோ வழங்கியவையும் உள்ளடங்கியே உள்ளது.

புலிகளது வீழ்ச்சி அல்லது முடிவு என்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அண்டிய காலப் பகுதிகளில் சில வேளைகளில் சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் இன்று சர்வதேசமெங்கும் ஆழக்காலூன்றி புலிகளது வலைப்பின்னல் விரிவடைந்து விட்டது. தெற்காசிய நாடொன்றிலிருந்து தெற்கை நாள்தோறும் ஆட்டிப்படைக்கும் வலுவுடனேயே உள்ளோம். தேவையாயின் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தூதுவராலயமூடாகவும் புலிகளைத் தேடட்டும் என்கின்றார் புலிகளது தீவிர ஆதரவாளரொருவர். உண்மையும் அதுவாகவே இருக்கின்றது. அண்மைய காலங்;களில் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்;தே கொழும்பிலான தாக்குதல்கள் பல திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளமை படைத்தரப்பின் புலனாய்வுத்தரப்பினை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.

மறுபுறத்தே நீண்ட நாட்களுக்கு முன்பதாகவே தெற்கில் ஆழ ஊடுருவிநிலை கொண்டுள்ள விடுதலைப் புலிகளது தாக்குதல் பிரிவுகள் தொடர்பிலும் அரச தலைமை அச்சத்துடனேயே உள்ளது. புலிகளது புலனாய்வுப் பிரிவின் தென்பகுதிக்கான தளபதியாக இருந்த கேணல் சாள்ஸ் மரணம், புலிகளைப் பொறுத்தவரை சொல்லிக்கொள்ளத்தக்க இழப்பே. சமாதான காலத்தில் கொழும்பு அல்லது அதனையண்டிய பகுதியொன்றினில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல் போன முக்கிய பிரமுகர் நியூட்டனின் பிரிவும் அவ்வகையிலேயே இருந்தது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக கொழும்பு உட்பட்ட தென்பகுதிகளிலிருந்து செயற்பட்ட புலிகளது முக்கிய தாக்குதலாளிகள் காணாமல் போகச்செய்யப்பட்டனர். இதனால் பெரும் நெருக்குவாரங்களை அப்போது புலிகள் எதிர் கொண்டபோதும் ஏற்கெனவே பேணப்பட்ட களஞ்சிய கையிருப்புக்களைக் கொண்டு மேலும் புதிய பல அணிகள் பயிற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ புலனாய்வுப்பிரிவு நம்புகினறது..

இதனாலேயே தெற்கின் நினைப்பிற்கு மாறாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள அப் புதியவணிகள் எந்நேரமும் எதனையும் செய்து முடிக்கக் கூடிய வலுவுடனேயே இருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவு அரச தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வகையிலேயே முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான கேணல் ஜெயம் நூறுக்கும் அதிகமான போராளிகளுடன் தெற்கு நோக்கிப் பயணித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.

முற்றுமுழுதாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அளம்பில் கடற்பரப்பினில் இடம்பெற்ற மோதல்களும் அந்தவகையிலேயே நோக்கப்படுகின்றது. தெற்கு நோக்கி நகர முற்பட்ட படகுகளே மோதலில் சிக்கியிருந்தன. எனினும் அப்படகுகளில் சென்றவர்கள் எவரும் முல்லைத்தீவு திரும்பியிருந்ததாக தகவலில்லை. அரசு தெற்கில் தொடர்ச்சியாக இவ்வகையிலேயே தேடுதல்களை நடாத்துகின்றது.

அதே போன்று தான் அண்மையில் வன்னி முகாங்களில் தங்கியிருந்து இளைஞர்கள் சிலர் கும்பல் கும்பலாக காணாமற்போன சம்பவமும் அமைந்துள்ளது. படைத்தரப்பை இச்சம்பவம் பெரிதும் அச்சப்படுத்தியேயுள்ளது. அண்மைக் காலப்பகுதிகளில் மக்களோடு மக்களாக புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்திருந்த இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து தப்பியோடியுள்ளனர். வடகிழக்கின் எல்லைப்புறங்களிலும், தெற்கிலும் இவ்வகையில் நீண்ட நாட்களாக நிலைகொள்ள வைக்கப்பட்டிருக்கும், உறை நிலையிலுள்ள தாக்குதல் அணிகள் எப்போதும் செயற்படலாமென அரசு நம்புகின்னறது. எனினும் அவர்களது இலக்கு அரச படைகள் என்பதற்கப்பால் பழிக்குப்பழியென்ற வகையில் எல்லையற்ற வகையிலேயே இருக்கும். சிங்கள தேசமும் யுத்தத்தின் மற்றைய பக்கத்தை அப்போது உணர்ந்து கொள்ளும். இதையடுத்தாவது சர்வதேச தலையீடு தீர்வொன்றினை பெற்றுத்தருமென்பதே புலிகளின் நம்பிக்கையாக இருக்கின்றது. இவ்வாறில்லாமல் கட்டுப்பாடற்ற இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு போர் வெற்றியை அரசு பெறமுற்படுமானால் அதற்கான விலை மிகப் பெரியதாகவே இருக்கும்.

அவ்வாறானதோர் சூழல் ஏற்படுமானால் தெற்கு யுத்தத்தின் இறுதி வலியை தானும் உணர வேண்டியதோர் நிலைக்கு தள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சூனியப்பிரதேசம் மீதான கட்டவிழ்த்து விடப்படும் இறுதிப்போர் நடவடிக்கைகள், புலிகளின் கைகளை கட்டிப்போட தொடர்ந்தும் சர்வதேசத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை. புலிகள் தமது போராட்ட வரலாற்றின் உச்சக்கட்ட முறியடிப்பு நடவடிக்கைக்கு அப்போது தள்ளப்பட்டிருப்பர்.

உண்மையில் வன்னிப்பேரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப்போவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலே. மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏறப்போகும் தரப்பு எது என்றே அரசும் சரி புலிகளும் சரி எதிர்பார்த்திருக்கின்றனர். கள முனைகளில் எந்தத் தரப்பின் கைகள் ஓங்கும் என்பதும் அதைப் பொறுத்தே உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் விடுதலைப்புலிகளை குறிப்பிட்டதொரு சிறுபகுதியினுள் மடக்குவதில் அரசுபடைகள் வெற்றி கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் போரிடும் வலுகுறையாத நிலையில் தனது பெருமளவிலான போராளிகள் மற்றும் யுத்த தளபாடங்கள் சகிதமே புலிகள் பின்வாங்கியிருக்கின்றார்கள். எனினும் பிற்தள எற்படுகள் போதியளவில் இன்மையால் புலிகளால் உடனடியாக பெருமெடுப்பிலான படைநடைவடிக்கைகளை உடனடியாக செய்வதென்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.

இந்தியத் தேர்தல் முடிவுகளின் பின்னரான அடுத்து வரும் நாட்கள் எப்படியிருப்பினும், அரசு தனது இறுதித்தாக்குதலை சூனியப் பிரதேசம் மீது நடத்;தியே தீருமென்பதில் மாற்றமில்லை. ஆனால் அங்கு புலிகளுடனேயே தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பினில் என்ன நடக்குமென்பதே அனைவருக்கும் உள்ள அச்சமாகும். ஏற்கனவே உணவுத்தடை மூலமும் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள் மூலமும் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இச் சந்தர்ப்பத்தினில் கூட சர்வதேசம் தமது மக்களுக்கு ஏதாவதொரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற எஞ்சிய நமபிக்கையுடனேயே புலிகள் அடுத்து வரும் நாட்களையும் பார்த்திருக்கின்றனர்.

மேஜர் பாவலன்


மேஜர் பாவலன்

தவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)
தாயின் மடியில் :-17.04.1980
மண்ணின் மடியில் :- 01.02.2009

1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க வந்திருந்தான்.

7ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய நமது நட்பு போர்க்களம் வரை தொடர்ந்தது. அவன் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி திறமையாகவே செயற்படக் கூடியவன். குறிப்பான நன்றாகப் பாடுகின்ற தன்மை அவனிடம் கூடிப்பிறந்தது எனலாம். அவன் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எமது பள்ளி நினைவுகளை மீட்டுவதற்கு சந்தர்ப்பம் இதுவல்ல என நினைக்கின்றேன். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தாய்ச்சமர்க்கெல்லாம் தலையாக விளங்கியதும் ஆசியாவில் மிக நீண்டது என வரலாறுகளில் பதியப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஜயசுக்குறூய் இராணுவ நடவடிக்கை 1997 மே 13ஆம் திகதி தொடங்கப்பட்டது. இதனால் தமிழரின் நிலங்கள் பல விழுங்கப்பட்டு வன்னியினுடைய ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்ட இடம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று கொண்டிருந்த வேளையில் தான் ஜயசுக்குறூ நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப்புலிகளின் சமர் வலுவடைந்தது.

அந்த நேரத்தில் தான் காலம் என்னையும் ஒரு போராளியாக்கியது. ஆசிய வரலாற்றிலேயே மிக நீண்ட ஒரு யுத்தத்தினை உலகம் வியக்கும் வண்ணம் மரபு வழியாக வாசல்கள் யாவும் அடைக்கப்பட்ட வன்னியிலிருந்து புலிகள் கொண்டு எதிர் கொண்டனர். வன்னியின் நுழைவாயிலாக விளங்குகின்ற ஏ9 வீதியூடாக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு புலிகள் கடும் எதிர்ப்பினை காட்டினார்கள். அதாவது முகாம் வடிவிலான காவலரண்களை அமைத்து படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தொடங்கினர். குறிப்பாக புளியங்குளத்தைத் தாண்ட முடியாது படையினர் தினறியபோதுதான் படையினர் இரகசியமாக டொலர்பாம், நெடுங்கேணி, குழவிசுட்டான், கோடாலிக்கல், வாவெட்டிமலை, கருப்பட்டமுறிப்பு, ஆகிய இடங்களைத் தாண்டி அம்பகாமம் வரை வந்து நின்றனர்.

அதேவேளை மன்னார்மாவட்டத்திலும் ஏற்கனவே எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியூடாக பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி, பனங்காமம், மூன்றுமுறிப்பு என்று தனது நில ஆக்கிரமிப்புத் திட்டத்தை விஸ்தரித்திருந்தனர். இதனால் மன்னாரிலிருந்து செம்மலை, அளம்பில் வரையான கிட்டத்தட்ட 132 மைல் நீளத்திற்கு தொடர் காவலரண்களை அமைத்துப் புலிகள் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். குறிப்பாக நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்று காவலரண்கள் என அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவலரணிலும் இரண்டு போராளிகள் வீதம் காவலிருந்தனர்.

இங்கு ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். மன்னாரில் இருந்து மூன்றுமுறிப்பு வரை இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக பிரிகேடியர் ஜெயம் அண்ணா அவர்களும், மூன்றுமுறிப்பிலிருந்து - வன்னிவிளாங்குளம் வரையான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக லெப்.கேணல் வீமன் அண்ணா அவர்களும், வன்னிவிளாங்குளத்திலிருந்து அம்பகாமம் வரையான களமுனைக்குப் பொறுப்பாக துரோகி கருணாவும், லெ.கேணல் ராபெட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர் இருந்தனர். முக்கியமாக ஜயசிக்குறூய் நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து ஏ9 வீதியினைக் குறுக்கறுத்து அமைக்கப்பட்ட இராணுவத்தடுப்பு வேலிகளுக்கு லெப். கேணல் ராபெட் அவர்களே பொறுப்பாக இருந்தார். ஆனால் மாங்குளப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சமர்களின் கட்டளைத் தளபதியாகவும், கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னி வந்து களமாடிய போராளிகளின் கட்டளைத் தளபதியாகவுமே துரோகி கருணா இருந்தான்.

ஆனால் பின்நாட்களில் தான் ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையின் ஒட்டுமொத்த கட்டளைத்தளபதியாக தானே இருந்ததாக தம்பட்டமடித்தான். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளும் எந்தவிதமான மறுப்பறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை. காரணம் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து அவனை ஒரு முக்கியப்படுத்த விரும்பவில்லை. அடுத்து அம்பகாமத்திலிருந்து - ஒட்டுசுட்டான் வரையான களமுனைக்குப் பொறுப்பாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அன்ரன் மாஸ்ரர் அவர்களும், பிரிகேடியர் விதுசா அக்கா அவர்களும், தலைமைவகிக்க. ஒட்டுசுட்டானிலிருந்து - செம்மலை, அளம்பில் வரையான களமுனைக்கு பொறுப்பாக கேணல் லோரன்ஸ் அண்ணா அவர்களும், ஒட்டுமொத்த ஜயசிக்குறூய் இராணுவநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக போரியல் ஆசான் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் இருந்தனர்.

இது தான் ஜயசிக்குறூய் களமுனையை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட விதம். அத்துடன் கிளிநொச்சி 55 கட்டை வரை முன்னேறிய இராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்களும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைத்தளபதிகளான லெப்.கேணல் ராஜசிங்கன் அண்ணா, லெப் கேணல் ராகவன் அண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிலையில் தான் அம்பகாமத்தில் (பழைய கண்டிவீதி) இராணுவத்தின் முன்னேற்றம் உக்கிரமடைந்தது. காரணம் ஏற்கனவே கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. ஆகவே அம்பகாமம் வரை வந்த படையினர் எப்பாடு பட்டாவது பழைய கண்டிவீதியூடாக பாதையைத் திறந்துவிடத் துடித்தனர். ஆரம்பத்தில் இந்தக் களமுனையில் மாலதி படையணியினரே நின்றிருந்தனர். குறிப்பாக இரண்டு களமுனைகளினூடாகவே படையினரின் முன்னேற்றம் உக்கிரமாக இருந்தது.

ஒன்று ஏ9 வீதி மற்றையது அம்பகாமம் பழைய கண்டிவீதி. மாங்குளம் களமுனையால் நகரமுடியாது என உணர்ந்த படையினர். அம்பகாமம் பகுதியூடாக எப்பாடுபட்டாவது நகர வேண்டும் என பகீரதப் பிரயர்தனம் செய்தனர். ஆகவே இந்தக் களமுனைக்கு உடனடியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணிகள் நகர்த்தப்பட்டனர். ஆகவே நானும் அந்தக் களமுனைக்கு நகர்ந்து களப்பணிகளை ஆற்றிய காலத்தில்தான் ஜயசிக்குறூய் களமுனையின் வெற்றிவிழா நாளும் வந்தது. அதாவது 13.05.98 அந்த நேரத்தில் தான் வன்னி இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு வன்னி, இரண்டாவது கிழக்கு வன்னி. மேற்கு வன்னிக்கு பிரிகேடியர் தீபன் அண்ணாவும், கிழக்கு வன்னிக்கு பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். அந்தவகையில் நான் ஜயசிக்குறூய் வெற்றி விழாவினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மேற்கு வன்னிக்கு அதாவது மல்லாவிப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.

அந்த நாளும் வந்தது. அன்று மல்லாவியிலிருந்து தமிழீழ தேசியக் கொடி மக்களால் வீதி வழியே ஏந்திச் செல்லப்பட்டு கண்டி வீதியிலே ஏ9 கண்டிவீதியில் உள்ள பழையமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அப்போதைய மாங்குளம் களமுனைத் தளபதியாக இருந்த துரோகி கருணாவிடம் கொடுக்கப்பட்டது. இதன் போது பாவலன் (அஜந்தன்) ஒரு உரையொன்றை நிகழ்தியிருந்தான். அதில் அவன் வெகுவிரைவில் "களமுனைப் போராளிகளுக்கு மாணவர்கள் வந்து தோள் கொடுப்பார்கள்; "என்று கூறியிருந்தான். அப்போது அவன் கூறியதை ஒரு வாரத்தில் நிறைவேற்றியிருந்தான். அவன் தன்னை ஒரு போராளியாக மாற்றியிருந்தான். தனது அஜந்தன் என்ற பெயரை பாவலனாக மாற்றிக்கொண்டு சாள்ஸ் அன்ரனிசிறப்புப் படைப் போராளியாக அம்பகாமம் களமுனைக்கு வந்து சேர்ந்தான்.....

பாவலன் அம்பகாமம் களமுனைக்கு வந்த நேரத்தில் நான் காவலரண்களில் கடமை புரியும் களமுனைப் போராளிகளுக்கும் பின்தளத்திற்குமான இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அவனை நான் அம்பகாமத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் கூட நம்பவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒன்றான நண்பர்கள் பகைவிரட்டவும் ஒன்றானோம். களமுனைக்கு வந்த பாவலனை அம்பகாமம் கட்டளைத்தளபதி அன்ரன் மாஸ்ரர் அவர்கள் என்னுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார். எனவே நாம் இருவரும் இணைந்து களப்பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தோம்.

இதில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் களமுனையிலுள்ள போராளிகளுக்கும் பின்தளப் பகுதிகளுக்குமான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் பின்தளப்பகுதியிலிருந்து முன் காவலரணுக்குச் சென்றுவிடுவோம். இதில் பல ஆபத்துக்கள் இருந்தன. அதாவது முன்களமுனையில் உள்ள போராளிகளை விட பின்தளப்பகுதிகளைக் குறிவைத்தே படையினர் தாக்குதல்களை மேற்கொள்வார்கள். இதில் மோட்டார் படையணிகளின் நிலைகள், மற்றும் பின்தள முகாம்கள் என்பன இராணுவ வேவு அணிகளினால் பல தாக்கப்பட்டிருந்தன. ஏனெனில் பின்தளத்தைச் சிதைத்தால் இலகுவாக தாங்கள் முன்னேறிவிடலாம் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

பொதுவாக பதுங்கியிருக்கும் வேவு அணியினரின் தாக்குதலில் பல போராளிகள் வீரச்சாவடைந்தும் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் நானும் பாவலனும் சிக்கியிருந்தோம். 16.08.98 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம் ஐந்து மணியைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது. களமுனையில் பல பணிகள் இருந்தமையால் அன்று விடிவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். எங்களின் முகாமிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் சென்றால் தான் முன்னணிக் காவலரண்களை அடைய முடியும். ஆனால் வேகமாக நகரவும் முடியாது. அடர்ந்த காடு என்பதனால் மிகநிதானமாக மெதுவாகவே நடந்து சென்றோம். திடீரென ஏதோ இனம்புரியாத சந்தேகம் எம்மிடையே எழுந்தமையால் இருவரும் நிலையெடுத்துத் தயாரானோம். நாம் சந்தேகப்பட்டது சரியாகியது.

அங்கு ஊடுருவியிருந்த வேவு அணி ஒன்று தளம் திரும்பிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நான் பாவலனைப் பார்க்க அவனது துப்பாக்கி முழங்கியது. உண்மையில் இருவரும் எப்படிச் சண்டை செய்தோம் என்று தெரியவில்லை. அத்துடன் பின்தளப்பகுதியில் இராணுவம் ஊடுருவி விட்டது என நினைத்த காவலரண் போராளிகள் தாக்குதலை இராணுவ நிலைகள் நோக்கி தொடுக்க பின்தளப்பகுதியில் இருந்த மோட்டார் அணிகள் களமுனைநோக்கி இராணுவம் என நினைத்து மோட்டார் தாக்குதலை இராணுவ சூனியப்பகுதி நோக்கி நடாத்தினர். ஆனால் தாக்குதல் நடைபெற்ற எமது பகுதிகளுக்கு உடனடியாக மேலதிக படையணிகள் வரமுடியவில்லை. காரணம் எங்களால் அவர்களுடனான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் நாம் இருவரும் மட்டுமே சண்டையை நடத்தி முடித்தோம்.

அன்றுதான் பாவலனின் சண்டை வலுவையும், அவனிடமிருந்த ஓர்மத்தையும் பார்த்தேன். அந்த அதிகாலையில் நடந்த சண்டையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட ஒருவன் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிபட்டான். இதுவே பாவலன் கண்ட முதலாவது சண்டையாகும் இந்தச் சண்டை முடிந்த அன்று நள்ளிரவு அதாவது 17.08.98 திங்கட்கிழமை எனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது அன்று நள்ளிரவு 1 மணியிருக்கும் திடீரென்று ஒரு எல்ஃப் ரக வாகனம் ஒன்று நாங்கள் இருந்த பின்தளப்பகுதிக்கு வந்து நின்றது. அதில் வந்தவர்கள் உடனடியாக அந்த வாகனத்தில் ஏறுமாறு கேட்க பாவலன் என்முகத்தைப் பார்த்து "எங்கை மச்சான் சண்டைக்கோ" என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. "ஓம்போல" என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறினேன்.

வாகனம் வேகமாக சென்றது அது சென்ற பாதை எனக்கு பரீட்சயம் என்பதால் அது அம்பகாமத்தின் பின்தளத்திலுள்ள குறிஞ்சி முகாமுக்கு செல்கிறது என உணர்ந்தேன். வாகனம் சடாரென குறிஞ்சி முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நின்றது. அப்போது அங்கு பல போராளிகள் மரத்தோடு மரமாக நின்றிருந்தனர். உடனே பாவலன் மச்சான் மீற்றிங் போலகிடக்கு என்றான். அப்போது நான் தாக்குதலுக்கான திட்டம் சொல்லப் போயினம் என்று சொல்லிக் கொண்டு முன் பதுங்குகழியடியைத் தாண்டினேன். அப்போது "என்னப்பன் எப்பிடிஇருக்கிறியள்டா." என்ற சொல் என் செவிகளுக்குள் நுழைந்தது. சட்டெனத் திரும்பினேன். அந்த இருளில் பிரகாசமாகத் தெரிந்த அந்தச் சூரியதேவனின் குரலது. ஆம் எல்லோரும் காணத்துடிக்கும் எம் தேசியத் தலைவரின் குரல். ஓடிச் சென்று கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது.

எனது சந்தோசத்திற்கு அளவேயில்லை. அத்துடன் தேசியத் தலைவருடன் கேணல் ராஜூ அண்ணா, பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தீபன் அண்ணா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். உணவுண்டபின் தேசியத்தலைவர் எம்மைப் பார்த்து "யாரப்பன் நேற்று வேவு அணியோடை சண்டைபிடிச்ச பிடிச்சது..." என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் பாவலனும் கையை உயத்திவிட்டோம். பின் எங்களை அழைத்து எங்கள் இருவர் தோள்களிலும் தனது கையைப்போட்டு தோழமை கொண்டாடி எங்களை வாழ்தியதை என்ன வார்த்தைகள் இல்லை. "பல போராளிகள் அண்ணையை காணாமல் வீரச்சாவடைய நான் வந்து ஒரு கிழமைக்குள்ளே அண்ணையைக் கண்டுட்டன்டா" எண்டு பாவலன் அடிக்கடி சொல்லுவான். துரதிஸ்ட வசமாக 20.08.98 நடந்த சண்டையில் நான் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டேன்.

அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. நான் களமுனையிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படப் போகின்றேன் என்று. நான் களமுனையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அகற்றப்பட்ட பின் பாவலனே எனது பணிகளையும் சேர்த்துப் பார்த்திருந்தான். நான் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயம் எனக்கு ஒரு மடலை அனுப்பியிருந்தான். அதில் "டேய் நீசுமந்த அந்த இலட்சியத்தை நான் சேர்த்துச் சுமக்கின்றேன். கெதியாய் வா. ரெண்டுபேரும் சேர்ந்து முதன் முதல் 6 ஆமியைக் கொண்டது பொல் 600 பேரைக் கொல்லுவம்டா. டேய் நான் நினைச்சண்டா நீ செத்திட்டாய் எண்டு. நீ விரைவில் சுகமாகி சண்டைக்கு என்னோடை வர ஈழத்தாயைப் பிரார்த்திக்கின்றேன். அன்புடன் - தமிழ்த்தாய் மகன் பாவலன் (அஜந்தன்) என்று எழுதியிருந்தது.

எனக்கு அழுகை வந்தது. இருந்தும் என்ன செய்வது இருவரும் இணைந்து பணியாற்ற கடைசிவரை முடியவில்லை. ஜெயசிக்குறூய் சண்டைக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் போது இவனின் பங்கு முக்கிய மானது. அத்துடன் ஆனையிறவுத் தளம் தாக்கியழிப்பதற்காக பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா தலைமையில் இத்தாவிலில் விடுதலைப்புலிகள் தரையிறங்கிய போதும் இவன் முக்கிய பங்காற்றினான். குறிப்பாக இத்தாவிலில் தரையிறங்கிய பால்ராஜ் அண்ணாவுடன் சென்ற லெப்.கேணல் ராஜசிங்கன், கேணல் நகுலன் ஆகியோருடன் சென்று தலையிறங்கியவன் பாவலன். ஒரு கட்டத்தில் இராணுவம் பால்ராஜ் அண்ணா அவர்களை நெருங்கிய வேளையில் அதைத்தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியைச் சேர்ந்த தென்னவன், கேணல் நகுலன் ஆகியோருடன் இணைந்து பாவலன் தொடராக 9 மணிநேரச் சண்டையில் ஈடுபட்டு தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களைப் பெற்றான்.

இதன்போது இவனின் சகோதரி ஒன்றையும் பளைப் பகுதியில் நடந்த ஓயாத அலைகள் -03 நடவடிக்கையின் போது நாட்டிற்காக இழந்தான். அதன் பின்னர் இடம் பெற்ற தீச்சுவாலை நடவடிக்கையில் காயமடைந்தான். பின்னர் சமாதான முயற்சியி;ன் போது விடுதலைப்புலிகள் யாழ் சென்ற போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அரசியல் துறையில் இணைக்கப்பட்டு அவர்களுடன் சென்று பணியாற்றினான். இந்தக் காலத்தில் தான் சந்தர்ப்பம் காரணமாக நான் புலம் பெயர் நாடொன்றுக்கு வந்திருந்தேன். அங்கு வந்தபின்னும் அவனது தொடர்பு மீண்டும் எனக்குக் கிடைத்தது. பின்னர் சமாதான முயற்சி முறிவடைந்த பின்னர். வன்னி திரும்பி சாள்ஸ் அன்ரனிச் சிறப்புப் படையின் அரசியல்ப் பொறுப்பாளராகச் செயற்பட்டான். இந்தக் காலத்தில்தான் வன்னிமீதான இறுதிக்கட்ட யுத்தம் தொடங்கியது. இந்த யுத்தத்தின் போது மடு களமுனைக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பாவலன். 2008 மே மாதம் பண்டிவிரிச்சான் களமுனையில் காயமடைந்தான்.

இதனால் இவனது வலது கால் பாதம் பலத்த சேதம் அடைந்தது. சிறிதுகால மருத்துவ ஓய்வுகளின் பின் மீண்டும் தாயகத்துக்கான தன்பணியைத் தொடர்ந்தான். இந்த நேரத்தில் தான் வன்னி மேற்கின் பெரும்பாகம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் விழுங்கப்பட மக்கள் அனைவரும் வன்னி கிழக்கை நோக்கி நகர்ந்த போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுதற் பொருட்டு பாவலனை நியமித்திருந்தார். பின்னர் வன்னியின் சுருக்கு இறுகிய போது பாவலன் முகமாலை களமுனையில் எல்லைக்கல்லாக நின்றான். பின்னர் முகமாலைப் பகுதியை விட்டு புலிகள் பின்வாங்கிய போது விசுவமடு சென்று மக்களின் பணிகளை மேற்கொண்டவன். இதன் போது எனக்கு மீண்டும் அவனது தொடர்பு கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக எனக்கு அடிக்கடி கூறுவான். குறிப்பாக மக்கள் படும் அவலங்கள் அவனை வாட்டியது.

இருந்தும் காலத்தின் கட்டாயம் அவனை மீண்டும் களமுனைக்கு செல்ல தூண்டியது. அவன் களமுனைக்கு செல்வதற்கு ஒரு சில நாட்கள் முன்பு (25.01.09) என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தான். அதன்போது அவனிடம் நான் ஜனவரி 31ஆம் திகதி லண்டனில் மாபெரும் கண்டணப் பேரணி நடைபெற இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவன் களமுனையின் யதார்த்த நிலைமை எதிர்கால செயற்பாடுகள் ஆகியன பற்றி விரிவாகக் கதைத்ததான். அதில் அவன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள் என் மனதை இன்னும் வாட்டிநிற்கின்றன. "மச்சான் நான் சண்டைக்குப் போறன். ஆனால் திரும்பி வரமாட்டன். ஏனெண்டால் நிலைமை மோசமடா. இனி நீங்களும் தான் ஏதாவது செய்யவேணும். அண்ணையைக் காப்பாற்றோணும் அவருக்கு ஒண்டும் நடக்ககூடாது.

நாங்கள் இல்லாட்டிக்கும் அண்ணைக்கு நீங்கள் துணையாக நின்று தமிழீழ இலட்சியத்தை வெறெடுக்ககோணும் மச்சான். கால் ஒண்டு துண்டாய் ஏலாது முடிந்தால் கரும்புலியாகப் போகலாம் இவங்கள் விடுறாங்கள் இல்லை. சரி மைச்சான் நான் வைக்கிறன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்." என்று அவன் கூறி முடிப்பதற்குள் எனது கண்கள் கனத்துவிட்டன. அன்று தான் இறுதியாக அவனுடைய குரலைக் கேட்டேன். அதுவும் தொடர்புகள் பலதடவை துண்டிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு பல சிரமங்களின் மத்தியில் அவனுடன் கதைத்தேன். இதன் பின் பாவலன் களமுனை நோக்கி (01.02.09) நகர்ந்து கொண்டிருந்தபோது எங்கோ இருந்து காலன் வடிவில் வந்த எறிகணை அவனது கழுத்துப்பகுதியைப் பதம்பார்க்க அவன் மேஜர் பாவலனாக எம்மனங்களில் வாழ ஆரம்பித்தான்.

அது மட்டுமல்ல அவன் ஒரு சிறந்த கலைஞனும் கூட தமிழீழப்பாடகர்கள் வசீகரன், நிரோஜன் அவர்கள் பாடிய "ஈரவிழி மூடும் போது ஏனம்மா கண்ணீர்க் கோடு என்ற பாடல்வரிகளுக்கு கதாபாத்திரமாக நடித்து ஒளிவடிவம் கொடுத்தவன் பாவலன்.

இன்று அந்த மாவீரனைப் போல் கிட்டத்தட்ட 37,000 மாவீரர்களது வரலாறும் வித்தியாசமானது. கொள்கை உணர்வு மிக்கது. இந்த மாவீரர்களின் நினைவு நாளில் உங்கள் கல்லறைகளில் எங்களால் தீபங்கள் ஏற்றமுடியாது. உங்கள் கல்லறைகளையும் எங்களால் காண முடியாது. அதுவரை ஒவ்வொரு ஈழத்தமிழர் மனங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள். என்று தாயகம் மீளுகின்றதோ அன்று உங்கள் கல்லறைகள் மீது தீபம் எரியும்.

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.

இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').

அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.

தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.

இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.
இடுகையிட்டது முதல்மனிதன் ,,,, நேரம் 1:37 am







தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.


2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

மேஜர் பசிலன்



மேஜர் பசிலன்

நல்லையா அமிர்தலிங்கம்

முல்லைத்தீவு

வீரமரணம் 11-8-1987


சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுக்களை அள்ளி வழங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.

ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி கண்ட கண்ட இடங்களில் சுடப்படுவதையும் கண்ணெதிரே கண்டபோதுதான் அகிம்சை தம்மைப் பாதுகாக்காது என தமிழ் மக்கள் புரிந்துகொண்டனர்.

ஆயுதமேந்தி உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.

சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.

உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமுதலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.
தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை.

முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.

ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளிhயவான்.

தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.

கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் ஸெல் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.

தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்.....
மேஜர் பசிலன்.

ஆனந்தபுரம் விடிவெள்ளிகள்
சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010 19:28 வேங்கைச்செல்வன்
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.

அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் - ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து - முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.
விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் - 1997 ஆம் ஆண்டில் - தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.
அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.
சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.
அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.
ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.
தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.
நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.
வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.
"ஐஞ்சிஞ்சி" என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.
இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.
மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.
ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.
ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.
ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 05 ஏப்ர

சுவடுகள் - 8. கப்டன் அருணன்


சுவடுகள் - 8. கப்டன் அருணன்

அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.
அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.
அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.
அப்போது அந்த முனையிலே அதிகம் சண்டை நடப்பதில்லை. எதிரி ஒலுமடு நோக்கிய முன்னேற்ற முயற்சியைத்தான் முக்கியமாக்கியிருந்தான். ஒட்டுசுட்டான் பக்கமாக முன்னேற்ற முயற்சிகள் செய்யவில்லை. எதிரியின் சிறு ரோந்து அணிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவதும், அவற்றை எதிர்த்துத் தாக்குதல் நடத்துவதுமாகவே அக்களமுனை அப்போது இருந்தது.
இடையிடையே களமுனையிலிருந்து ஒருநாள், இருநாள் என விடுப்பெடுத்து எம்மைப் பார்க்க வருவான் அருணன். சிலவேளைகளில் நிர்வாக அலுவலாகவும் நாமிருக்கும் இடத்துக்கு வந்து போவான். சிறுத்தைப் படையணியின் நிர்வாகமும் அப்போது கற்சிலைமடுவை அண்டியே இயங்கிக் கொண்டிருந்தது.
அருணன் எம்மிடம் வரும் நாட்களின் இரவுகள் மிக இனிமையாகக் கழியும். அவனிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஏராளமான பகிடிகள், கூத்துப்பாடல்கள். அவன் எங்களிடம் எதிர்பார்ப்பது வெறுந் தேனீர்.
அருணனுக்கு உலகில் மிகப்பிடித்தமானது வெறுந்தேனீராகத்தான் இருக்கும். அந்த விடயத்தில் அவனோர் அதிசயப்பிறவிதான். ஒன்றிரண்டு குவளை என்ற கணக்கில் அவன் தேனீர் குடிப்பதில்லை. லீற்றர் கணக்கில்தான் குடிப்பான். நல்ல சாயம் போட்ட வெறுந்தேனீர் என்றால் அவனுக்குப் போதும், அதற்காக எதுவும் செய்வான்.
வன்னியின் போர்க்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு, சீனித் தட்டுப்பாடு என்று மாறிமாறி வருவதுண்டு. ஜெயசிக்குறு காலம் முழுவதுமே களமுனையில் உணவுப்பிரச்சனை குறிப்பிட்டளவில் இருந்துகொண்டுதானிருந்தது. சரியான உணவில்லாமல், அதேநேரம் மிகமிகக் கடினமான வேலைகளைச் செய்துதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடந்துகொண்டிருந்தது. அது தனிவரலாறு.
இடையிடையே சீனித் தட்டுப்பாடு வருவதுண்டு. அப்போதெல்லாம் பொதுமக்களும் போராளிகளும் ‘நக்குத்தண்ணி’ குடிக்கத் தொடங்குவார்கள். நக்குத்தண்ணி எனப்படுவது, ஓர் உள்ளங்கையில் சிறதளவு சீனியை வைத்துக்கொண்டு அதை நக்கி நக்கி சீனி போடாத தேனீரைக் குடிப்பது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திலும் இந்த முறை சிலநாட்கள் இருந்தது. ஆனால் வன்னியில் இது வழக்கமாகவே போய்விட்ட ஒரு நடைமுறை.
அப்படியான சீனித் தட்டுப்பாட்டுக்குரிய காலங்கள் மிகச் சிரமமானவை. அதுவும் களமுனையில் அது இன்னும் கொடிதாயிருக்கும். கடின வேலைகளுக்கிடையில் நல்ல தேனீர்கூட குடிக்க முடியாது. பின்வந்த காலங்களில் வீரைப்பழத்தில் ‘ஜாம்’ காய்ச்சி அதைத் தொட்டு நக்கியே தேனீர் குடிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தனர் போராளிகள். ஒரு மாதத்துக்கென பங்கிட்டு வழங்கப்படும் சீனியை புட்டோடு சாப்பிடப் பயன்படுத்திக் கொண்டு வீரைப்பழ ஜாமோடு தேனீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட களமுனைகளுமுண்டு.
அருணன் எம்மிடம் வருவதென்றால் முதல்நாளே களமுனையிலிருந்து அறவித்து விடுவான். நாங்களும் அதற்கேற்றாற்போல் அடுக்குப் பண்ணுவோம். அங்கிங்கே என்று வாங்கி மரவள்ளிக் கிழங்கோ பச்சைக் கச்சானோ அவித்துக் கொடுப்போம். இப்படியாகப் பின்தளத்துக்கு வரும் வேளைகளில்தான் அவர்கள் ஒழுங்கான சாப்பாட்டைக் காண்பார்கள் என்பதும் வயிறார உண்பார்கள் என்பதும் எமக்குத் தெரியும். ஒருமுறை வந்தால் ஓரிரவு தங்கித்தான் செல்வான் அருணன். அவன் தங்கும் இரவு எமக்குக் குதூகலமாகக் கழியும்.
பெரும்பாலும் காத்தவராயன் கூத்துத்தான் பாடுவான். நல்ல குரல் வளம் அவனுக்கு. பெருங்குரலெடுத்துத்தான் பாடுவான். அங்கம் பக்கத்து வீடுகள் பலவற்றுக்கு அன்றிரவு நித்திரை முழிப்பாகத்தான் இருந்திருக்கும். பலர் இரசித்திருப்பார்கள், சிலர் திட்டியிருப்பார்கள். தேனீர் இடைவிடாமல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பாடல்கள் தானாகக் கொட்டிக் கொண்டிருக்கும். இடையிடையே களமுனையில் நடந்த பம்பல்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். நாங்கள் படுக்க எப்படியும் பன்னிரண்டு மணி தாண்டும். வழமையான அலுப்பூட்டும் இரவுகளிலிருந்து விடுதலைபெற அருணன் வரும் நாட்களை நாங்கள் ஆவலோடு பார்த்திருப்போம்.
அருணன் நீண்டநாட்களாக வரவில்லை. இடையிடையே வோக்கியில் கதைத்துக் கொள்வான். திடீரென ஒருநாள் செய்தி சொல்லப்பட்டது, அடுத்தநாள் அருணன் வருவதாக. அப்போது சீனித் தட்டுப்பாடு மாதம். எமக்கான வழங்கல்கள் அரைவாசியாகக் குறைந்திருந்தன. ஆனாலும் அடுத்தநாள் வரப்போகும் அருணனுக்கான எம்மிடமிருந்த சீனி அனைத்தையும் ஒதுக்கினோம். ‘ரெண்டு ஜார் பிளேன் ரீ போட இவ்வளவும் காணும். இந்தமுறை அருணனைச் சமாளிக்கலாம்’ என்று வழமையாக அருணனுக்கான தேனீர் தயாரிக்கும் மறவன் சொல்லிக் கொண்டான். இந்தமுறை வெள்ளை அண்ணையிடமிருந்து பச்சைக்கச்சான் வாங்கி வைத்துக் கொண்டோம்.
மறுநாள் பின்னேர வகுப்புக்களுக்கு வராமல் மறவன் வீட்டிலேயே நின்றுகொண்டான். ‘அருணன் வீட்ட வரேக்க ஒராள் நிக்கவேணும், அதோட கச்சான் அவிக்கிற வேலை கிடக்கு’ என்று சொல்லிக் கொண்டான். அன்று மாலை வகுப்புக்கள் முடிந்து எமது வீட்டுக்கு வந்தபோது அருணன் வந்திருக்கவில்லை. ‘சரி ஏதாவது வேலையிருக்கும், முடிச்சிட்டு வருவான்’ என்று இருந்தோம். நேரம் ஏழுமணியாகியது. அருணன் வரவில்லை. ஆனால் ஒரு செய்தி வந்தது.
களமுனையிலிருந்து கற்சிலைமடு நோக்கி வந்துகொண்டிருந்த அருணனும் இன்னொரு போராளியும் எதிரியின் பதுங்கித் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்தனர் என்ற செய்தியே அது.
அதன்பிறகு வந்த பல இரவுகள் வழமைபோலவே கழிந்தன. வழமையான சலிப்பூட்டும் இரவுகளை மாற்ற அருணன் வருவான் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாவது முன்பு இருந்தது. இப்போது அதுவுமில்லை.