செவ்வாய், 29 மார்ச், 2011

மாவீரர் நாதன் கஜன் நினைவு சுமந்து

“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கயனின் திருநாமம்” தரணி தினம் கூறும்.. ..

உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் -

லெப் கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.

சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கைவகுப்பாளனுமாகிய கப்டன் கயனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.

உன்னத இலட்சியத்துக்காக எமது ஆருயிர் நண்பர்களான லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கயனும் எம்மை விட்டுப் பிரிந்து 13 ஆண்டுகள் ஓடிக்களிந்து விட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி தொடர்ந்து பயணிக்கிறது.

எமது இலட்சியத்தை நோக்கிய விடுதலை பயணத்துக்கு சர்வதேச ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த சிங்கள அரசினாலும் சில ஏகாதிபத்திய சக்திகளினாலும் கைக்கூலிகளினாலும் திட்ட மிடப்பட்ட தமிழின தேசிய அடையாளச்சிதைப்பின் எதிர்ப்பை முறியடிப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வைராக்கியத்துடன் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளை முறியடிப்பதை விட தமிழீழ மக்களின் ஆத்ம பலத்தை முறியடிப்பதிலேயே சிங்கள மற்றும் அதற்க்கு துணைபுரியும் சக்திகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. உண்மையில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மக்களின் ஆத்ம பலத்தில் தான் தங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் வதைபட்டுக்கிடக்கும் சிறைப்பட்ட அகதி முகாம் வாழ்வுக்கு மத்தியிலும் விடுதலைப்போராட்டம் உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அரசியல் வடிவம் எடுத்திருப்பது தமிழ் மக்களின் ஆத்ம பலத்தினால் தான் என்பதை சர்வதேச சமுதாயம் உணரத்தொடங்கியுள்ளது.

புதியதோர் உலகம் செய்யப்புறப்பட்டு நிற்க்கும் இளம்தலைமுறைதான் இன்று எமது ஆத்மபலம் அந்த மாபெரும் சக்திதான் எமது இலட்சியத்தின் நம்பிக்கை. இந்த ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க ஆதாரமாய் அமையும் இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும் அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம்.

எனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு எமது வணக்கங்கள்

திங்கள், 28 மார்ச், 2011

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து ...



நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.


நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.


மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்


பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.


சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.


நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.


கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு


இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.


மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.


விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.


இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.


எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.


எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.


மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.


சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.


மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.


மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.


எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.


இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.


உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.


நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.


சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.


எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.


அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்


மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.


கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.


எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.


நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.


எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.


ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.


தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.


ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.


எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.


குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.


தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.


எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.


தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.


விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.


இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்

திங்கள், 31 ஜனவரி, 2011

















தம்பியின்படை வெல்லட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
தம்பி வா ! தலைமை ஏற்க வா!
தமிழீழம் மீட்க தடை உடைத்து வா !
வவுனியாவுக்கு வா! வலிமை சேர்க்க வா!

முள்ளி வாய்க்கால் போர் முற்றுப் பெறவில்லை.
மூண்டேலும் நாள் வெகு தூரமில்லை
தமிழனை எதிர்க்கும் பீரங்கி குண்டு
சமையல் அறையின் முள்ளங்கி தண்டு.

வானத்தை கிழிக்கும் வான் படை எங்கே?
ஐம்புலன்களை அடக்கும் ஐந்தாம் படை எங்கே?
கடல் அலைகளை அடக்கும் கடல் புலி படை எங்கே?
பேரழிவுகளை ஏற்படுத்தும் பெண்புலிப் படை எங்கே?
தமிழீழம் மீட்க்கும் தற்கொடைப் படை எங்கே?

அயல் நாட்டு நீதிமன்றம் அரசியல் இயக்கம் என்று
அங்கீகாரம் வழங்கியது
தமிழ் நாட்டு நீதி மன்றமோ தகர்க்க நினைக்கிறது
தம்பி உன்னை அயல் நாடு அள்ளி அணைக்கிறது
தம்பி தமிழ் நாடோ தள்ளி வைக்கிறது.

அங்கு கோத்தபாய ராஜபக்சேவுக்கு
கொலை செய்ய ஆசை -அந்த
கொலைகார பயலுக்கு இங்கு
கோவில்களிலே பூஜை.

கோபாலபுரத்து கொத்தடிமைக்கு
கொள்ளை அடிக்க ஆசை
இனம் மானம் உள்ளவனுக்கு கேட்கும்
இனத்தை அழிக்கும் ஓசை.

கலிங்கத்து போர் வீரர் களம் அமைத்தால்
கல்லறையை உடைத்து களத்திற்கு வருவார்கள் .
மானத்து காக்க, மரணத்தை சந்திப்போம்
துரோகத்து தூள் தூளாக்க துணை நிற்போம்
துன்பம் வரினும் துட்சமென எதிர் கொள்வோம்.
தம்பியின் தலைமையை ஏற்போம்,தடைகளை உடைப்போம்
தம்பியின் படை வெல்லட்டும் தமிழீழம் மலரட்டும்.
அன்புடன் ரங்கன்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மேஜர் மில்ரன்




"தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்." அவனது பள்ளித் தோழி விமலா அப்படித்தான் நினைவு கூருகிறாள்.

அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், "அவனோட ஆரெண்டு இல்லை - எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்."

அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம்.

அவன் பிறந்து வளர்ந்த அவனது சொந்தக் கிராமத்தின் மூட நம்பிக்கைகளும் அவனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தாலும், தன் பதினெட்டு வயதில் தேர்ந்தெடுத்த புரட்சிகரமான பாதை அவனுள் முற்போக்கான சிந்தனைக்கு வழிகாட்டியதென்றே கூறவேண்டும்.

அவன் போராளியாகி பொறுப்பாளனாகி சீ.டி -125 உந்துருளியில் வீட்டுக்குப் போனால், அங்கு இன்னமும் பழமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் புதுமை பற்றிய வாக்கு வாதங்கள்தான்.

"உந்தக் காட்டைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு றோட்டுக்கு வாங்கோ" அவனது வீடு ஏ-9 வீதிக்கருகில் வருவதற்கு அவனது வாதம்தான் காரணமாயிற்று.

ஆரம்பத்தில் விவாதங்கள் இருப்பினும் பிற்காலத்தில் அவனது கட்டளையின் கீழ் 'வீடு' வந்ததென்றே கூறல் வேண்டும். அவனது கட்டளைகளில் பிரதானமானது "வீட்டுக்கு வாற போராளிகளுக்கு தேநீர் கொடுத்து, சாப்பாடு கொடுத்து அனுப்பவேணும். அவையளும் உங்கட பிள்ளைகள்தான்."

இந்த உணர்வானது இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே அவனிடம் குடிகொண்டிருந்தது.
1989 அவன் இயக்கத்துக்கென வந்து வருடம் ஒன்று கடந்திருந்தது.

பாலமோட்டை, கொந்தக்காரக்குளப் பகுதியில் அணி ஒன்றின் பொறுப்பாளனாய் அவன் நடமாடும் செய்தி, உறவினர் வாயிலாக பெற்றோரின் காதுகளை எட்டியது.

'இந்தியப் படைகளினது கண்களில் மண்ணைத் தூவி நடமாடும் தன் பிள்ளையைப் பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல' என்று தெரிந்தும் பெற்றோரின் மனசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.

தமது வசதிக்கேற்ப சிறு பலகாரப் பொதியுடன் அவன் நடமாடும் கிராமங்களில் அவனைத் தேடினர் பெற்றோர்.
சில வாரங்கள் கழித்து அவர்களிடம் அவன் வந்தான்.

"அம்மா, நீங்கள் என்னைத் தேடித் திரியிறது எனக்கு எப்பவோ தெரியும். என்னைக் காணவில்லை என நீங்கள் போவியள் எண்டு நினைச்சன். ஆனால் நீங்கள் என்னைக் கண்டுதான் போறதெண்ட முடிவோட நிக்கிறியள்... அம்மா, என்னைப்போலதான் என்னோட நிற்கிற பெடியளும் தங்கட அம்மா, அப்பாவைப் பார்க்காமல் நிக்கினம்... என்னை மட்டும் பார்க்க வந்திருக்கிறது சரியில்லை அம்மா. அதுவும் நான் இரு அணிக்குப் பொறுப்பாக இருக்கிற இந்நிலையில்... நினைக்கவே மனம் ஏற்குது இல்லையம்மா."

அவனது முதிர்வான சில நிமிடப் பேச்சு அம்மாவை கண்கலங்கி நிற்கவைக்க... "அம்மா நான் போயிற்று வாறன் - உந்தப் பலகாரப்பொதி எங்கள் எல்லோருக்கும் போதாது - இனி சந்தர்ப்பம் கிடைச்சா எல்லோருக்கும் சேர்த்துச் செய்து வாங்கோ" அவன் சென்று அடர்ந்த காட்டினுள் முழுமையாக மறையும்வரை அம்மா பார்த்துக் கொண்டேயிருக்க, "அவன் போராட என்று புறப்பட்டவன், தன்ர கடமையை முடிச்சு வீட்டுக்கு வருவான்" என அப்பாதான் அம்மாவின் கையைப் பிடிச்சு கூட்டிவந்தார்.

அம்மா சந்திச்சு சில மாதங்களின் பின்பு, "கொந்தக்கார குளப் பகுதியில இந்தியனாமிக்கும், எங்கட பெடியளுக்குமிடையில சண்டையாம், பெடியளிலையும் இழப்பாம்" அயலவரின் செய்தியால் அம்மா ஒடிந்துபோனா. அம்மாவை நிமிர்த்தும் செய்தி சிலவாரங்கள் கழித்துத்தான் வந்தடைந்தது.



தேசியத் தலைவருடன் மேஜர் மில்ரன்

அந்தச் சம்பவம் பற்றி அவன் இப்படித்தான் விபரிப்பான், "சுடலைக்குள்ள கிடந்தால் ஆரும் வரமாட்டாங்கள் எண்டு சுடலைக்க கிடக்கப் போய், இந்தியன் ஆமி 'பிறன்' எல்.எம்.ஜீ யால போட்டானே ஒரு போடு. சன்னம் ஒண்டு என்ர கையை முறிச்சுக்கொண்டு போயிற்று. அதில இருந்து இந்தியன் ஆமிக்கு நாங்கள் வைச்ச சங்கேதப் பெயர் (CODE NAME) 'சுடலைப்பேய்.'

அந்த நேரத்தில், அடர்ந்த காட்டினுள் உள்ள முகாம்களுக்கான வழங்கல்கள் அனைத்தும் நகருக்குள்ளிருந்து, கிராமப்புறத்துக்காகி அங்கிருந்து முதுகுச் சுமையில்தான் காட்டினுள் செல்லும்.

நிலத்தில் கொட்டுண்டும் தானியங்களை காட்டுக்கோழி அல்லது மயில் பொறுக்காது விடின், ஐம்பது கிலோ அரிசிக்காகக்கூட இரத்தம் சிந்தவேண்டிய அபாயகரமான சூழலில் அவனது முள்ளந்தண்டும் நூற்றுக்கணக்கான மூட்டைகளைச் சுமந்து போராளிகளுக்கான வழங்கல்களை எடுத்துச் சென்றிருந்தது.

இறுக்கமான அந்தப் போர்ச் சூழலில் ஊருக்குள் நடமாடும்போது அசாதாரணமான மறைப்பிடமே வாழ்விடமாக மாறும். நான்கு அடி சதுர இடத்தினுள் ஆறடி உடலை மறைத்து துயிலவேண்டிய நிர்ப்பந்தம் எழும். அப்பொழுதுகளில் எல்லாம், "ஆம்பிளப்பிள்ளை எண்டால் காலை நீட்டி நிமிர்ந்து படுக்கவேணும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்."

"இப்ப அப்பா வந்து பார்த்தார் எண்டால் 'ஆம்பிளப் பிள்ளையெண்டால் குறண்டிப் படுக்கவும் பழகவேணும்' எண்டு சொல்லுவார்." என முடிப்பான்.

கடினமான வாழ்வை, இக்கட்டான ஆபத்தான நிலைமையை, தளம்பாது மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவனே போராளி என்ற தகுதியைப் பெறுவான் என்ற அடிப்படையில் அவனிடமும் 'அது' நிரம்பியே காணப்பட்டது.

அதனால்தான் மாங்குளம், கனகராயன்குளம், பன்றிக்கெய்தகுளம் என தன் அணியை வழிநடத்தி இந்தியப் படையினருடன் போரிட அவனால் முடிந்தது.

இந்தியப் படைகள் எமது மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட 1990களில் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகளினுள் அவனும் ஒருவன்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைக்கூலிகளாய்ச் செயற்பட்டோர், இன்னும் செயற்பட இருப்போரை களைந்து போராட்டத்தை வீறுகொள்ள வைக்கவேண்டிய பாரிய பொறுப்பு புலனாய்வுத்துறையின் மிக முக்கிய பணியாகியபோது, அவை சார்ந்த பணிகளே அவனுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்டதெனினும், அவன் தன்னை போர்க்குணம் மிக்க போராளியாக உருவாக்கியிருந்தமை, புலனாய்வுத்துறைச் சண்டை அணித் தளபதிகளில் ஒருவனாக அவனை மாற்றியது.

போர்க்குணத்துடன் (MORALE) உற்சாகத்துடன் போராளிகளை வைத்திருந்து வழிநடத்துவது, என்பதில் லெப்.கேணல் கோபியைப்போல் அவனும் பேசப்பட வேண்டியவனே.

இந்தியப் படையுடனான போர்க் காலத்தில் எதிரியின் வரவை எதிர்கொள்வதற்காய் துப்பாக்கியின் விசை வில்லினுள் சுடுவிரலை வைத்தபடியே நடமாடும் அவனது விழிப்புணர்வு அவனது வாழ்வில் தொடர்கதையே.

"துப்பாக்கியை விட்டுட்டு விலகக்கூடாது...

"படுக்கும்போது துப்பாக்கி எடுக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்..." போன்ற கட்டளைகளுடன் கோல்சர் கட்டும் முறை, துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய முறை, அதன் துப்பரவு, பயிற்சிகள், தண்டனைகள் என தனது போராளிகளை எப்போதும் உசாருடனேயே வைத்திருப்பான்.

இந்தியப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் தன் துப்பாக்கியை இழந்த ஆனந்தன்- பிறிதொரு நாள் இந்தியப் படையினரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றுவதற்காகத் தன் உயிரையே இழந்த கதையை, அவன் தன் போராளிகளுக்கு அடிக்கடி நினைவு படுத்துவான்.

இந்தியப் படையினருடனான சண்டையில் முறிந்த கை வீங்க வீங்க சக போராளிகளுடன் இணைந்து பங்கர் வெட்டுவது தொடக்கம் சமையல் வரை போராளிகளுடன் ஒருவனாக நிற்பான். எதிரி 'எவ்வாறெல்லாம்' நகருவான் நாம் 'எவ்வாறெல்லாம்' பதிலடி கொடுக்கவேண்டும், அவை பற்றிய கதைகளைத் தவிர அம்முகாமில் வேறு கதைகள் வருவது மிகக்குறைவு.

போராளிகளுக்குரிய நேரத்திட்டமிடலை அவனேதான் போட்டுக் கொடுத்து, அவர்களுடன் நின்று பணியினைக் கவனிக்கும் அவனது செயல், லெப்.கேணல் கோபியின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டதொன்று. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாதுகாப்பு அணியினை வழிநடத்தும் பொறுப்பினை எடுத்து சில வாரங்களின் பின், ஒருநாள் அவரிடம் 'வேண்டிக் கட்டிக்கொண்டு' இப்படித்தான் என்னிடம் கூறினான்.

"ஒவ்வொரு போராளியும் பொறுப்பாளராய் வருமுன் சில மாதங்களேனும் - அவருக்குப் பக்கத்தில நிற்கவேணும் - அப்பதான் அவருடைய எதிர்பார்க்கையை விளங்கிக்கொண்டு பெடியளையும் வழிநடத்துவினம், தங்களையும் வழிநடத்துவினம்."

அவனின்ர வாகன ஓட்டத்தைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும். வாகனம் வலம், இடம் என சின்ன ஆட்டத்தோட வேகமாய் வருகுதெண்டால் அவன்தான் ஓடிவாறான் என்று ஊகிக்கிறது அவ்வளவு சிரமமான விடயமல்ல.

"மாட்டின்ர நாணயத்தைப் பிடித்த கை 'ஸ்ரேறிங்'ஐப் (STEERING) பிடித்தால், இப்படித்தான் வாகனம் ஆடி ஆடி வரும்" எண்டு லெப்.கேணல் கோபி கிண்டலடித்தால் "ப்பூ... இதை இன்னொருத்தர் சொன்னால் கேட்கலாம்" என மறுத்தான் போட்டு விடுவான்.

ஒரு சமயம் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவனது கிராமப் பக்கம் வந்தவேளை அவனது வீட்டில்தான் மதியச் சாப்பாடு.

இந்தச் செய்தியை அவனது காதில் நான்தான் போட்டது.

"அம்மா நல்லாச் சமைச்சவவே, உறைப்பை சற்று கூடுதலாய்ப் போட்டிப்பாவே, சோறு என்ன அடிப்பிடிக்காமல் இருந்திச்சோ?" அவனது ஆதங்கம் எனக்கும் புரிய அதிகநேரம் எடுக்கவில்லை. உண்மையில என் வாழ்நாளில் அவனது அம்மாவின் கைபட்ட சமையலைவிட உருசையான சாப்பாட்டை இன்னும் கண்டதில்லை. எண்டாலும் "சமையல் அவ்வளவு வாய்ப்பில்லைத்தான்" என்ற பொய்யை வேண்டுமென்றே அவனுக்குச் சொன்னேன்.

"நீ இயக்கத்துக்குப் போய்த்தான் சமையல் படிச்சனி. நீபிறக்கிறதுக்கு முதலே நான் சமையல் படிச்சனான்" இப்படித்தான் தாயிடம் பின்னொரு நாளில் அவன் வேண்டிக் கட்டியதாய்க் கேள்வி.

பிற்காலத்தில் புலனாய்வு நிர்வாகப் பணிகளினுள் உள்வாங்கப்பட்டான். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேதான் அவனது பணி.

அச்சமயம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வன்னியைச் சொந்த இடமாகக்கொண்ட ஒரு போராளி, வன்னியில் உள்ள தன் தங்கையை பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்குக் கதைத்துவிட்டு வாருங்கள் என்பதை மட்டுமே சொல்லிவிட, அவளைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு அந்தச் செய்தியை தொலைத்தொடர்பு சாதனத்தினூடாக அறிவித்த அவனது செயல் போராளிகளுடனான நேசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

1995, யாழ் இடம்பெயர்வின் பின் எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் - புலிகளின் பலம் எதுவென நிரூபிக்கவும் - நீண்ட கடற்றொடர் ஒன்றினைக் கைப்பற்றவும் திட்டமிடப்பட்ட முல்லைச் சிங்களப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 01 தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகள் ஆரம்பமாகியிருந்த வேளை.

இரகசிய பயணம் ஒன்றிற்கான ஆவணங்களை தயார்செய்து கொண்டிருந்த அவனும் சண்டையின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வுத்துறைத் தாக்குதல் படையணியுள் உள்வாங்கப்பட்டான்.

'பயிற்சி' நினைச்சுப் பார்க்க முடியாத அப்படி ஒரு கடும் பயிற்சி. சில மாதங்கள் நீண்ட பயிற்சி. பல படைணிகள் ஒன்று சேர்ந்திருந்த தளத்தில் புலனாய்வுத்துறைப் படையணியும் பயிற்சியில் முன்னணிவகிக்க ஊக்கியானவர்களுள் அவனும் ஒருவன்.

வட்டுவாகல் பாலத்தின் வலதுபக்க முன்னணி காவலரணின் தடையுடைத்து உட்புகும் அணி ஒன்றின் பொறுப்பாளர் அவன்.

18.07.1996 அதிகாலை முதலில் சண்டையைத் தொடங்கும் அணிகளில் அவனது அணியும் ஒன்று. களம் திறந்த பொழுதில் எதிரியின் கடும் எறிகணை வீச்சில் - எறிகணை ஒன்று அவனருகே வெடிக்க அவன் எடுத்துச் சென்ற 'ரோப்பிற்ரோ' (Torpedo) அவனுடன் வெடிக்க தடைகளுடன் அவனது உடலும் தகர்ந்து போயிற்று. வெற்றிக்காக உழைத்து - அந்தச் செய்தியைக் கேட்குமுன் வீரச்சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களினுள் அவனும் ஒருவன் ஆனான்.

அவனது உடல் அடையாளமின்றிப் போனதால், அவன் உயிர்நீத்த இடத்திலிருந்து இடுப்புப்பட்டி, கோல்சர், இன்னும் சிதறல்களை தேடித்தேடி எடுத்த அவனது தந்தை 'அவன் போராட என்று புறப்பட்டவன் தன் கடமையை முடித்து வீடு வருவான்' என்ற நம்பிக்கையுடன் இருக்க, அவனது படத்துக்கு விளக்கேற்றச் சென்றால், பல்லி சொல்லித் தடுப்பதாக அம்மா சொல்லுறா.

'குறி' சொல்பவன் ஒருவன் அண்ணன் உயிருடன் இருப்பதாகவும் மற்றொருவன் 'இல்லை' எண்டும் மாறிமாறி சொல்வதாக அன்புத் தங்கை சொல்கிறாள்.

அவன் இன்னமும் அவர்களுள் ஒருவனாக வாழ்கின்றான் . அதனால்த்தான் இன்னும் அவர்களால் அவனது இழப்பை ஏற்க முடியவில்லை. நான், மாவீரர் நாள் அன்று அவனது உடலை விதைத்த, கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்றேன் - அவனுக்கு விளக்கெரிக்க நிறையப்பேர் நின்றார்கள். அவனது பெற்றோரைத் தவிர.

சி.மாதுளா

புதன், 22 டிசம்பர், 2010