ஞாயிறு, 4 ஜூலை, 2010

புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளனர்.

வீரனவன் வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வான். அவன் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறான். விழுதெழுவான். இவர்கள் சாவினைக் கண்டு அஞ்சா, மானமுள்ள மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்வார்கள். உயிராயுதங்களாகி, காவியமாகி, எங்கள் மனங்களில் என்றும் அழியா ஓவியமாகி, தமிழினத்தின் காவல் புதல்வர்களாம் கரும்புலிகளுக்கு இன்று 05/07/2010 கரும்புலிகள் நாளில் வீரவணக்கங்கள் செலுத்தி தலை சாய்க்கின்றோம்.

கப்டன் மில்லர் (ஜனவரி 1, 1966 -ஜூலை 5, 1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார்.

கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்குகிறார்கள்.