திங்கள், 5 ஏப்ரல், 2010

தடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை









தடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை

1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.
தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம்.

எமது கற்கைநெறி மீண்டும் தொடங்கியது. சிரமத்துக்கு மத்தியிலும் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு வகுப்புக்களாவது நடந்துவிடும். ஒட்டுசுட்டான் நோக்கியோ முள்ளியவளை நோக்கியோ நகராமல் புளியங்குளத்தை நோக்கி நகர்வதே நெடுங்கேணி இராணுவத்தின் நோக்கமாக இருந்ததால் எமது பக்கத்தில் அதிக சிக்கலிருக்கவில்லை. ஆனால் மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள்.
ஒருநாள் காலை வகுப்புக்கென்று நாங்கள் அமர்ந்திருந்த நேரத்தில், ‘இன்று வகுப்பில்லை, முக்கிய விடயம் பற்றி உங்களோடு ஒருவர் பேசுவார்’ என்று கற்கைநெறிப் பொறுப்பாளர் சொன்னார். ஒரு பிக்-அப் வாகனம் வந்துநின்றது. ஒருவர் வந்து கதைக்கத் தொடங்கினார். அவர் கதைக்குமுன்னமே எமக்குள் இருந்த சிலரை வகுப்பறையிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அவர்களுள் இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
“உங்களை ஒரு வேலைக்காகக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லியிருக்கினம். அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். உங்களில சிலபேரை எடுக்க வேண்டாமெண்டு உங்கட தளபதிகள், பொறுப்பாளர்கள் சொன்னவை. அவையளைத்தான் முதலிலயே எழுப்பி அனுப்பீட்டம். நீங்கள் போற இடத்தில கஸ்டமான வேலையள் வரும். பெரிய வெயிற்றுகள் தூக்கிப் பறிக்கிற வேலை வரும். உடல்நிலை ஏலாத ஆக்கள் இப்பவே சொல்லிப் போடுங்கோ. அங்கபோய் நிண்டுகொண்டு கஸ்டப்பட்டால் அதால எல்லாருக்கும் பிரச்சினைதான். உங்களைக் கூட்டிக்கொண்டு போனபிறகு வேலை தொடர்பாக் கதைக்கிறன்”
எது தொடர்பான வேலை என்பது எம்மிற் சிலருக்கு உடனேயே விளங்கிவிட்டது. கூட்டிச்செல்ல வேண்டாமென்று படையணியால் சொல்லப்பட்டவர்களைப் பார்த்தால் இது ஏதோ தாக்குதலோடு தொடர்புபட்டது என்பதும் விளங்கிவிட்டது. ஏனென்றால் பயிற்சித் திட்டத்துக்கென அவர்கள் வரும்போது அவர்கள் நின்ற இடமும் பணியும் அப்படிப்பட்டது. அவர்களுள் ஒருவன் கப்டன் அன்பரசன்.
எம்மோடு வந்து கதைத்தவர் வேறு யாருமில்லை. மணியண்ணை. ‘மோட்டர் மணி’ என்று முன்பும் ‘ஆட்டி மணி’ என்று பிற்காலத்திலும் இயக்கத்தில் அறியப்பட்ட தளபதி மணிவண்ணன்தான் எம்மோடு வந்து கதைத்தார். அவரைப்பற்றி இயக்கம் முழுவதும் அறிந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவரைக் கண்டதில்லை. அப்போது வகுப்பறையில் இருந்த பலருக்கு தம்மோடு கதைப்பது யாரெனத் தெரிந்திருக்கவில்லை, அவர் கதைக்க முன்பு சொல்லப்படவுமில்லை.
எமக்கோ அது ஆட்லறியோடு தொடர்புபட்ட வேலையென்பது விளங்கிவிட்டது. அந்நேரத்தில் ஆட்லறிப் படையணியை ராயு அண்ணையும் மணியண்ணையும்தான் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் எவரிடமும் இதைப்பற்றிப் பேசவில்லை. அது இயக்க நடைமுறையுமன்று. நிறையப் பேருக்கு என்ன வேலை, தம்மோடு கதைப்பது யாரென்பது தெரியாமலேயே இருந்தது. எம்மை ஏற்கனவே மணியண்ணைக்குத் தெரியுமென்பதாலும், இந்த வேலை எது தொடர்பானதென்று நாம் ஊகித்திருப்போம் என்று அவர் கருதியதாலும் எம்மைத் தனியே அழைத்து ‘இந்த வேலைக்குச் சரிவராத ஆட்களை நீங்கள் தான் சொல்ல வேணும். ஏலாத ஆக்கள் அங்க வந்தால் பிறகு எல்லாருக்கும் சிரமமாத்தான் போகும். அதுக்காக அவையளை இஞ்சயே விட்டிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு வேற வேலைக்கும் ஆக்கள் தேவைதான். அவையள அங்க விடுவம்.’ என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் மூன்று பேரைக் காட்டிக் கொடுத்தோம். ஒருவன் வயிற்றுவெடிக்காரன். மற்ற இருவரும் கையெலும்பு முறிந்தவர்கள். அதன்பிறகு வந்த ஒருவருடத்துக்கு – எமது முதன்மைக் கற்கைநெறி முடிவடையும்வரை – அந்த மூவராலும் நாங்கள் ‘காட்டிக் கொடுப்போராக’க் குறிப்பிடப்பட்டு வந்தோமென்பது தனிக்கதை.
அன்று காலையுணவை முடித்துக் கொண்டு நாம் புறப்பட்டோம். நிப்பாட்டப்பட்டவர்கள் போக எஞ்சிய எமது படையணிப் போராளிகள் எட்டுப்பேருக்கும் லெப்.கேணல் கதிர்(பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்தார்) பொறுப்பாக வந்தார். எமது கற்கை நெறியிலிருந்தும் அங்குநின்ற நிர்வாகப் போராளிகளிலிருந்தும் கிட்டத்தட்ட நாற்பது பேர்வரை மணியண்ணையோடு புறப்பட்டோம்.

தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?


விசுவமடுவில் ஒரு காட்டுப்பகுதி. முகாம் ஏதும் அங்கு இருக்கவில்லை. காட்டுக்குள் சிறு கூடாரங்கள் இரண்டு இருந்தன. போனவுடன் எம்மை நான்கு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு கூடாரம் தந்து எமக்கான வதிவிடத்தை அமைக்கச் சொன்னார்கள். அங்கு தேவராஜ் அண்ணன்தான் பொறுப்பாக நின்றார். அவர் ஏற்கனவே எம்மோடு நின்று, முல்லைத்தீவில் ஆட்லறி கைப்பற்றப்பட்டதும் ஆட்லறிப்படையணிக்கென்று அனுப்பப்பட்டவர். இரண்டில் ஓர் ஆட்லறி இவரின் பொறுப்பின் கீழேயே இருந்தது. அன்று மாலை மணியண்ணை வந்தார்.
‘நீங்கள் ஆட்லறிப்பயிற்சி எடுக்கப் போகிறீர்கள்’ என்று அப்போதுதான் சொன்னார். ஓர் ஆட்லறி கொண்டுவரப்பட்டது. எம்மோடு நின்றசிலர் முல்லைத்தீவுச் சண்டையில் பங்குபற்றியதோடு ஆட்லறியைக் கைப்பற்றிய அணியிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களைவிட மற்றவர்கள் அனைவரும் முதன்முதலாக அன்றுதான் ஆட்லறியைப் பார்க்கிறோம். மணியண்ணையின் கதையைத் தொடர்ந்து எமக்கான பயிற்சிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.
பயிற்சித்திட்டம் 24 மணிநேரப் பயிற்சியாக இருந்தது. ஓரணி இரண்டு மணிநேரம் பயிற்சியெடுக்கும். அந்நேரத்தில் மற்ற இரு அணிகள் ஓய்வெடுக்கும். எஞ்சிய ஓரணி ஆட்லறிக்கான காவற்கடமையில் ஈடுபட்டிருக்கும். பிறகு மற்றதோர் அணிக்கு இருமணிநேரப் பயற்சி, பிறகு இன்னோர் அணிக்கு என்று தொடரும். நான்காம் அணிக்குப் பயிற்சி முடிந்ததும் மீள முதலாமணி தொடரும். காவற்கடமையும் இரண்டு மணித்தியாலத்துக்கொருமுறை சுழன்றுகொண்டிருக்கும். இச்சுழற்சிமுறைப் பயிற்சியில் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்லறி ஒன்றாய்த்தானிருந்தது. அந்த ஆட்லறிக்குரிய தேவராஜ் அண்ணையின் அணியினரே பயிற்சி தந்துகொண்டிருந்தனர். மற்ற ஆட்லறியும் அதற்குரிய அணியும் ஏற்கனவே நடவடிக்கைக்காக நகர்த்தப்பட்டிருந்தது. பயிற்சி 24 மணிநேரமும் சுழற்சியில் நடந்துகொண்டேயிருந்தது. இரவில் பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் நடக்கும். ஓரணிக்குக் கிடைக்கும் நான்குமணிநேர இடைவெளியில்தான் நித்திரை, சாப்பாடு, குளிப்பு, துவைப்பு, அரட்டை எல்லாமே.
இரண்டு பகல்களும் மூன்று இரவுகளும் இப்படியே பயிற்சி நடந்தது. இரண்டு மணிநேரப் பயிற்சியிலேயே உடல் துவண்டுவிடும். இதற்குள், இருமணிநேரக் காவற்கடமை, இருமணிநேரப் பயிற்சி, நான்குமணிநேர ஓய்வு (இதற்குள் மற்ற வேலைகளும் வந்துவிடும்) என்று மூன்றுநாட்கள் நடந்த தொடரோட்டத்தில் உடம்பு தும்பாகிப் போனது. ஓர் ஆட்லறி எறிகணையின் மொத்தநிறை 43 கிலோகிராம் என்பதாக இப்போது நினைவுள்ளது. அதில் குண்டுப்பகுதி மட்டும் முப்பது கிலோவுக்கு மேல்வரும். கட்டளைக்கேற்ப அதைத்தூக்கிக் கொண்டு ஆட்லறியடிக்கு வந்து குழலேற்றுவதும் பிறகு தூக்கிக் கொண்டு மீளப்போவதுமென்று நாலைந்து முறை செய்தாலே நாக்குத் தள்ளிவிடும். ஆள்மாறி ஆள்மாறி அந்த இரு மணிநேரங்களும் நெருப்பாக நிற்க வேண்டும். ஆட்லறிக் கால்களை விரிப்பது, சுருக்குவது என்று நாரி முறியும். நுட்பங்கள் விளங்கப்படுத்தப்படும் சிலநிமிடங்கள் மட்டுமே ‘அப்பாடா’ என்றிருக்கும்.
இயக்கத்தில், ஆட்லறிப் பயிற்சியெடுப்பதில் நாங்கள் மூன்றாவது தொகுதியாக இருந்தோம். முதலாவது தொகுதி, முல்லைத்தீவில் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டதும் ஒழுங்கமைக்கப்பட்டு பயற்சியெடுத்த தொகுதி. புளுக்குணாவ இராணுவ முகாமிலிருந்த ஆட்லறியைக் கைப்பற்றவென தென்தமிழீழப் போராளிகளைக் கொண்ட ஓரணி பயிற்சியெடுத்துச் சென்றது. அதுவே இரண்டாவது தொகுதி. நாங்கள் மூன்றாவது தொகுதி. எந்தத் தொகுதிக்கும் எங்களைப்போல் பயிற்சி நடக்கவில்லை. அவையெல்லாம் முறைப்படி நடத்தப்பட்ட பயிற்சி நெறிகள். நாங்கள்தான் ‘மூன்றே நாளில் முனைவராவது எப்படி?’ என்ற கணக்காகப் பயிற்சியெடுத்தவர்கள்.
ஆட்லறி எறிகணைகள் ஏவிக் காட்டப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தும் அதற்கான நேரமிருக்கவில்லை. மூன்றுநாட்கள் நடந்த பயிற்சியிலேயே நாங்கள் ஒருவழி ஆகிவிட்டிருந்தோம். எறிகணையை ஏவிப்பார்க்கவில்லையே தவிர மற்றதெல்லாம் அத்துப்படி. நித்திரைத் தூக்கத்திற்கூட எந்தப்பிழையும் விடாமல் முறைப்படி செய்யும் நிலைக்கு அந்த மூன்றுநாள் கடும்பயிற்சியில் வந்திருந்தோம்.
மூன்றாவது இரவுப்பயற்சி நடந்துகொண்டிருந்தபோது மீளவும் மணியண்ணை வந்தார். பயிற்சி நிறுத்தப்பட்டது. அந்த இரவு வினோதமாக இருந்தது. ஆட்லறிப் படையணியின் நிர்வாக வேலைகளில் நின்ற அனைவரும் பொறுக்கி ஒன்றுசேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முறைப்படியாகவோ அரைகுறையாகவோ ஆட்லறிப்பயிற்சியெடுத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, முன்பு புளுக்குணாவ முகாம் தகர்ப்புக்காக வந்து பயிற்சியெடுத்தவர்களில் வன்னியில் எஞ்சி நின்ற போராளிகளையும் அங்கிங்கென்று பொறுக்கிக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் கொம்பனி நிலை அணித்தலைவர்களாக இருந்தும்கூட அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.
மளமளவென அணிகள் பிரிக்கப்பட்டன. ஓர் ஆட்லறிக்கு எட்டுப்பேர் என்றளவில் அணிகள் அமைக்கப்பட்டன. பயிற்சியாளர்களின் அறிவுரையோடு ஒவ்வோர் அணியிலும் ஆட்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன. முதன்மைச் சூட்டாளன், தொலைத் தொடர்பாளன், எறிகணையைக் குழலேற்றுபவன் என்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வோர் அணியோடும் தேவராஜ் அண்ணையின் ஆட்லறியணியின் போராளிகள் இருவர் கலக்கப்பட்டனர். இறுதியில் ஒன்பது அணிகள் எம்மிடமிருந்தன. இன்னும் ஓரணிக்கு என்ன செய்வதென்பது மணியண்ணையின் தலையிடியாகவிருந்தது. எங்களுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது, இயக்கம் சுளையாக எதையோ பார்த்துவிட்டது, காலங்கடத்தாமல் கொத்திக்கொள்ளப் பரபரக்கிறது.
‘இந்த மூண்டுநாளும் பயிற்சியெடுத்தாக்கள் ஓய்வெடுங்கோ, இப்ப வந்து சேர்ந்தாக்கள் திரும்ப ஞாபகப்படுத்திறதுக்காக பயிற்சியெடுங்கோ. விடிய நாலு மணிக்குள்ள எல்லாரும் ரெடியாயிடோனும்’ என்று மணியண்ணை சொல்லி எம்மை ஓய்வுக்காக அனுப்பிவைத்தார்.
எங்கே ஓய்வெடுப்பது? உடல் மிகமிகக் களைப்படைந்திருந்தாலும் மனம் மிகமிக உற்சாகமாகவே இருந்தது. எல்லோருக்கும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. இன்னும் இரண்டொரு நாட்களில் எமது போராட்டத்தில் பெரிய வரலாற்றுத் திருப்புமுனை நிகழப்போகிறது என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் ஒவ்வொருவரிடமும் மிகுந்திருந்தது. ஒன்றில் இயக்கத்திடம் புதிதாக பத்து ஆட்லறிகள் வந்திருக்க வேண்டும், அவற்றை வைத்து அவசரமாக பெரியதொரு தாக்குதலைச் செய்யப் போகிறது; அல்லது எங்கோ பத்து ஆட்லறிகளை இயக்கம் கண்வைத்து விட்டது, அவற்றைக் கைப்பற்றப் போகிறது. ஆட்லறிகளைக் கொள்வனவு செய்துவந்து இறக்குவதென்பது அப்போது சாத்தியமற்றதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது. எனவே இரண்டாவது நிகழ்வையே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
சிந்தனைகள் இன்னும் விரிவடைந்துகொண்டிருந்தன. தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?
கிடைத்திருக்கும் நான்கு மணிநேரத்தில் யார்தான் நித்திரை கொள்வார்கள்? நித்திரைதான் வந்துவிடுமா? மற்றப்பக்கத்தில் ஏனையவர்களுக்கு மீளநினைவூட்டற் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு தூக்கமின்றி குறுகுறுப்பாகவே கழிந்தது. மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது.
இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!
பரப்பிகள்


விளம்பரம்


கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

களங்கள் – 6. ஓயாத அலைகள் மூன்று
ஆனந்தபுரம் விடிவெள்ளிகள்
என்ன பெரிய வெங்காயம்???
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்
பழங்களும் பயன்களும் - 2
மறைவு நடவடிக்கை விமானம் (Stealth Aircraft)
முழு கவனம்; முழு வெற்றி.
AV-8B Harrier II போர்விமானம்
போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்
யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?
குற்றமே காணும் வியாதி
புறம் பேசாதே!
Antonov An-225 விமானம்
மனைவியின் மாண்பு
மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்
கடன் பட்டார் நெஞ்சம்
அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!!
ஈழத்தமிழர்களும் அவர்கள் அரசியல் கோட்பாடுகளும்
தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள்
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09
தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II
புதன்கிழமை, 09 செப்டம்பர் 2009 02:18 அன்பரசன்
இதன் முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.
மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.
எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ் அண்ணைதான் கதைத்தார். எல்லோரையும் குளத்தடிக் கோவிலுக்குச் சென்று ஒதுக்குப்புறமாக நிற்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் அணியணியாக நடந்தே சென்றோம். விசுவமடுக் குளத்தின் ஒரு தொங்கலில் காட்டுக்குள் சற்று உட்பக்கமாக ஒரு சைவக் கோவில் இருந்தது. மிகப்பெரிய ஆலமரமொன்றில் அடியில் ஒரு சிறுபீடமும் அதில் கடவுளின் சிலையொன்றும் இருந்தது. கடவுள் யாரெனச் சரியாகத் தெரியாது, அனேகமாய் காளியாகவோ வைரவராகவோ இருக்க வேண்டும். பெரிய சூலமும் வேறு சிலவும் அக்கடவுளுக்குரிய பொருட்களாய் அங்கிருந்தன. முன்பே அப்பகுதி எமக்குப் பழக்கமானதே. அது மக்கள் நடமாட்டத்துக்குரிய பகுதியன்று. ஆனாலும் வருடத்துக்கொரு முறை அக்கிராம மக்கள் அங்குவந்து பெருமெடுப்பில் ஒரு திருவிழாவைச் செய்துவிட்டுச் செல்வார்கள்.

நாங்கள் சென்ற அந்த அதிகாலை அவ்வருடத்துக்குரிய திருநாள். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்றிருந்தார்கள். திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. ஒருபக்கத்தில் உருவந்து ஆடுபவர்கள், இன்னொரு பக்கம் கிராமிய நடனங்கள், இன்னொரு பக்கம் விருந்து சமைப்பவர்கள் என்று அமர்க்களமாக இருந்தது. ஒருவர் கத்திமேல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். நாங்கள் ஓர் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பகுதியை அண்டி ஏற்கனவே இயக்க முகாம்கள் இருந்ததால் அவர்கள்தான் திருவிழாவைப் பார்க்க வந்துநிற்கிறார்களென மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.
ஐந்து மணிக்கு தேவராஜ் அண்ணை வந்து எல்லோரையும் ஒதுக்குப்புறமாக அணிவகுக்கச் சொன்னார்.
‘இயக்கம் ஒரு வேலையா உங்களை எடுத்திருக்கு. கடுமையான பயிற்சியையும் முடிச்சிட்டியள். பயிற்சியில எடுத்ததைச் சண்டையில காட்டவேண்டிய நாள் வந்திட்டுது. இப்ப நாங்கள் நகரப்போறம். எங்கட நகர்வு வெளியில ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. அதால லொறிக்குள்ளதான் எல்லாரும் இருக்க வேணும். நீண்டநேரம் புழுதி குடிச்சுக் கொண்டு இருக்க வேணும். கஸ்டம்தான், சமாளிச்சுக் கொள்ளுங்கோ. நாங்கள் இரவே நகர்ந்திருக்க வேணும். ஆனால் பயிற்சி நேரம் காணாதபடியா கடைசிவரைக்கும் நிக்கவேண்டியதாப் போச்சு. போயிறங்கிய இடத்தில மிச்சத்தைக் கதைப்பம்.’
அவர் கதைத்து முடிக்கும்போதே திருவிழாக் காரர்களால் வடை, கெளபி என்பன எமக்கென்று தந்தனுப்பப்பட்டன. ‘உங்களுக்குக் காலமச் சாப்பாட்டை எப்பிடிக் குடுக்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருந்தம், எல்லாம் சரியாயிட்டுது. போயிறங்க பின்னேரமாயிடும். இனி அங்கதான் மத்தியானச்சாப்பாடு. ‘பம்’ பண்ணிறதுக்கு மட்டும் இடையில காட்டுக்குள்ள நிப்பாட்டுவம். அவ்வளவுதான்.’
கிடைத்தவற்றைப் பங்கிட்டு எடுத்துக்கொண்டு காட்டோரமாக நகர்ந்து அணைக்கட்டுப் பக்கமாக வந்தோம். இன்னும் சரியாக விடிந்துவிடவில்லை. எமக்காக இரண்டு லொறிகள் காத்திருந்தன. இரண்டிலும் ஈரடுக்குளில் ஆட்லறி எறிகணைப் பெட்டிகள் ஏற்றப்பட்டிருந்தன. இரண்டு லொறிகளிலும் ஆட்களைப் பங்கிட்டு ஏற்றிக் கொண்டுப் புறப்பட்டோம். இதுவரை எமக்கு நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை. எங்கோ தாக்குதல் நடக்கப் போகிறது. அங்கிருக்கும் ஆட்லறிகளைக் கைப்பற்றி அவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தப்போகிறோம் என்றளவில் நாம் ஊகித்திருந்தோம். ஏற்கனவே ஆனையிறவில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் நினைவிலிருந்தது.
போகுமிடம் யாருக்கும் தெரியவில்லை. வாகன ஓட்டுநருக்குச் சொல்லப்பட்டிருந்தது முல்லைத்தீவுக்குப் போகவேண்டுமென. அவரும் முல்லைத்தீவு போவதற்குப் போதுமான டீசலோடு வந்திருந்தார். இடையில் பாதைமாறியபோதுதான் விடயத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். லொறிக்குள் முற்றாக அடைக்கப்பட்ட நிலையில் நாம். வன்னியில் தார்ச் சாலைகள் இல்லை. கிறவற் புழுதியைக் குடித்தபடி லொறிக்குள் நாம் அடைபட்டிருந்தோம். பின்கதவு நீக்கல் வழியாக எங்கால் பக்கம் போய்க்கொண்டிருக்கிறோமென்று பார்த்துச் சொல்வதற்கு இருவர் நின்றிருந்தனர். மிகுதி அனைவரும் ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டி நடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம்.
புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் பக்கமாக லொறி திரும்பியதை அறிந்தோம். பிறகு மன்னாகண்டலடியில் காட்டுக்குள் கொண்டுசென்று சிறிது ஓய்வுக்காக நிறுத்தப்பட்டோம். பிறகு மீண்டும் பயணம்.
மாங்குளம் சந்தியில் சிறிது சலசலப்பு. அதற்கு முதல்நாள்தான் மாங்குளப் பகுதியில் விமானக் குண்டுவீச்சு, எறிகணை வீச்சு என்று அமர்க்களம் நடந்திருந்தது. அதுவரை மாங்குளத்தில் தங்கியிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். லொறியைப் பாதையோரம் நிறுத்திவிட்டு எங்காவது பாண் வாங்கலாமென்று தேவராஜ் அண்ணை திரிந்து பார்த்தார். எல்லாக் கடைகளும் பூட்டு. மாங்குளம் நகரம் வெறிச்சோடத் தொடங்கியிருந்தது. உள்ளிருந்த நாம் ஓட்டுநர் பக்கத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டிருந்தோம்.
முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம்.

மீண்டும் பயணம் தொடங்கியது. ஜெயசிக்குறு முனையில்தான் எங்கோ சண்டை நடக்கப்போகிறதென்று விளங்கிவிட்டது. அதற்குள் உள்ளிருந்த இரண்டொருவர் சத்தி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்க முடியாது. உடுப்பை மாற்றி வெறும்மேலோடு சரத்தைக் கட்டியபடி மேலே ஏற்றிவிட்டோம். பார்த்தால் பொதுமக்கள் போன்றுதான் தோன்றும். அவர்களுள் ஒருவன் கொஞ்ச நேரத்திலேயே மீளவும் கிழே வந்துவிட்டான். ‘மேல இருந்து கொப்புகளிட்ட அடிவாங்கிறதைவிட கீழயே இருக்கலாம்’ என்றான்.
இப்போது எங்களில் பலர் நித்திரை கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வேறு வழியில்லை. பயணம் எப்போது முடியுமென்று தெரியாது. பசிக்கத் தொடங்கிவிட்டது. தண்ணியை அதிகம் குடித்தால் அடிக்கடி இறங்க வேண்டி வருமென்பதால் அதிலும் கட்டுப்பாடுதான்.
அந்த நெடிய பயணம் மாலை மூன்றுமணியளவில் முடிவடைந்தது. ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டார்கள். இடம்தெரிந்த சிலர் சொன்னார்கள் அது ஈச்சங்குளமென்று. நாம் நின்ற இடம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதி. எமக்குச் சற்றுத்தள்ளிப் பார்த்தால் வேறும் பல அணிகள் நின்றிருந்தன. அவர்கள் இரவோடு இரவாகவே நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். காட்டுக்கரையோரம் ஒடிய வாய்க்காலொன்றில் முகங்கழுவி கொஞ்சம் செந்தளிப்பானோம். கறிபணிஸ் தரப்பட்டது. உண்மையில் அது தாக்குதலணிகளுக்கு வந்த மாலைச் சிற்றுண்டி. எமக்கான மதிய உணவு கிடைக்கவில்லை. தாக்குதலணியாக நாம் நகராததால் எமக்கான உணவு வழங்கல்களில் சிக்கல்கள் இருந்தன. நாம் எந்தப்படையணி, யாருடைய ஆட்கள் என்ற விபரங்களைச் சொல்ல முடியாத நிலையும் இருந்தது.
மாலை ஐந்து மணிக்கு ராயு அண்ணை வந்து சேர்ந்தார். அப்போதுதான் அன்றிரவு நடக்கப்போகும் தாக்குதல் பற்றியும் எமது பணிகள் பற்றியும் விரிவாக விளங்கப்படுத்தப்பட்டது.
ஜெயசிக்குறு இராணுவம் மீதுதான் தாக்குதல். ஓமந்தை வரை முன்னேறி வந்திருக்கும் இராணுவத்தின் பின்பகுதியில் – குறிப்பாக தாண்டிக்குளம் பகுதியில் ஊடறுப்புத் தாக்குதலொன்று நடைபெறப்போகிறது. தாண்டிக்குளம் மைய முகாமில் பத்து வரையான ஆட்லறிகள் இருக்கின்றன. தாக்குதலணிகள் அந்த முகாமைக் கைப்பற்றும். ஆட்லறிகளைக் கைப்பற்றியதும் நாம் அவற்றைக் கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும். வேவுத் தகவல்களின்படி இரண்டு 130 மி.மீ ஆட்லறிகளும் இருக்கின்றன. அவற்றை முடிந்தளவுக்கு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முயற்சிப்போம். ஏனையவற்றைக் கொண்டுவரப்போவதில்லை. அங்கிருந்தே தாக்குதல் நடத்துவதுதான் எமது கடமை.
எமது தாக்குதல்கள் அனைத்தும் தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கியே அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் வவுனியாப் பக்கம் தாக்குதல் நடத்தக்கூடாது. வவுனியா மீதான தாக்குதல் அங்கிருந்து நேரடியாக வழிநடத்தும் முன்னணி அவதானிப்பாளரின் உதவியோடே செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அது பொதுமக்கள் வாழும் பகுதி. அவ்வேலையை இயக்கத்தின் ஆட்லறிப்பிரிவு செய்து கொள்ளும். எமக்கு இலக்கின் ஆள்கூறுகள் எவையும் கட்டளையாக வழங்கப்படா. ஏற்கனவே வரைபடத்தின்படி தூரம், கோணம் என்பவற்றைக் கணித்து வைத்திருந்தோம். ஓமந்தையில் பரந்திருக்கும் இராணுவத்தின் பகுதிமீது சரமாரியாகக் குண்டுகள் பொழிய வேண்டும். குறிப்பிட்ட ஓமந்தை வட்டத்துக்குள் எங்கு எறிகணை விழுந்தாலும் சரிதான். தாண்டிக்குளம் ஊடறுப்பு நடந்தபின்னர் ஓடந்தையில் நிற்கும் அவ்வளவு இராணுவத்தினரும் தொடர்பற்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில்தான் இருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம். அதன்பிறகு கட்டளைப்படி சுழற்சிமுறையில் தாக்குதல் நடத்த வேண்டும். இதற்கிடையில் பீரங்கிகளைத் துப்பரவாக்கும் பணி, களஞ்சியத்திலிருந்து எறிகணைகளை பீரங்கிக்கருகில் கொண்டுவருதல் என்று பணிகள் இருந்தன. காயக்காரரை அப்புறப்படுத்தும் வழியோ நேரடி வழங்கலோ இன்றி நிற்கும் ஓமந்தை இராணுவத்தை (கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர்) முற்றாகத் துடைத்தழிப்பது இயக்கத்தின் இரண்டாம் கட்டத் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.
நாம் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் மிக அதிகளவில் இருக்குமென்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் எதிரியின் முழுக்கவனமும் எம்மீதுதான் திரும்பும். வான்வழித் தாக்குதல்கள், எதிரியின் ஆட்லறித் தாக்குதல்கள் என அனைத்தும் எம்மை நோக்கியே நிகழ்த்தப்படும். அதற்குள் நின்றுதான் சமாளிக்க வேண்டும். எமது சூட்டுவலுவை நம்பியே ஏனைய தாக்குதலணிகள் களமிறங்குகின்றன. விடிவதற்குள் எவ்வளவு விரைவாக வெற்றிகளைக் குவிக்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது அறிவுறுத்தப்பட்டது. [எமக்குத் தெரியாமலேயே எமக்கான வான்பாதுகாப்புக்காக இரண்டு கனரக ஆயுதங்களைக் கொண்ட கடற்புலிப் போராளிகளின் அணிகள் சரா அண்ணன் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தன என்பது மறுநாட் காலைதான் தெரிந்தது.]
மிகத் தெளிவாக அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டு விட்டன. கேள்வி நேரத்தில் எவருக்கும் கேள்வியிருக்கவில்லை. பல உணர்வுகளின் கலவையாக அப்பொழுது அமைந்திருந்தது. இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலாக – இதுவரை இல்லாத மிகப்பெரும் தாக்குதலாக இது அமையப்போகிறது. அதில் அதிமுக்கியமான பணி எமக்குத் தரப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் எதிரியின் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்படுமென்பதோடு கிடைக்கப்போகும் ஆட்லறிகள் இனிவருங் காலத்தில் தேடித்தரப்போகும் வெற்றிகள் அளப்பெரியவை. இதுவரை இரண்டு ஆட்லறிகளை வைத்தே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த இயக்கம் (புளுக்குணாவ ஆட்லறி அதுவரை சமர்க்களங்களில் பயன்படுத்தப்படவில்லை) இனி என்னவெல்லாம் செய்யும்? இந்தத் தாக்குதல் முடிவில் இப்போது எம்மோடு நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கப் போவதில்லை என்பதும் எமக்குத் தெளிவாக விளங்கியிருந்தது. ‘எல்லாத்தாலயும் போட்டு நொருக்குவான்’ என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எமது ஆட்லறிச் சூடுகளைக் கட்டுப்படுத்தாமல் இயக்கத்தின் தாக்குதலை முறியடிக்க முடியாதென்பதுதான் நிலைமையாக இருக்கப் போகிறது.
ஒவ்வோர் அணியாக ராயு அண்ணை கதைத்தார். எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற தவிப்பு அவரிடமிருந்தது. ‘ஆட்லறி கிடைச்ச உடன களைப்பைப் பாக்காதைங்கோ. பல்லைக் கடிச்சுக்கொண்டு கொஞ்சநேரம் அடியுங்கோ. நாங்கள் ஒவ்வொண்டா அடிச்சுக் கொண்டிருந்தால் அது திகைப்பா இருக்காது. முதல் அரைமணி நேரத்தில நீங்கள் அடிக்கிற அடியில ஓமந்தை ஆமி இனி சண்டைபிடிக்கிற நினைப்பையே விட்டுப் போடவேணும். அப்பதான் கொஞ்ச இழப்புக்களோட சண்டை ரீமுகள் வெல்லலாம். தொடக்கத்தை வைச்சுத்தான் எங்கட நடவடிக்கையின்ர நீட்சி தீர்மானிக்கப்படும்’.
அணிகளுக்கான வரைபடங்கள், ரோச் லைட்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், பற்றறிகள், அலைவரிசை எண்கள், சங்கேதச் சொல்லட்டை மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கப்பட்டன. திட்டப்படி நாங்கள் முன்னகர்ந்து ஓரிடத்தில் காத்திருக்க வேண்டும். அது தாண்டிக்குளம் ஆட்லறி முகாமிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. முகாம் கைப்பற்றப்பட்டதும் நாம் அங்கு ஓடிச்செல்ல வேண்டும். உள்நுழையும் எமக்கு தேவராஜ் அண்ணை தான் பொறுப்பாக வருகிறார். ஓர் ஆட்லறியுடன் தான் இயக்கம் இச்சண்டையைத் தொடங்குகிறது என்பது விளங்கியது. நாம் பயிற்சியெடுத்த ஆட்லறி இச்சண்டையில் பங்குபற்றவில்லை.
இருட்டத் தொடங்கியது. ஏற்கனவே அக்கம்பக்கத்திலிருந்த சண்டையணிகள் நகர்ந்துவிட்டிருந்தன. நாங்கள் அணியணியாக இடைவெளிவிட்டு நகரத் தொடங்கினோம். போகும் வழியில் நான் தேவராஜ் அண்ணனுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர் மேலதிக விவரங்கள் சிலவற்றைச் சொன்னார். தாக்குதலணிகள் இன்றிரவு ஊடறுப்பைச் செய்யப் போகின்றன. ஆனால் ஆட்லறி முகாமைக் கைப்பற்றும் அணிகள் முன்பே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்புகுந்துவிட்டன. லெப்.கேணல் ஜீவன் தலைமையில் ஜெயந்தன் படையணியின் ஓரணியும் அவர்களோடு கரும்புலிகளின் ஓரணியும் முன்பே உள்நகர்ந்துவிட்டன. வெளிக்காப்பரண்களைக் கைப்பற்றி பிறகு மைய முகாம் வரை செல்வது சிலவேளை பலன்தராது என்பதால் இத்தெரிவு. சமநேரத்திலேயே வெளிக்காப்பரண் வரிசையும் ஆட்லறிகள் நிறுத்தப்பட்டிருந்த மைய முகாமும் தாக்குதலுக்குள்ளாகும். இன்று (09/06/1997) அதிகாலைவரை இருந்த வேவுப்புலிகள் பத்து ஆட்லறிகளும் அம்முகாமில்தான் இருப்பதாக உறுதிப்படுத்திவிட்டுப் பின்வாங்கியிருந்தனர்.
இரவு பதினொரு மணியளவில் எமக்கான நிலைகளையடைந்து விட்டோம். தாக்குதல் தொடங்குவதற்கும், அதன்பின் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்ட செய்தி வருவதற்கும்காத்திருந்தோம். எமக்கு எதிரியுடனான நேரடிச் சண்டை வர வாய்ப்பில்லை. அப்படியான சந்தர்ப்பத்தைத் தவிர்க்கும்படி மிகக்கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.
தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது.

குறுகுறுப்பாக இருந்தது. ஆட்லறி தொடர்பான செய்முறைகளை மீளவும் நினைவுபடுத்திக் கொண்டோம். போனவுடன் யார்யார் என்னென்ன செய்ய வேண்டுமென அணிக்குள் மீளவும் குசுகுசுத்துக் கொண்டோம்.
அந்த நேரம் வந்தது. 10/06/1997 அதிகாலை தாக்குதல் தொடங்கியது. டோபிட்டோக்கள் வெடிக்கும் சத்தங்கள், மோட்டர் எறிகணைகளின் சத்தங்களோடு இயக்கத்தின் சண்டை தொடங்கியது.
நாம் செய்திக்காகக் காத்திருந்தோம். திட்டத்தின்படி அரைமணி நேரத்துக்குள் ஆட்லறிகள் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சண்டை தொடங்கி சில நிமிடங்களில் எதிரியின் MI-24 தாக்குதல் வானூர்தி ஒன்று வந்துவிட்டது. எங்கு தாக்குவதென்று சரியான தெரிவில்லாமல் சகட்டு மேனிக்கு அவ்வானூர்தி தாக்குதலை நடத்தியது.
‘கோதாரி இப்பவே வந்திட்டான். அப்ப விடிய விடிய எங்களுக்கு நல்ல சமா தான்’ என்று சொல்லிக் கொண்டோம்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. எமக்கான செய்தி வந்து சேரவில்லை. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று தெரிந்தது. ஆனால் தாக்குதல் வெற்றியாகச் செல்கிறது என்பது விளங்கியது. சண்டை தொடங்கிய இடத்திலிருந்து சத்தங்கள் இன்னுமின்னும் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிக்கொண்டிருந்தன. இயக்கம் ஏவிய மோட்டர் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடமும் இன்னுமின்னும் முன்னேறிக்கொண்டிருந்தது. ஆனால் எமக்கான செய்தி மட்டும் இன்னும் வரவில்லை. எதிரி சகட்டு மேனிக்குத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். நாமிருந்த பகுதிகளைச் சுற்றியும் எறிகணைகள் வீழ்ந்தன.
தாக்குதல் தொடங்கி இரண்டு மணிநேரமாகிவிட்டது. இன்னும் நாங்கள் அப்படியேதான் இருந்தோம். எல்லோருக்கும் சலித்துவிட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடும் ஆயத்தத்தோடும் இருந்த எமக்குச் சலிப்பு ஏற்பட்டது. மெதுமெதுவாக அந்தத் தகவல் பரவத் தொடங்கியது.
‘காம்ப் உடனயே பிடிச்சாச்சாம். ஆனா ஆட்லறியள்தான் அங்க இல்லயாம்.’
ஆம்! திட்டமிட்டபடியே ஆட்லறிகள் இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அம்முகாம் கைப்பற்றப்பட்டது. ஆனால் தேடிப்போன ஆட்லறிகள் அங்கே இருக்கவில்லை. அந்த முகாம் தாக்குதலில் கரும்புலிகளான மேஜர் நிவேதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தனர்.
தாக்குதலணிகள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருந்தன. தாண்டிக்குளம் முகாமுட்பட பல முகாம்களடங்கிய நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதக் களஞ்சியமொன்று எரிந்தழிந்தது. தாக்குதல் உலங்கு வானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்டது. விடியும்வரை தாக்குதலணிகள் முன்னேறிச் சென்றன. ஓமந்தையில் நின்ற இராணுவம் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. வவுனியாவுக்கும் ஓமந்தைக்குமிடையிலான கண்டிவீதியும் அதைச் சுற்றி இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
தாண்டிக்குளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்லறிகளுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்கலாம், வேறேதாவது முகாமுக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதி விடியும்வரை சண்டை தொடர்ந்தது. விடியும்போது வவுனியா நகர்ப்பகுதித் தொடக்கம் மறுபக்கத்தில் ஓமந்தை இராணுவத்தினர் வரையும் புலிகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்குள் ஆட்லறிகள் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியபின் அணிகளைப் பின்வாங்கும்படி கட்டளையிடப்பட்டது. அதுவரை நிலையெடுத்திருந்த இடத்திலேயே நாம் இருந்தோம். எம்மையும் பின்வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டதால் எதிரியின் வான்தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றுக்குள்ளாலும் தப்பி நாம் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தோம்.
எல்லோரும் எரிச்சலில் இருந்தார்கள். பலர் இப்படியொரு ஏமாற்றத்தைச் சந்தித்திருக்க மாட்டார்கள். என்ன நடந்திருக்கும்? நேற்று அதிகாலைவரை ஆட்லறிகள் அங்கிருந்தனவென்றால் பகலில்தான் எங்கோ நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். தாக்குதல் நடத்தப்படப் போகிறது என்பது முன்னமே தெரிந்துவிட்டதோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சண்டை நன்றாகத்தான் நடந்துள்ளது. எதிரி கடும் இழப்புக்களைச் சந்தித்திருந்தான் என்பதோடு எமது தரப்பில் உயிரிழப்புக்கள் குறைவாகவே இருந்தன. தாக்குதல் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும்.
இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.

பிறகு என்ன நடந்ததென்று இயக்கம் உறுதிப்படுத்திக் கொண்டது. நாம் தாக்குதல் நடத்திய அன்றுபகல் ஐந்து ஆட்லறிகளை ஓமந்தைப் பகுதிக்கும் ஏனையவற்றை வவுனியாப் பகுதிக்கும் எதிரி இடம் மாற்றியிருந்தான். ஓமந்தையிலிருந்து புளியங்குளம் நோக்கி இரண்டொரு நாட்களில் மிகப்பெருமெடுப்பில் ஓர் இராணுவ நடவடிக்கையைச் செய்வதற்கு எதிரி திட்டமிட்டிருந்தான். அதன் ஒருகட்டமாகவே இந்த ஆட்லறிகளை நகர்த்தியிருந்தான். தாண்டிக்குளப் பகுதி மீதான தாக்குதலால் கிடைத்த பலன்களிலொன்று புளியங்குளம் மீதான எதிரியின் தாக்குதல் பிற்போடப்பட்டது. புளியங்குளத்தில் மறிப்புச்சமர் செய்வதற்குரிய போதிய ஆயத்தத்துக்கான கால அவகாசத்தை இத்தாக்குதல் இயக்கத்துக்கு வழங்கியது.
தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. மோட்டர் தாக்குதலை மட்டுமே நடத்தியது. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கி முன்னேறிய புலிகளின் அணிகள் இராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டன.
தாண்டிக்குளச் சண்டையைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒரு நடவடிக்கையை இயக்கம் பெரிதாகத் திட்டமிட்டிருந்தது. இவ்வூடறுப்புத் தாக்குதல் நடத்தப்பட முன்பு வவுனியா நகர்ப்பகுதிகளுக்குள் சில சிறப்புப் பதுங்கித் தாக்குதலணிகள் நகர்த்தப்பட்டிருந்தன என்பதைப் பின்னர் அறிந்தோம். ஆட்லறிகளைக் கைப்பற்றவெனச் சென்ற அணிகள் தவிர்த்து ஏனைய தாக்குதலணிகளுக்கு இத்தாக்குதலின் பின்னாலிருந்த ‘ஆட்லறி கைப்பற்றும்’ விடயம் முதலில் தெரிந்திருக்கவில்லை. வழமை போன்ற ஓர் ஊடறுப்புத் தாக்குதலும் ஆயுதங்களை அள்ளலுமாகவே அவர்கள் நினைத்திருந்தனர்.
இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.
அப்படியானால் முதலாவது சந்தர்ப்பம்?
அதுபற்றிப் பிறகு பார்ப்போம்.



ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது 'சில்லறைச் சண்டைகள்' மூண்டு தணிந்து கொண்டிருந்தன.
ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.

~ ~ ~

1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.
“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.
“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.
“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.
சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.
“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.
இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.
யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.
ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.
50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.

சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.
அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.
ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.
முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

மறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. 'இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு' என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.
மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். 'எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்'.
ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.
சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.
‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.
பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.
இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.
கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.
முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.
‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’
‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’
அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.
எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.
இப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.
~ ~ ~
இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.
திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.
காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.
அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.
முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.
ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.
மேஜர் சுவர்ணனுக்கும் அவனைப் போல் ஈழவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.



துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச் சின்னங்கள், நினைவுத் தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்புப் பகுதியில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அரசின் கைக்கூலியான ஈபிடிபியின் தலைவர் மற்றும் குழுவினரது விளம்பரங்கள் ஒட்டப்பட்டு மாவீரர்களை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



1ம் ஆண்டு வீரவணக்கம் ஆனந்தபுரம் பெரும் சமர்

வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.

அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.

இதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து,

அன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.



தமிழீழம் நமது வீரர்களின் கனவு - கண்மணி

அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.

அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது.

உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது.

இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.

1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு.

இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார்.

இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது.

பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி.

யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது.

முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன்.

இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது.

இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம்.

அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.


சிவதீபனுக்கோர் சபதம் கேள் – வித்யாசாகர்
வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???
எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???

சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???

ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???

அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???

அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;

இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,

நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -
உனை மறவோம் கேள்;

ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!

வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன -

ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!

------------------------------------------------------------------------------------

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.