சனி, 20 பிப்ரவரி, 2010

கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

* "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."

- தமிழீழத் தேசியத்தலைவர் -

அவன் விழிப்பான். மரணித்தது மரணமே.

சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது

"………this was the most unkindest cut of all "

எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.

அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன.

ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

* சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான

."…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து

விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து

சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென

வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து

சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.

அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்

வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்

நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க

விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்

அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை

மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……"

என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?

ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே.

சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .

”….He lives, he wakes, ’tis death is dead, not he.."

கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.


2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு ஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.

லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.

மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.

காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான்.

காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.

ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.

தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.

கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான்.

திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.

* 2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.

போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.

ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.

* இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.

இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.

இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.

எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.

சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.

இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.

ஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…

ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்


* இவன் நினைவாய்.......

கவிதாஞ்சலி

எங்கள் கண்களுக்குள் இன்னமும்
தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்!

பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்!
புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்!

காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்
காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.

செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற
சிங்களக் கழுகுகளின் அலகுகளில்
மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்...

இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்
இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்...

என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?

ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே
அந்தப் போதிமரத்தான் போதித்தான்?..
அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,
அவனுக்கு எப்படியடா பின்காமிகள்?

"இனியொரு விதி செய்வோம்!" என்ற உணர்வோடு
இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,
"இனியொரு சதி செய்வோம்!" என்பதுதானா?

என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?

உலக நாடுகளே!
உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,
ஒன்றும் பேசாமலிருப்பதேன்?

தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்
தம்பட்டம் அடிக்கின்ற "சட்டாம்பிள்ளை" தேசங்களே!
எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை?

ஈழத் தமிழனே!
என்னருமைச் சோதரனே! - நீ
கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து
கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா,
சிங்களத்துச் செந்நாய்ச் சேய்?

வீழத்தான் வேண்டுமோ? - உனக்கு
விழுப்புண்தான் மீண்டுமோ?
ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்
எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ?

என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?

தொ. சூசைமிக்கேல்
கரும்புலிப் போர் வடிவம் ஓர் போரியல் தேவை

கரும்புலிப்போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

வீரத்தினதும் – உயிர்ஈகத்தினதும் – மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை உள்ளது.

தன்னோடு எதிரிஇலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது.

அதனால்தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர்சூட்டலுடன் கரும்புலிப்போர்வடிவம் இனங்காணப்பட்டுள்ளது.

கடலிலும் – தரையிலும் இந்தப்போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்திவருகின்றது.

தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர்.
கரும்புலிப்போர்முறையின் தேவை என்ன?
கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்.?
கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது? இனக்கொலைபுரியும் சிங்களப்படைமீது இந்தப் போர்முறை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

தமிழரது தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்திவரும் தாக்கம் என்ன? என்பன போன்ற வினாக்களுக்க இந்தக்கட்டுரை விடையளிக்க முயல்கின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான புறநிலை உண்மைகளைக் கருத்திற்கொண்டு, போரியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழீழதேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கரும்புலிப்போர்முறை உருவாக்கப்பட்டது.

தமிழீழப்போர் அரங்கில் இந்தப் புதிய வகைப்போர்முறை அறிமுகப்படுத்தப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

1987 அம் ஆண்டு ~விடுதலை நடவடிக்கை| என்ற பெயரில் யாழ். குடாநாட்டின் வடமராட்சிப்பகுதியை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் படையெடுத்தன.

நெல்லியடியில், பாடசாலை வளாகத்தில். முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் மீது முதலாவது கரும்புலித்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

வெடிமருந்து நிரப்பிய பாரவூர்தி ஒன்றை அந்தப் படைமுகாமிற்குள்ளே ஓட்டிச்சென்று தடைகள் பல கடந்து, தாக்குதல்புரிந்த கரும்புலி வீரன் மில்லரால் இந்தப் போர்வடிவம் தொடக்கிவைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, 21 வருடகாலத்தில் 329 கரும்புலிவீரர்கள் இந்தப் போர்முறையில் பங்கெடுத்துக் காவியமானார்கள்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிப்போர் முறைக்கான தேவை என்ன என்ற கேள்வி முக்கியமானது.

சிங்களப்படையுடனான போரில் வெற்றிபெறத் தேவையான சில முக்கிய இராணுவத்தேவைகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே இந்தப் புதியபோர் முறையை தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

குறைந்த உயிரிழப்பை விலையாகக்கொடுத்து எதிரிப் படைக்கு நிறைந்த சேதத்தை உண்டுபண்ணுவது இப்போர்முறையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
தமிழினத்தின் பரமவிரோதியாக சிங்கள- பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தனது அரசியல் இலட்சியமாகக் கொண்ட சிறிலங்கா அரசு உள்ளது.

தமிழினத்தை இன அழிப்புச்செய்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள – பௌத்த பூமியாக்குவதே பேரினவாதிகளின் அரசியல் இலட்சியமாகும்.

சிங்கள மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் முப்படைகளையும் – தமிழினத்தை இனக்கொலை செய்து அழிக்கும் – ஒரு கருவியாக சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

எண்ணிக்கையில் தமிழர்களைவிட அதிகூடிய சனத்தொகையை சிங்கள மக்கள் கொண்டிருப்பதால் சிங்களப்படைகளின் ஆள் எண்ணிக்கையும் மிக அதிகமானதாகும்.

எண்ணிக்iயில் அதிகூடிய சிங்களப்படையை வெற்றிவாகை சூடுவதன் மூலமே தமிழரின் விடுதலையைப் பெறமுடியும் என்ற இராணுவ யதார்த்தம் உள்ளது.

எனவே தான் புலிவீரர்களது களப்பலி என்பது புலிகள் இயக்கம் அதிக கரிசனை காட்டும் ஒரு விடயமாகவுள்ளது.

தமிழர் தரப்பு உயிரிழப்பைக் குறைத்து எதிரிக்கு அதிக சேதத்தை உண்டு பண்ணவேண்டுமாயின் புலிகளின் தரப்பிலிருந்து ஒப்பீட்டளவில் அதிகளவு களவீரம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.

வீரமும் – உயிர் அர்ப்பணிப்பும் புலிகள் இயக்கத்தின் தனிமுத்திரையாக உள்ளன. இந்த வீரத்தினதும் – உயிர் அர்ப்பணிப்பினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை காணப்படுகின்றது.

கரும்புலிப்போர்முறையில் ஒரு திகைப்பூட்டும் இராணுவ அம்சமும் உள்ளது. எதிரிப்படையை நிலைகுலைய வைக்க இந்தத்திகைப்பூட்டல் அவசியமானது. இதனால் சிங்களப்படைமுகாம்கள் மீதான தாக்குதல்களின்போது ஆரம்பக்கட்டமே, புலிகளுக்குச் சாதகமானவகையிலேயே ஆரம்பமாகி – புலிகளின் கைமேலோங்கி தாக்குதல் வெற்றியில் முடிய உதவுகின்றது.

இதேசமயம், இருதரப்பினதும் ஆயுத பலத்தைப் பொறுத்தளவிலும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

ஒரு அரசு என்ற அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நாடுகளிடமிருந்தும் நவீன அழிவாயுதங்களை, பெருந்தொகையில், கொள்வனவு செய்து தமிழருடன் போரிடுகின்றது.

தமிழ்மக்கள் மீதும் – தமிழரின் விடுதலைச்சேனை மீதும் சிங்களப்படையினர் பயன்படுத்தும் நவீன போராயுதங்களுக்கு இணையான பதிலாயுதங்களைப் பெறும் வழிகள் புலிகள் இயக்கத்திற்கு அடைக்கப்பட்டே இருக்கின்றன.

போராயுதங்கள் தொடர்பிலான இத்தகைய பாதக அம்சங்களைச் சீர்செய்து – சிங்களப்படைகளுக்கு நிகராகப் போர்புரியும் இராணுவத்தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு போரில் புதிய வழிகளைக் கைக்கொள்ள புலிகள் இயக்கம் நிர்ப்பந்திக்கப் படுகின்றது.

கரும்புலிப்போர் முறைமூலம் இந்த இராணுவத்தேவையை ஈடுசெய்ய புலிகள் இயக்கம் முயற்சிக்கின்றது.

சிங்களப்படைகளிடம் அதிநவீன போர் விமானங்கள் உண்டு. நீண்டதூர வீச்செல்லை உடைய ஆட்டிலறிகள் உண்டு. டாங்கிகள் – கவச வாகனங்கள் உண்டு. மிதமிஞ்சிய வெடிப்பொருள் சக்தியும் அதனிடம் உண்டு.

அதிகளவு அழிவாற்றல் சக்திகொண்ட எதிரியின் இந்தப் போராயுதங்கள் அழிக்கப்படாமல் அல்லது முடக்கப்படாமல் மரபுப்போரில் புலிகள் இயக்கத்தால் எதையும் சாதிக்கமுடியாது போய்விடும். இதனால். இன அழிப்பு என்ற சிங்கள அரசின் நோக்கத்தையும் அது இலகுவில் அடைந்துவிடும்.

எனவேதான், சிங்களப்படையின் போராயுதங் களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் உயிராயுதமாக கரும்புலிப்போர் முறையை புலிகள் இயக்கம் பயன்படுத்தி வருகின்றது.

இந்தக் கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் வான் தளங்கள் – ஆட்டிலறித்தளங்கள் – கட்டளைப் பீடங்கள் – என்பன அழிக்கப்பட்டு சிங்கள அரசின் இராணுவத்திமிர் உடைக்கப்படுகின்றது.

தமிழரின் இனப்பிணக்கை இராணுவ வழியில் ஒருபோதுமே தீர்க்கமுடியாது என்ற போரியல் பாடத்தை, புலிகள் இயக்கம், இந்தக் கரும்புலிப்போர் முறைமூலமே சிங்கள அரசுக்கு உணர்த்தி வருகின்றது.

சிங்களப்படையுடனான போரில் இராணுவ மேலாண்மைகளை அடைய கரும்புலிப் போர்முறை பெரிதும் உதவி வருகின்றது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

தரைப்போரில் மட்டுமல்ல கடற்சண்டைகளிலும் இதே இராணுவத் தேவைகளுக்காக கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

சிங்களக் கடற்படையின் கடற்போர்க்கலங்களுக்கு இணையாக கடற்கலங்களைப் பயன்படுத்திப் போர் புரியும் வசதிகளும் – வாய்ப்புகளும் புலிகள்இயக்கத்திற்கு தற்போது இல்லை.

புலிகளிடமுள்ள சிறியரக சண்டைப்படகுகளும், சிங்களக்கடற்படையிடமுள்ள சக்திவாய்ந்த கடற்கலங்களும் சண்டையிடுவதென்பது டேவிட்டும் – கோலியாத்தும் சண்டையிடுவது போன்றது. டேவிட் பயன்படுத்தியது போல புதிய வழிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தியே கோலியாத் என்ற கடற்படை அரக்கனை வீழ்த்தமுடியும். இந்தப் புதிய வழியும் – தந்திரமும் கரும்புலிப்போர் முறைமூலம் செயற்படுத்தப்படுகின்றன.

கரும்புலிப்படகுகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சிங்களத்தின் கடற்கலங்களை அழித்தொழிக்கும் நாசகாரிக்கப்பல்கள் போல அவை செயற்படுகின்றன.

கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் போர்த்தளபாடங்கள் பலவற்றை கடற்கலங்கள் – வான்கலங்கள் உட்பட புலிகள் இயக்கம் அழித்திருக்கின்றது.

போர்க்களத்துக்கு வெளியே இருந்தபடி இனக்கொலைப் போருக்கான கட்டளைப் பீடங்களாகச் செயற்படும் சிங்களத்தின் போர்த்தலைமைகளை அழித்து – எதிரிப்படையை நிலைகுலைய வைக்கும் போரியல் செயற்பாடுகளையும் கரும்புலி வீரர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக போரில் இராணுவ பலச்சம நிலையைப் பேணுவதில் புலிகள் இயக்கம் வெற்றிகண்டு வருகின்றது.

அபரிதமான ஆயுதவளத்தையும் – அதிகூடிய ஆள்வளத்தையும் மூலதனமாகக்கொண்டு தமிழருக்கெதிராக இனப்போர் தொடுத்துள்ள சிங்களப்படைக்கு அச்சுறுத்தலாக கரும்புலிப் போர்முறை உள்ளது.

தம்மிடம் இல்லாத போர் ஆயுதமொன்றை புலிகள் வைத்துப் பயன்படுத்துகின்றனர் என்ற அச்சம் சிங்களப்படையிடம் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை எல்லாம் கடந்து சிங்கள அரசின் இராணுவ இலக்குகளை தாக்கியழிக்கும் கரும்புலிகளின் திறன்கண்டு சிங்களப்படைத் தலைமையும் போருக்குத் தலைமை கொடுக்கும் அதன் அரசியற்தலைமைகளும் அஞ்சுகின்றன.

இதனாற்தான் கரும்புலிப்போர் வடிவத்தை புலிகள் இயக்கத்திடமிருந்து களைவதற்கு சிங்கள அரசு முயற்சிக்கின்றது.

இந்தநிலையில் கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது! என்ற கேள்வியும் முக்கியமானது.

கரும்புலிப்போர் முறை தொடர்பான ஒரு தவறான புரிதலை உலகம் வைத்திருக்கின்றது.

தற்கொலைத்தாக்குதல்கள் என்று உலகம் இழிவாக நினைக்கும் சர்வதேச பயங்கரவாதத்துடன் கரும்புலிப்போர் முறையையோ, புலிகள் இயக்கத்தையோ ஒப்பிட்டுக் கருத்துக்கூற முனைவது தவறானது.

தமிழ் – சிங்கள இனப்போரில், தமிழர்பக்கம் இருக்கின்ற ஒரு போரியல் தேவையை ஈடுசெய்ய முனையும் ஒரு தாக்குதல் வடிவத்தை உலகம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘தேவை தான் கண்டுபிடிப்பின் தாய்” என்றொரு புகழ் பூத்த விஞ்ஞான வாக்கியம் உண்டு.

தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குள்ள ஆளணிப் பற்றாக்குறை – ஆயுத வளப்பற்றாக்குறை என்ற பலவீனமான இராணுவ அம்சங்களை ஏதோ ஒரு வகையில் பதிலீடு செய்து விடுதலைப்போரை வழி நடாத்த வேண்டிய கட்டாயத்தேவை புலிகள் இயக்கத்திற்கு உண்டு. இந்தப் போரியல் தேவையே கரும்புலிப்போர் முறை என்ற புதிய கண்டு பிடிப்பிற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

எனவே கரும்புலிப்போர்முறை என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு விஞ்ஞான பூர்வமான போராட்ட வடிவமாகும்.
தன்னை அழித்தபடி எதிரியின் இராணுவ இலக்குகளை அழிக்க முயலும் இப்போர் வடிவத்தை வெறுமனே தற்கொலைத் தாக்குதல் என்று சிறுமைப்படுத்த முடியாது.

தற்கொலை என்பது வாழ்வியல் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க முடியாத கையாலாகாத்தனத்தாலும் – வாழ்க்கை மீதான வெறுப்பினாலும் – விரக்தியினாலும் ஏற்படும் மனநலன் முறிவுகளின் வெளிப்பாடுதான் தற்கொலை.

ஆனால், கரும்புலிகளின் உயிர்ஈகம் என்பது ஒரு போர்க்களத்தியாகமாகும் – விடுதலை உணர்வால் உந்தப்பட்ட புலி வீரர்களின் அதிஉயர் அர்ப்பணிப்பு இது.

எமது மக்களின் அழிவைத்தடுக்கவும் போர்க்கள வெற்றிகளை உறுதிப்படுத்தவுமென திட்டமிட்டுச் செய்யப்படும், ஒரு போர்வடிவத்திற்கான, உயிர்விலை அது.

தமிழரின் நிலத்தை ஆக்கிரமிப்புச்செய்தபடி – தமிழ் மக்களை இனக்கொலை செய்யும் சிங்களப்போர் இயந்திரத்தையே கரும்புலிப் போர்முறை குறிவைக்கின்றது.

எனவே போரியல் ரீதியில் இது நியாயமானது சிங்கள வான்படையின் ‘கிபீர்” வகை மற்றும் ‘மிக்” வகை போர் விமானங்கள் தமிழரின் வான்பரப்பில் அச்சத்தை ஊட்டியபடி பறந்து – 500 கி.கி, 1000 கி.கி நிறையுடைய அழிவுகர குண்டுகளை தமிழரின் குடிமனைக்குள் போட்டு அவலங்களை விதைக்கும் போது அந்தப் போர் விமானங்களை புலிகள் எப்படித் தடுப்பது! அல்லது எப்படி அழிப்பது! இங்கே உயிராயுதத்தின் தவிர்க்க முடியாத இராணுவத் தேவையை உணர முடியும்.

சிங்களத்து வான்கலங்களை கரும்புலிப் போர்முறை மூலம் புலிகள் அழித்தொழிக்கும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுவது எதற்காக! சிங்களப்படைகளின் ஆட்லறிகள் – பீரங்கிப்படகுகளை கரும்புலி வீரர்கள் தம்முடன் சேர்த்துத் தகர்த்தெறியும் போது தமிழ்மக்கள் வெற்றி கொண்டாடுவது எதற்காக!

எதிரி வைத்திருக்கும் பலம் பொருந்திய இத்தகைய கொலை ஆயுதங்கள் கரும்புலி வீரர்களால் அழிக்கப்படுவதென்பது தமிழ்மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஒப்பானது. அதனால்தான் அவை அழிக்கப்படும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர்.
இதே சமயம், தமது போர் விமானங்கள் – போர்க்கப்பல்கள் கரும்புலித் தாக்குதல்களில் அழிக்கப்படும் போது அவற்றைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று உலகிற்குக் கூற சிங்கள அரசு முயல்கின்றது. ஆனால் தனது போர் விமானங்கள் ஆட்லறிகள் – பலகுழல் எறிகணைச் செலுத்திகள் தமிழர் குடிமனைக்குள் நடாத்தும் குண்டுத்தாக்குதல்களை போர் நடவடிக்கை என்று நியாயப்படுத்த முனைகின்றது.

கரும்புலிகள் என்றால் யார்! இவர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் என்ற கேள்விக்கான விடை புதிரானதல்ல.

தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்துக்கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்த போராளிகள், நீண்டநாள் கள அனுபவங்களுக்குப் பின்னர், கரும்புலிகள் அணியில் இணைய விரும்பி தலைமைப்பீடத்திற்கு கடிதம் வரைகின்றனர். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் அவர்கள் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

விடுதலையை விரைவாக்க வேண்டும் – ஒரு போர்வீரன் அல்லது வீராங்கனை என்ற வகையில் அதிகம் சாதித்து போராட்டத்திற்குப் பலம் சேர்க்கவேண்டும் என்ற விருப்பு இவர்களை கரும்புலிகளாக மாற்றிவிடுகின்றது.

விடுதலை உணர்வும் – தேசபக்தியும் – தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையும், விசுவாசமும் கரும்புலிகளுக்கு செயல் வீரத்தை ஊட்டிவிடுகின்றன.

மனித மனச்சாட்சியை உலுக்கும் அந்த அதி உன்னத வீரக்தியாகத்தைப் புரியும் கரும்புலிகளின் அரசியல் இலக்கு தமிழரின் விடுதலைதான்.

அதனால்தான் கரும்புலித்தாக்குதல் நிகழும் போதெல்லாம் அதைக் கேள்வியுற்று, தமிழ்மக்கள், ஓர்மம், பெறுகின்றனர். இலட்சிய உறுதி பெறுகின்றனர்.

எதிரியின் எண்ணிக்கை பலம் கண்டோ அவனது ஆயுதபலம் கண்டோ அஞ்சாமல் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற வீர உணர்வை மக்கள் பெறுகின்றனர்.

இந்த வகையில், தமிழரின் தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்தி வரும் சிந்தனைத்தாக்கம் ஆழமானது.

-விடுதலைப் புலிகள்-

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தீயில் கருகிய தியாகவேந்தர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு

சிறிலங்கா இனவாத அரசாங்கத்தினால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர இன அழிப்புப்போரை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழ்மக்கள் நடத்திய அமைதிப்பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்ங்களைப் பாராமுகமாக அலட்சியப்படுத்திய உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துத் தமிழின விடுதலைக்கு வழிகோருவதற்காகத் தம்முடல்களைத் தீயுடன் சங்கமமாக்கி இன்னுயிர்களை ஈகம் செய்த முத்துக்குமார் தொடக்கம் முருகதாஸ் வரையான தியாகதீபங்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 14.02.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை Rushgrove Avenue, Colindale, London என்னும் முகவரியல் அமைந்துள்ள St. Mathias மண்டபத்தில் நடைபெற்றது.





முத்துக்குமார், ரவி, ராஜா, ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம்,கோகுலகிருஸ்ணன், சீனிவாசன், எழில்வளவன், ஆனந்த், ராசசேகர், பாலசுந்தரம், மாரிமுத்து, சிவானந்தன், சுப்பிரமணி, முருகதாஸ் ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு நினழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. பொதுச்சுடரினை ஜெனிவாவில் தீக்குளித்துத் தன்னுயிரை ஈகம் செய்த ஈகைப்பேரொளி முருகதாஸின் தந்தை திரு. வர்ணகுலசிங்கம் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து திருவுரவப்படத்திற்கு முருகதாஸின் தாயர் திருமதி. வர்ணகுலசிங்கம் மலர்மாலை அணிவித்தனர்.



நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, மலர்வணக்கமும், தீபவணக்கமும் செலுத்தினர். உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்தமூர்த்தி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் பேராசிரியர் தீரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி. வே.சௌந்தரராசன் அவர்களின் கவிதையும், ஈழக்கவிஞர் திரு. பாலரவி அவர்களின் தலைமையில் ஒரு கவியரங்கும், நடனநிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினரின் பேச்சு,கவிதை மற்றும் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன.



இறுதியாகத் தமிழரின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மூன்று முறை எழுச்சியுடன் முழங்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.








"உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை": பேராசிரியர் அடேல் பார்க்கர்

"விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது" என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.


2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை "Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka" என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது.

ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது. போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது" எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது, "உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன. விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை" எனப் பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,

பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.

"மகாவம்சம்" என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள்.

பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள். இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.

Share Your Comment

Adele Parker Visiting Assistant Professor

(Ph.D Brown University)

aparker@holycross.edu

www.holycross.edu

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

விடுதலைக்காய் வித்தானவர்களின் வீரவரலாறு - லெப்.கேணல் பொன்னம்மான்
நாவற்குழியில் எதிரிகளின் பாசறையைத் தேடிச் சென்று பாசறை தகர்ப்பின் முயற்சியில் வித்தான மாவீரர்களின் நினைவினைச் சுமந்து..

விழிகளை நனைத்த வெடியின் ஓசை இன்னும் செவிகளின் சேமிப்பில் ..
விடியலின் வித்தாகிப் போன வீரர்களே.. - உங்கள்
சிரித்த முகங்களை நினைத்து ..
தளராது தொடர்வோம் உம் பயணம்... தமிழீழம் அமைப்போம் உறுதி....

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களான,
  • மேஜர் கேடில்ஸ் ( திலீபன்)

  • கப்டன் வாசு (சுதாகர்)

  • லெப். சித்தாத்தர் (வசீகரன்)

  • 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்)

  • வீரவேங்கை யோகேஸ்(பாலன்)

  • வீரவேங்கை கவர்(நகுலேஸ்வரன்)

  • வீரவேங்கை அக்பர் (லோகநாதன்)

  • வீரவேங்கை குமணன்(மோகனலிங்கம்)

  • வீரவேங்கை தேவன்(வசந்தகுமார்)

ஆகியோரினதும் 23ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.


லெப் கேணல் பொன்னம்மான்
யோகரத்தினம் குகன்
தாயின் மடியில் : 23-12-1956
தாயக மண்ணில் : 14-02-1987
யாழ்ப்பாணம்,தமிழீழம்


தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாகஈ தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது.

இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.

பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.

புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.
பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன்.

மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.


14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன.

முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள்.

பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது.

பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. 'அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

நன்றி எரிமலை