வியாழன், 1 ஜூலை, 2010

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது.

துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி தோன்றும் இடைவெளிக்குள் தோற்றமுற்றான் ஒருவன். ஒரு தலைவன்.

இவன் உலகத் தமிழர்களின் இறைமைக்கும் தற்பெருமைக்குமான குறியீடு. இன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் ஈழத்தமிழர்களின் மகாபுரட்சி சென்றடையவேண்டிய இலக்கையும் அதன் திசையையும் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லமை கொண்ட இவனை யாரும் வாங்கமுடியாது. இவனுக்கு விலையில்லை. தனக்கு இவன் தானிட்ட கட்டளையே தன் மக்களுக்கு இவன் கொடுத்த வாக்குறுதி. அடையவேண்டியதை அடைவதற்குக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுக்கத் தயங்காதவர்களில் இவன் ஒருவன்.

மனிதர்களின் தீர்ப்புகள் எவையாயிருந்தாலென்ன. அவர்கள் வெறும் மனிதர்கள்தானே. தீர்ப்பளிக்கும் உரிமை வரலாற்றுக்குமட்டுமே உண்டு. மனிதர்களுக்குக் கடமைகளேயுண்டு. இயற்கையிடம் பாடம் கேட்டு, வரலாற்றினால் வழிகாட்டப்பட்டவர்களுக்குத் தோல்வி எப்போதும் வந்ததில்லை. அவ்வப்போது புரட்சியின் தொல்நகரான பாரிஸின் சில வீதிகளில்நடக்கும் போது இந்நகரின் ஆத்மா அறைகூவி அழைக்கிறது. அடக்கு முறைக்கெதிராக அணிதிரண்ட மக்களைத் திறம்பட வழிநடத்திய தலைவர்கள் பிறந்த தேசம் இது. மாறா(marat), டோன்தோ(ன்)(danton), காமி தெமூள(ன்) (camille desmoulins), ச(ன்) யுயிஸ்த் (sant just), றொபெஸ்பியர் (robespierre)மக்களுக்காய் மட்டுமே சுவாசித்த இந்த மகான்களின் சுவாசப்பைகளினால்தான் சுத்திகரிக்கப்பட்டது இத்தேசத்தின் நாடிகளில் இன்றும் ஓடும் உதிரம்.

றொபெஸ்பியர். விடுதலையும், மக்களுக்கான ஒரு குடியரசும் என்பதற்காகத்தான் இவன் வாழ்ந்தான். மடிந்தான். இவன் மக்களுக்கான விடுதலையை மட்டுமே சுவாசித்தான். மக்களின் விடுதலைக்காக அறிவியல் ரீதியில் ரூசோ சிந்தித்ததை செயலுருவில் வடிவமைத்த இவன், சுதந்திரப் பிரெஞ்சு தேசத்தின் காரணகர்த்தா.காரணம் இவனை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. இவனை யாரும் கறைபடுத்த முடியவில்லை. தனது கொள்கையில் ஒருதுளியையேனும் இவன் விற்கவில்லை. இவனது உறுதிப்பாடுகளின் ஒரு இம்மியையேனும் யாரும் அசைக்க இவன் அனுமதிக்கவில்லை. வரலாறு உள்ள வரைக்கும் இவனுக்கு ‘மாசற்றோன்' எனும் நாமமே இருக்கும். பிரஞ்சுத் தேச வரலாற்றில் இவனுக்குப் பின் வேறு யாருக்கும் இந்நாமம் சூட்டப்படவில்லை.

விடுதலை பற்றியும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலைபற்றியும் தரவுகளைத் தருபவை இந்நாட்டின் வரலாற்றேடுகள். சமாதானப் போர்வையில், பேசுவோம் எனும் தோரணையில் காலத்தை இழுத்துப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பேரினவாதச் சக்திகளும், மேற்கு நாடுகளின் ‘நாகரீகப் புத்திஜீவிதங்களும்', அண்டை நாட்டின் பிராந்திய வல்லரசுத் திமிருமாகச் சதிசெய்யும் இவ்வேளையில், விழிப்பாயிருந்து, விலைபோகாது, தூர அரசியல் நோக்குடன், ஈழத்தமிழர் போராட்டத்தை இதயத்தில் வரித்த தலைவனுக்கும் ‘மாசற்றோன்' எனும் நாமம் சூட்டப்படட்டும். வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீளப்பெறமுடியாதவை. மனிதர்களில் மகோன்னதமானவர்களின் கனவுகளை நனவாக்குவதைத் தவிர கடமையேதும் இல்லை.

றொபெஸ்பியரிடமிருந்து பெற்ற கனவை நிறைவாக்கக் கனலென உதித்தான் நெப்போலியன் எனும் வீர வேங்கை. வெற்றிமேல் வெற்றிவாகை சூடினான். கண்மூடி முழிக்கும் வேகத்தில் ஐரோப்பாவை அதிர வைத்தான். புயலெனஎழுந்த இவன் வேகத்தில் சருகென மறைந்தனர் எதிர்ப்புரட்சியாளர்களும் அடக்கு முறையாளர்களும். இவனது இராணுவ உத்திகளையும், தூர நோக்கையும், மனத்திடத்தையும், அஞ்சாத நெஞ்சையும், அசைக்கமுடியாத கொள்கை யுறுதியையும், தீர்க்கமான புத்திக்கூர்மையையும் கண்ட பிரஞ்சு தேசம் இவனிடம் தனது கனவைக்கையளித்தது.

சமகாலத்தவர்களின் எந்தத் தீர்ப்புகளுக்கும் இவன் அஞ்ச வில்லை. மாமனிதர்கள் வரலாற்றுக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள். வரலாற்றுக்கு மட்டுமே அவர்களிடம் கணக்குக் கேட்கும் உரிமையுண்டு. மிகுதிகளை அவன் சல சலப்புகளாகவும், இயலாமைகளாகவும், அலறல்களாகவுமே கண்டான். பிரெஞ்சு தேசம் தனது வரலாற்றில் பதின்நான்கு தரம் தனது அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டது. ஆனால் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சிவில் சட்டக் கோர்வையின் அடிப்படையில் கைவைக்கவில்லை. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்வாகக் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுக ளைத் தாண்டி இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றது. பிரெஞ்சுத் தேசியக்கட்டுமானத் தின் அதிசிறந்த இராணுவ மேதையாகவும், அதிசிறந்த அரசியல் ஞானியா கவும் இருந்த ஒரேயொருவன் நெப்போலியன்தான் என்பதை இன்று வரலாறு அறைந்து கூறுகிறது.

இது வரலாறு வழங்கிய தீர்ப்பு. ஈழத்தமிழரின் எதிர்கால வரலாறு வழங்கப்போகும் தீர்ப்பை இன்றே தமிழர்கள் வழங்கிவிட்டார்கள். தமது தேசியக் கட்டுமானத்தின் தலைவன் யாரென்பதை ஈழத்தமிழர்கள் ஐயமின்றி உணர்ந்து கொண்டுவிட்டார்கள். வரலாற்றின் தீர்ப்பிற்காய் காத்திருப்பவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். எகிப்திய அடிமை நுகத்திலிருந்து அறுத்தெடுத்துத் தன் எபிராய மக்களை விடுதலைக்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குமாக அழைத்துச் சென்றான் தீர்க்கதரிசி மோசஸ். கட்டளைகளிட்டான், மீறியவர்க்குத் தண்டனை கொடுத்தான்.

கடக்கவேண்டியிருந்ததோ இரக்கமற்ற பாலைவனம். கடினப்பாதைகள் கண்டு மக்களோ அஞ்சினர். மீண்டும் அடிமைகளாகவே எகிப்துக்குச் சென்று விடுவோமே எனக் கெஞ்சினர். கடைமனிதர்களுக்கும், கண்ணீர் வடிப்பவர்களுக்கும் அரை வழியில் விடைகொடுத்து விட்டுத் தொடரவேண்டியிருந்த பயணமது. யாருக்குச் சுதந்திர பூமி வேண்டும்? அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள்?அடிமை நிலை மறந்த சுயாதீன மக்களை வழி நடத்த வேண்டி மோஸஸ் நாற்பது வருடங்கள் தன் மக்களைக் கொண்டலைந் தான். சினாய் பாலைவனத் தின் கொடூரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள். இரக்க மற்ற பாலைவனப் பாதையில் மக்கள் துன்பத்தீயில் புடம் போடப்பட்டார்கள்.

நாற்பது வருடங்கள் துன்பத் தீயில் புடம்போடப்பட்ட மக்கள் இறுதியில் போராடித் தமக்கு வாக்குறுதியளிக்கப் பட்ட பூமியை அடைந்தார்கள்.

சுதந்திர பூமிக்குச் சுதந்திர மக்களை, அறிவில் மேம்படுத்தி, ஆற்றலில் உன்னதமானவர்களாக்கி, அடிமைத்தளையறுத்து, சமத்துவம் நிறுவி, சாதியழித்து, அழைத்துச் செல்லும் வல்லமைமிக்க தலைவன்!

இக்கனவை நனவாக்கி நீங்கள் காலத்தை வெல்ல வாழ்த்துகிறேன்.

இதுவன்றோ நாமனைவரும் வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்குக் கொடுத்த வாக்குறுதி. இதுவன்றோ நாம் நனவாக்கி அவர்களுக்கு காணிக்கையாச் செலுத்த வேண்டிய கனவுப்பூ.

இடருற்று, அடக்கு முறைக்குப் பலியாகிய ஈழத்தமிழரின் துணிவுச்சுடர் பிறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

நீழ்காலம் ஒங்கியது ஒளிருமென வாழ்த்தி நிற்போம்.

மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்

படைப்பாளி.

பிரான்ஸ்.

வாசுதேவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக