வியாழன், 11 மார்ச், 2010

மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!

[தமிழக நேரம் : March 8th, 2010 at 14:47]




வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

இதுவரைகாலமும் அந்தப் பகுதி மக்களால் புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டுவந்தது. குறிப்பிட்ட நினைவுக்கல்லே வன்னியின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கலாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப்பெற்றமையால்த்தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் சிதைக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்றின் ஊடகர் ஒருவர் ஊடாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் துயிலிடங்களை அழித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து வன்னி மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக