புதன், 27 ஜனவரி, 2010

"தீத் தமிழன்...!"

"தற்கொலை-கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு "

எனக்கு கைப்பேசியில் அடிக்கடி மின்னஞ்சல் பார்க்கும் கெட்ட பழக்கம் இருக்கிறது.29-01-09 அன்று வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்த, நான் யாரோ ஒரு முத்துக்குமார் என்பவர் இவ்வளவு அதிகாலையில் ,காலை 7.40 மணிக்கே மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாரே,அவர் நம் இமெயில் குழுவுக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் அது. அது தான் கடைசி மின்னஞ்சலும் கூட என்று எல்லாம் முடிந்த பிறகுதான்
தெரிந்தது.கலங்கிப்போனேன்..!


அவசரத்தில் அதன் அர்த்தங்களை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் அழித்த மின்னஞ்சலை மீண்டும்,மாலை தோண்டி எடுத்து மீட்டு திரும்பத் திரும்ப படித்த பிறகு தான் எனக்கே புரிந்தது.உயிர்வலியோடு தன் தற்கொலை செய்தியையும் முன்னமே பதிவு செய்து அதையே சிறு சிறு துண்டறிக்கையாக,அதே மின்னஞ்சல் செய்தியை அச்சிட்டு,நுங்கம்பாக்கத்தில் இருக்கிற மத்திய அரசு இயங்குகிற
கட்டிடங்களுக்கு முன்னால், எல்லோரிடமும் அந்த துண்டறிக்கைகளை கொடுத்து விட்டு, தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டான்,என்று.


அவர் மின்னஞ்சலில் வந்த அந்த தற்கொலைச் செய்தீ:


என் உடலை காவல்துறை அடக்கம் செய்து விட முயலும்,விடாதீர்கள்.என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ போஸ்ட்மார்டமோ செய்யப் போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மானவர்களே உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்


அவன் எரிந்து கரிக்கட்டையாக மண்ணில் சாய்ந்த போது நேரம் காலை 10 மணிக்கு மேல் ஆயிருந்தது.


100 விழுக்காடு காயம் என்பதால்,காப்பற்ற முடியவில்லை என்கிறது மருத்துவ அறிக்கை.


"இன்னும் ஒரு மணி நேரந்தான் உயிரோடு இருப்பேன் அதற்குள் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர்களிடம் தெளிவாக,வார்த்தை தடுமாறாமல் பேசியிருக்கிறான்.


"இவ்வளவு புத்திசாலியான நீ சாகத் துணியலாமா? "என்று கேட்டிருக்கிறது காவல்துறை.


என்னைப் போல நிறைய புத்திசாலிகள் இலங்கையில் சாகிறார்களே,அந்த சாவைத் தடுக்கத்தான் இந்த முடிவு என்று மரணம் வாக்கு மூலம் வழங்கிய பிறகு...


உயிர்பிரிந்த நேரம் மதியம் 12.30


முத்துக்குமார் தங்கியிருந்த தன் தங்கை தமிழரசியிடம், முத்துக்குமாரனின் போட்டோ கேட்டு வந்த பிறகுதான் தெரிந்ததாம் தீக்குளித்த செய்தி!


காலை அய்ந்து மணிக்கே எழுந்து வீட்டை விட்டே போய்விட்டதாக முத்துக்குமாரனின் தங்கை கதறுகிறாள்.


அவன் கைப்பேசி எண்ணும் அவன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.


எதையாவது பேசி அவன் சாவைத் தடுத்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது.


எப்படியாவது,எதை செய்தாவது வாழ்ந்து விட வேண்டும் என்று அர்த்தம் இல்லாமல் வாழ்கிற மனிதர்களில்,மற்றவர்களுக்காக வாழ்வது தான் அர்த்தம் உள்ள வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துக்குமாரனின் இழப்பு என்னை கொஞ்சம் அதிகமாவே பாதித்தது.


உயிரோடு இருந்தால், இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் என்னை வாட்டுகிறது.


ராஜீவ்காந்தி கொலையைக் காட்டி விடுதலைப்புலிகளை எதிர்க்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் யாரும் ராஜீவ்காந்தியோடு செத்துப் போகவில்லை ஏன்? என்ற ராஜீவ்காந்தி கொலையை பற்றி விசாரித்த விசாரணை கமிஷன் கேட்ட கேள்விக்கு அந்த காங்கிரஸ் கட்சி, இன்று வரை பதில் சொல்ல வில்லை.


இதையும் முத்துக்குமாரன் தன் இறுதி அறிக்கையில் பதிவு செய்திருக்கிறான்.


தனக்குள்ள எக்கச்சக்கமான சொத்துகள் அரசுடமையாகி விடும் என்ற கேவலமான அச்சத்தில் சுதந்திரபோராட்ட வீரரானவர் பண்டித ஜவஹர்லால் நேரு என்கிறது,சரித்திர உண்மை.


இதே காரணத்திற்காகத்தான்,தமிழ்நாட்டைச் சேர்ந்த மூப்பனரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்கிறது ,சரித்திரம்.


இப்படிப்பட்ட அயோக்கிய ஏமாற்றுப் பரம்பரையில் பிறந்த ராஜீவ் காந்தி மட்டும் எப்படி யோக்கியமானவராக இருக்க முடியும்?.அந்த உத்தம காந்தி மீது நிரூபிக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு, அவர் இறந்த பிறகும் கூட,இன்னும் உயிரோடு இருக்கிறது.


தற்கொலை செய்து கொள்ளாமல்,வேறு ஏதாவது வழியில் அவன் தன் எதிர்ப்பை காட்டியிருக்கலாம் என்று ஒரு கருத்து ஊர்வலமாக வருகிறது...

எதை செய்திருந்தால்,இலங்கையில் அமைதி திரும்பும் என்ற கேள்விக்கு ,இங்கே யாரிடமும் நேர்மையான பதில் இல்லை.


மாலைப் பத்திரிக்கைகளில் எந்த பத்திரிக்கைகளிலும் முத்துக்குமரனின் போட்டோவோடு செய்தி வெளியிடவில்லை.


ஆனால் நம் வலைப் பதிவர்கள்,நிறைய பேர் நிருபர்களாக இருப்பதாலே என்னவோ புகைப்படத்தை தங்களின் வலைத் தளங்களில்,பத்திரிக்கைச் செய்திகளை விட முந்தி, அந்த படங்களை தங்களின் தளங்களில்,உடனே வலையேற்றி இருந்தார்கள்,அந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி, வேகம்...


இது இப்படி இருக்க...


இலங்கைப் போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக,அடுத்த தலைமுறையிலும் தொடரும் வெட்கக் கேடும் இதே பூமி பந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
நமக்கு பக்கத்திலேயே...


பத்திரிக்கைகளில் ,சென்னை பதிப்பு மாலைமுரசு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு முத்துக்குமாரின் செய்திகளை வெளியிட்டு இருந்தது.


விடுதலைப் புலிகளை காட்டி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வாய் திறப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


மனிதர்கள் தான் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்...


பேசத் தெரிந்த மிருகங்களே!...
நீங்கள் கொஞ்சம்
மவுனமாக இருங்கள்.


தமிழ்நாடே இந்த நெருப்புச் செய்தி கேட்டு சுடுகாட்டு அமைதியோடு இருந்த சமயத்தில்...


ஒரு கொடூரமான காமெடி விழாவும் சிறப்பாக நடந்தது.


தன் சொந்த சகோதரன் வளர்ச்சியைக் கூட பார்க்க சகிக்காமல்,தயாநிதி மாறனின் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை சேர்ந்த இரண்டு பேரை ஆட்களை ஏவி கொன்ற,"ஐந்தமிழ் அறிஞர்" (சென்னையில் கலைஞர் கட்சியினரின் சுவரோட்டி வாசகம் ) கலைஞரின் மகன்,இப்படி எதற்கும் அஞ்சாத "அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி" அவர்களுக்கு(கிட்டத்தட்ட அரசு பணியாளராக இருந்தால் ஓய்வு பெறும் வயது)தன் 58 ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தார்.


நானும்,என் அண்ணன் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கலைஞரின் இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் மைக் பிடித்து புளந்து காட்டியிருக்கிறார்.


யாரைக் கொல்ல..?


வாழ வேண்டிய வயதில் ஒரு இளைஞன்,இங்கே ஒரு பொது பிரச்னைக்காக கருகிக் கரிக்கட்டையாக கிடக்கிறான்.


நாட்டுக்காக உழைப்பேன் என்று நா கூசாமல் ஆட்சியைப் பிடித்த கூட்டம் நாடே இழவு வீடாகக் கிடக்கும்போது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கிறது,.


இந்த வக்கிரப்புத்திசாலிகளின் கைப் பிடிக்குள் தான் தமிழ்நாடே இருக்கிறது...


என்னக் கொடுமைங்க ,இது... ?



கண்ணீர் துளிகள்...


மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.
(நன்றி : ஜூனியர் விகடன்)


கவிஞர்,பாடலாசிரியருமான தாமரை,நடிகர் சத்யராஜ்,நடிகர் வடிவேல் போன்றவர்கள் உடலைக் கண்டு கதறியழுதார்கள்.

முத்துக்குமாரின் மரணம் போரில் மாண்ட விடுதலைப்புலிகளுக்குச் சமம்.
-தொல்.திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து விட்டு இறந்திருக்கிறார்.
-இயக்குநர் பாரதிராஜா

விடுதலைப் புலிகள் தான்,இலங்கைத் தமிழர்கள்.இலங்கைத் தமிழர்கள் தான்,விடுதலைப் புலிகள்.இன உணர்வு தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என்று தடை போட யாருக்கும்,எவனுக்கும்,இங்கே உரிமையில்லை.
-இயக்குநர் ஆர்.சுந்தராஜன்.

அவன்
உடலில்
ஏற்றிக் கொண்ட
தீயை
நாம் உள்ளத்தில்
ஏற்றிக் கொள்வோம்..!
-மாலை முரசு,சென்னை பதிப்பு.

நீ இறந்தும் வாழ்கின்றாய்...
நாங்கள்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்...
பிணங்கள்..!


-ச.ராமானுசம்
www.nellairamanujam.blogspot.com

ஜனவரி 31-2009 அன்று ,சென்னை கொளத்தூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம்,ஏழே கால் மணிநேர ஊர்வலத்திற்குப் பிறகு இரவு 10.45 மணிக்கு மூலக் கொத்தளம் வந்தடைந்தது.


இறுதி ஊர்வலத்திற்கு எந்த அரசியல் கட்சியும் கொடிபிடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.




எம்மை மண்ணுக்குள் புதைத்தாய்...

எம் மண்ணை
எங்கே புதைப்பாய்...?

__உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

www.beyouths.co.cc







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக