வெள்ளி, 29 ஜனவரி, 2010

போர்க் கோலம் மாறாது

பாய்ந்து தாக்கும் சிறுத்தையின்
குணம் கொண்டவனே தமிழா
சாய்ந்து மண்ணில் கிடக்க
நாம் என்னடா உக்கிய மாரமா
தேய்ந்து மூலையில் கிடக்க
நாம் என்ன பழைய செருப்பா
மாய்த்து வா பகையை ! எழுந்து
பறை சாற்றி வா வெற்றியை

எந்தமிழ் அன்னை நொந்தவன்
விந்தில் பெற்றவள் இல்லை
செந்தமிழர் நாங்கள் வீரத்தில்
வளர்ந்த வேங்கையின் பிள்ளை
சிந்திய குருதியில் என்றோ ஒருநாள்
ஈழம் மலரும் என்பது நம்பிக்கை
வந்த எம் பகையை வரவேற்று
வென்று நிலைப்பவர் நாம் உண்மை

கேடு கெட்ட ஒரு வாழ்வை
தமிழர் நாம் வாழ்ந்ததில்லை
கூடு விட்டுக் குருவிகள்
ஒருபோதும் அடிமையானதில்லை
பாடுபட்டு பாரம்பரியமாய் மண்ணை
ஆண்டு வந்த மக்களை
வீடு வாசல் இன்றி அடிமையாக்க
இங்கொரு பகைவன் எமக்கில்லை

காலம் கடந்து போனாலும்
பூண்ட போர்க் கோலம் மாறாது
தாளம் தப்பாய் போட்டாலும்
கொண்ட பாட்டின் கருத்துத் தவறாது
ஓலம் இட்டு ஓடி ஒழிந்து
நாம் இனியும் வாழ்ந்திடல் ஆகாது
மாளும் நிலை எமக்கு நேர்ந்தாலும்
ஆளும் தமிழ் அகிலத்தில் தோற்காது

வானம் ஏறி நாம் வலம் வந்து
நாடு காத்து நாம் இருப்போம்
கானம் பாடித் தாயகம் தன்னில்
அன்பினில் கூடி நாம் சிறப்போம்
ஊனம் உற்று உரிமைப் போர் மறந்து
நாதியற்று மண்டியிட்டு மடியோம்
மானம் தமிழரின் வாழ்வெனச் சொல்லி
ஒன்றென எல்லோரும் அணிவகுப்போம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக